‘குட்டிகளின் கெட்டி’ கவி - அழ.வள்ளியப்பா
“குழந்தைகள் இன்பமே எனது இன்பம். அவர்களுக்குத் தொண்டு செய்வதே என் முக்கியக் குறிக்கோள்” எனக் கூறிய அழ.வள்ளியப்பா நவம்பர் 7, 1922-ல் புதுக்கோட்டை அருகே உள்ள ராயவரத்தில் பிறந்தார். குழந்தை இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர். அவரது ‘மலரும் உள்ளம்’,’சிரிக்கும் பூக்கள்’ போன்ற படைப்புகள் முக்கனி போலச் சுவை மிக்கவை. குழந்தைப் பாடல்களைப் படைப்பதோடு நின்று விடாமல், குழந்தை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் வள்ளியப்பாவுக்கு உண்டு. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்களில் எளிமை, இனிமை, தெளிவு இம் மூன்று பண்புகளும் கொலுவிருக்கக் காணலாம். 'வட்டமான தட்டு' என்ற பாடலில் குழந்தைகளுக்கு வட்டத்தையும், 'எட்டில் பாதி', 'எடுத்தான் மீதம்', 'மொத்தம் எட்டு' என்றாற் போல் வகுத்தல், கழித்தல், கூட்டல் கணக்கு-களையும் சொல்லித் தருவது இப் பாடலின் சிறப்பு. தட்டு, லட்டு, எட்டு, விட்டு, கிட்டு, பட்டு, பிட்டு என்ற ஓசை நயம் வாய்ந்த சொற்கள் இப் பாடலில் அணிவகுத்து வருவதும் சிறப்பு. 1982ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கியது. இது எந்தக் குழந்தை இலக்கியப் படைப்பாளரும் பெறாத தனிப்பெருஞ் சிறப்பு. மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வள்ளியப்பா, 'குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்' என்று வலியுறுத்திப் பேசி முடித்த நிலையில் மயங்கிச் சாய்ந்தார். 1989 மார்ச் 16-ல் கவிஞரின் உயிர் பிரிந்தது!
|