|
||||||||
மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள் |
||||||||
![]() மிகப்பிரமாண்டமாகப் புதுப்பிக்கப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டத்தைக் காணக் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொருவரும் குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிடுகிறார்கள்.
கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிர்வது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞரால் 1974, 1975 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்ட, சென்னை மாநகரின் கலைச்செல்வம் வள்ளுவர் கோட்டம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வள்ளுவர் கோட்டத்தின் முன் நிறுவப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்தநாளின் போது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வாறு செல்லும் போது வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.
அப்போது, பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்தின் தோற்றத்தைப் பார்த்து வருந்தியதோடு ரூ.80 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெறும் என்றும் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன் பயனாக, வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டு எழிற்கோலம் கொண்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பளவில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான “அய்யன் வள்ளுவர் கலையரங்கம்” மேம்படுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு-ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது குறள் மணிமாடம். 100 பேர் அமரும் வசதியுடன் திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
27,000 சதுர அடிப் பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப்பகுதிகளில் 162 வாகனங்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது.
275.56 சதுர அடி பரப்பளவில் 'குறளங்காடி' என்ற திருக்குறள், வள்ளுவர் குறித்த பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அருகே அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை நோக்கிப் பார்வையாளர்கள் தடையின்றிச் செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய வேயா மாடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர்த் தேர் வடிவில் 106 அடி உயரமுடைய திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இசை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
விடுமுறை
தினங்களில் வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிடுவதற்காக ஏராளமானார் குவிந்து வருகிறார்கள்.
|
||||||||
by hemavathi on 29 Jun 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|