ஊடறு—அனைத்துலக பெண்கள் மாநாடு
கீதா இரவிச்சந்திரன் ,சிங்கப்பூர்
உலகளாவிய தமிழ்ப் பெண்கள் எதிர் நோக்கும் சிக்கல்கள், வாழ்வியல் நெருக்கடிகள், ஆகியவற்றின் ஆழ அகலங்களை ஊடுருவி நோக்கி அவற்றைக் குறித்து ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடத்த ஏதுவான தளமாக “ஊடறு’ அனைத்துலகப் பெண்கள் மாநாடு 2005 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. பதினைந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஊடறு 2019ல் சிங்கப்பூரில் முதன்முறையாக நவம்பர் 2 , மற்றும் 3ம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா, இலங்கை, நியுசிலாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 15 பெண் பேராளர்களும், சிங்கப்பூரைச் சேர்ந்த 15 பெண் பேராளர்களும் கலந்து கொண்டனர். இரு நாட்களும் காலை 10.-30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “சிங்கையில் இந்தியப் பெண்கள்”என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
கலை, கல்வி, மேடை, நாடகம், ஊடகம், விளையாட்டு, சமூக சேவை, வரலாறு, சட்டத்துறை, சிறப்புத் தேவைகளை உடைய குழந்தைகளின் வாழ்வியல், சமூக நல்லிணக்கம், தொழில்முனைப்பு, பெண்களின் ஆரோக்கியம் என்று பல்வேறு தலைப்புகளை ஒட்டி சிங்கையின் பெண் பேராளர்கள் கட்டுரைகள் படைத்தனர். மாநாட்டின் இரண்டாம் நாளின் போது,'ஊடறு' றஞ்சியும், புதிய மாதவியும் தொகுத்த 33 பெண்களின் நேர்காணல்கள் அடங்கிய 'சங்கமி-பெண்ணிய உரையாடல்கள்’ எனும் நூல் யுனிவர்செல் நிறுவனத்தின் இயக்குநரான திருமதி ஜீவிதாவால் வெளியிடப்பட்டது.
|