திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 7 அடி உயர வெங்கடாசலபதி சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் 5.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வெங்கடாசலபதி சுவாமி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதி போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. கோயிலின் கீழ்பகுதியில் சீனிவாச கல்யாண மண்டபம், அன்னதான கூடம், தியான மண்டபம் போன்றவை கட்டப்பட்டு உள்ளது. கோயிலில், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கருவறையில் 7 அடி உயர வெங்கடாசலபதி சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 3 அடி உயர பத்மாவதி தாயார் சிலை, 3 அடி உயர ஆண்டாள் சிலை மற்றும் 3 அடி உயர கருடபகவான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பகல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
|