நினைவலைகள்...
நடுவயதிற்கு முன்னே மறைந்த நற்றமிழ்ப்பரிதி -பரிதிமாற் கலைஞர்
மதுரை அருகே விளாச்சேரி எனும் ஊரில் கோவிந்த சிவன், லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக சூலை 6, 1870 ல் இவர் பிறந்தார். வடமொழியை தந்தையாரிடமும், தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார். இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்படப் பல நூல்களை எழுதினார். கலாவதி (1898), ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதித் தாமே கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்த இவர் நவம்பர் 2, 1903 இல் மறைந்தார்.
|