நிரைஇதழ் திறந்து மதுகண்டு அருத்தும் விருந்துகொள் மலரும் புரிந்துறை மணமும் செந்தமிழ்ப் பாடலும் தேக்கிய பொருளும் பாலும் சுவையும் பழமும் இரதமும் உடலும் உயிரும் ஒன்றியது என்ன (5)
கண்டும் தெளிந்தும் கலந்தஉள் உணர்வால் பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய இன்பமர் சொல்லி நண்பும் மனக்குறியும் வாய்மையும் சிறப்பும் நிழல்எனக் கடவார் விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும் (10)
அளகைக்கு இறையும் அரும்பொருள் ஈட்டமும் கண்ணனும் காவலும் முனியும் பசுவும் ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தனபோல் நீடிநின் றுதவும் கற்புடை நிலையினர் தவமகற் றீன்ற நெடுங்கற்பு அன்னை (15)
முன்ஒரு நாளில் முதல்தொழில் இரண்டினர் பன்றியும் பறவையும் நின்றுரு எடுத்து கவையா உளத்துக் காணும் கழலும் கல்வியில் அறிவில் காணும் முடியும் அளவுசென் றெட்டா அளவினர் ஆகி (20)
மண்ணும் உம்பரும் அகழ்ந்தும் பறந்தும் அளவா நோன்மையில் நெடுநாள் வருந்திக் கண்ணினில் காணாது உளத்தினில் புணராது நின்றன கண்டு நெடும்பயன் படைத்த திருஅஞ் செழுத்தும் குறையாது இரட்ட (25)
இருநிலம் உருவிய ஒருதழல் தூணத்து எரிமழு நவ்வி தமருகம் அமைத்த நாற்கரம் நுதல்விழி தீப்புகை கடுக்களம் உலகுபெற் றெடுத்த ஒருதனிச் செல்வி கட்டிய வேணி மட்டலர் கடுக்கை (30)
ஆயிரம் திருமுகத்து அருள்நதி சிறுமதி பகைதவிர் பாம்பும் நகைபெறும் எருக்கமும் ஒன்றிய திருவுரு நின்றுநனி காட்டிப் பேரருள் கொடுத்த கூடலம் பதியோன் பதம்இரண்டு அமைத்த உள்ளக் கதியிரண்டு ஆய ஓர்அன் பினரே. (36)
|