|
||||||||
விக்கிரமசோழன் உலா - மூவருலா-2 |
||||||||
பெதும்பை
மழலை தனது கிளிக்களித்து வாய்த்த
குழலி னிசைக்கவர்ந்து கொண்டாள் - நிழல்விரவு 135
முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின்
பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி 136
மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து
விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் - சுடர்நோக்கும் 137
தானுடைய மெய்ந்நுடக்கந் தன்மா தவிக்களித்து
வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் - பூநறும் 138
பாவைகள் பைங்குர வேந்தப் பசுங்கிளியும்
பூவையு மேந்தும் பொலிவினாள் - மேவும் 139
மடநடை யன்னப் பெடைபெறக் கன்னிப்
பிடிநடை பெற்றுப் பெயர்வாள் - சுடர்கனகக் 140
கொத்துக் குயின்ற கொடிப்பவள பந்தத்தின்
முத்துப் பொதியுச்சி முச்சியாள் - எத்திறத்தும் 141
வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல்
மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேரொத்த 142
கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற்
பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள் - பாங்கியரும் 143
கனாக் கூறுதல்
தாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து
பாயல் புடைபெயர்ந்து பையச்சென் - றியாயே 144
தளரு மிடையொதுங்கத் தாழுங் குழைத்தாய்
வளரு மொருகுமரி வல்லி - கிளரும் 145
கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி
எழுந்து கிளைகலிப்ப வேறித் - தொழுந்தகைய 146
கொங்குடைய பொன்னடருஞ் சென்னிக் கொழுங்கோங்கின்
பங்குடைய மூரிப் பணையணைந்து - தங்குடைய 147
வண்டு முரல மணநாற வைகுவது
கண்டு மகிழ்ந்தேன் கனவிலெனக் - கொண்டு 148
வருக வருக மடக்கிள்ளை முத்தம்
தருக தருகவெனத் தாயர் - பெருக 149
விரும்பினர் புல்லி விரைய முலைவந்
தரும்பின வாகத் தணங்கே - பெரும்புயங்கள் 150
புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன்
வல்லி பெறுதி யெனவழுத்தும் -எல்லை 151
அரச னபய னகளங்க னெங்கோன்
புரசை மதவரைமேற் போத - முரசம் 152
தழங்கு மறுகிற் றமரோடு மோடி
முழங்கு முகின்மாட முன்றிற் - கொழுங்கயற்கட் 153
பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு
மின்னென வந்து வௌிப்பட்டு - மன்னருயிர் 154
உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கைச்
செண்டாற் கிரிதிரத்த சேவகனைத் - தண்டாத 155
வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளைச்
சோகங் கெடுத்தணைத்த தோளானை - ஆகத்துக் 156
கொங்கை பிரியாத வீறோடுங் கேகானக
மங்கை பிரியாத மார்பானை - அங்கமலக் 157
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலைத் - தையலும் 158
கண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான்
மண்டு மனமீட்கு மாறறியாள் - பண்டறியாக் 159
காமங் கலக்கக் கலங்கிக் குழல்சரியத்
தாமஞ் சரியத் தனிநின்றாள் - நாமவேற் 160
சேரனு மீனவனுஞ் சேவிப்பச் செம்பியரில்
வீரனு மல்வெல்லை விட்டகன்றான் - மாரனும் 161
தக்குத் தகாதாளை யெய்து தரைப்படுத்தப்
புக்குத் தொடைமடக்கிப் போயினான் - மைக்குழல் 162
மங்கைப் பருவத் தொருத்தி மலர்பொதுளுங்
கங்கைப் புளினக் களியன்னம் - எங்கோனை 163
மன்னனை மன்னர் பிரானை வரோதயனை
தென்னனை வானவனைச் செம்பியனை- முன்னொருநாள் 164
கண்ட பெதும்பைப் பருவத்தே தன்கருத்தாற்
கொண்ட பரிவு கடைக்கூட்ட - புண்டரிகச் 165
செய்ய வடிமுதலாச் செம்பொன் முடியளவும்
மைய லகல மனத்திழைத்துக் - கையினால் 166
தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம்
காட்டுங் கனவு தரக்கண்டு -நாட்டங்கொண் 167
டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்றுத்
தாதொன்றுந் தொங்கற் சயதுங்கன் - வீதி 168
வருகின்றா னென்று மணியணிகள் யாவும்
தருகென்றாள் வாங்கித் தரித்தாள் - விரிகோதை 169
சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே
றாடினா டன்பே ரணியணிந்தாள் - சேடியர் 170
மங்கை தன்னையே ஐயுறுதல்
காட்டும் படிமக் கமலத்துக் கமலத்தை
ஓட்டும் வதனத் தொளிமலர்ந்து - கேட்டு 171
விடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும்
படைபோய் வருவனபோற் பக்கம் - கடைபோய் 172
மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி
எறிக்குங் குழைக்காதிற் கேற்றும் - நெறிக்கும் 173
அளக முதலாக வைம்பாற் படுத்த
வளர்கருங் கூந்தன் மலிந்துங் - கிளர 174
அரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள்
பரியன காம்பிற் பணைத்தும் - தெரியற் 175
சுவடு படுகளபத் தொய்யில்சூழ் கொங்கை
குவடு படவெழுச்சி கொண்டும் - திவடர 176
முந்துங் கலையல்குன் மூரித் தடமகன்றும்
நொந்து மருங்கு னுடங்கியும் - வந்து 177
மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ
அடையுந் தனதுருக்கண் டஞ்சிக் - கொடையனகன் 178
பண்டறியு முன்னைப் பருவத் துருவத்துக்
கண்டறியு மவ்வடிவு காண்கிலேன் - பண்டறியும் 179
முன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி
என்னை யறிகலன்யா னென்செய்கேன் - தன்னை 180
வணங்கி வருவ தறிவ னெனவந்
திணங்கு மகளி ரிடைநின் - றணங்கும் 181
இறைவ னகளங்க னெங்கோன் குமரித்
துறைவ னிருபகுல துங்கன் - முறைமையால் 182
காக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர்
பூக்கு முலகளந்த பொற்கழலும் - நோக்கும் 183
திருக்கொள்ளு மார்பமுந் தெவ்வேந்த ரெல்லாம்
வெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் - உருக்கும் 184
மகரக் குழைக்காது மாதரார் மாமை
நுகரப் புடைபெயரு நோக்கும் - துகிரொளியை 185
வௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும்
செவ்வி யழியாத் திருமுகமும் - எவ்வுருவும் 186
மாறுபடா வண்ணமுந்தன் வண்ணப் படிவத்து
வேறு படுவனப்பு மெய்விரும்பித் -தேறிப் 187
பிறையாம் பருவத்துப் பேருவகை யாம்பல்
நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங் - கிறைவனைக் 188
கண்டு மனமு முயிருங் களிப்பளவிற்
கொண்டு பெயர்ந்து கொல்யானை - பண்டு 189
நனவு கிழியிற் பகற்கண்டு நல்ல
கனவு தரவிரவிற் கண்டு - மனமகிழ்வாள் 190
தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்
நாட்ட முறங்கா மையுநல்க - மீட்டுப் 191
பெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ்ந்
தயர்ந்தா ளவணிலையீ தப்பாற் - சயந்தொலைய 192
மடந்தை
வெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு
வந்து திரண்டனைய வாயினாள் - அந்தமில் 193
ஓலக் கடலேழு மொன்றா யுலகொடுக்கும்
காலக் கடையனைய கட்கடையாள் - ஞாலத்தை 194
வீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள்
கோட்டி யிருக்குங் குவிமுலையாள் - நாட்ட 195
வடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர்
முடிவு லுணர்வை முடிப்பாள் - கடிதோடிப் 196
போகா தொழியா திடையென்று போய்முடியல்
ஆகாமை கைவளரு மல்குலாள் - பாகாய 197
பந்தாடுதல்
சொல்லி யொருமடந்தை தோழியைத் தோள்வருந்தப்
புல்லி நிலாமுற்றம் போயேறி - வல்லிநாம் 198
சேடிய ரொப்ப வகுத்துத் திரள்பந்து
கோடியர் கண்டுவப்பக் கொண்டாடி - ஓடினால் 199
என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான்
தன்மாலை வாங்கித் தருகென்று - மின்னனையான் 200
வட்டித் தளகமுங் கொங்கையும் வார்தயங்கக்
கட்டிக் கனபந்து கைப்பற்றி - ஒட்டிப் 201
பொருதிறத்துச் சேடியர்தம் போர்தொலையத் தானே
இருதிறத்துக் கந்துகமு மேந்திப் - பெரிதும் 202
அழுந்து தரளத் தவைதன்னைச் சூழ
விழுந்து மெழுந்து மிடைய - எழுந்துவரி 203
சிந்த விசிறு திரையி னுரையூடு
வந்த வனச மகளேய்ப்ப - முந்திய 204
செங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென்
றங்காந்து தோள்வளைக ளார்ப்பெடுப்பத் - தங்கள் 205
நுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென்
றடங்குங் கலாப மரற்றத் - தொடங்கி 206
அரிந்த குரலினவா யஞ்சீ றடிக்குப்
பரிந்து சிலம்பு பதைப்ப - விரிந்தெழும் 207
கைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ
மைக்கோல வோதியின்மேல் வண்டிரங்க - அக்கோதை 208
பந்தாடி வென்று பருதி யகளங்கன்
சந்தாடு தோண்மாலை தாவென்று - பைந்துகிற் 209
றானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ்
யானைமேல் வெண்சா மரையிரட்டச் - சேனை 210
மிடையப் பவளமு நித்திலமு மின்ன
அடையப் பணிலங்க ளார்ப்ப - புடைபெயர 211
வார்ந்து மகர வயமீன் குலமுழுதும்
போந்து மறுகு புடைபிறழச் - சேர்ந்து 212
பதலை முழங்கப் பகட்டேற்றி விட்ட
மதலைகண் முன்னர் மலிய - விதலையராய்த் 213
தாழுந் தொழிலிற் கிளைபுரக்கத் தன்னடைந்து
வாழும் பரதர் மருங்கீண்ட - வீழுந்திக் 214
கன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும்
பொன்னியுந் தோயும் புகார்விளங்க - மன்னிய 215
செங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும்
தங்கோ மறுகிற் றலைப்பட்டுத் - தங்களில் 216
ஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும்
கட்டிய மேகலையுங் காவாதே - கிட்டித் 217
தொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள்
அழுதா ளொருதமிய ளானாள் - பழுதிலாக் 218
காக்குந் துகிலு மிலங்கு பொலன்கலையும்
போக்கு நிதம்பம் புனைகென்று - வீக்கும் 219
மணிக்கச்சுந் தம்முடைய வான்றூசுங் கொங்கை
பணிக்கக் கடைக்கண் பாரா - அணிக்கமைந்த 220
குன்றாத நித்திலக் கோவையும் பொன்னிறத்த
பொன்றாத பட்டும் புனைகென்று - நின்று 221
கொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும்
அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் -கடுத்துக் 222
கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றித்
தவரு முதுகிளவித் தாய - ரவரெங்கும் 223
கூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து
பூசினா ராலி பொழிந்தொழிந்தார் - வீசினார் 224
இட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து
சுட்டார் குளரி தொகுத்தெடுத்தார் - விட்டாரோ 225
பள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல்
உள்ள முயிரை யுடன்கொண்டு -வள்ளல்பின் 226
ஓதை மறுகி லுடன்போன போக்காலிப்
பேதை நடுவே பிழைத்தொழிந்தாள் - மாதரில் 227
அரிவை
வாரி படுமமுத மொப்பாண் மதுகரஞ்சூழ்
வேரி கமழ்கோதை வேறொருத்தி - மூரித்தேர்த் 228
தட்டுஞ் சிறுகப் பெருகி மரகதத்தாற்
கட்டுங் கனபொற் கலாபாரம் - பட்டும் 229
துகிலுங் கரப்பச் சுடர்பரப்பக் கைபோய்
அகில்கின்ற வல்கு லரிவை - இகலி 230
ஒருக்கி மருங்குகடிந் தொன்றினைவந் தொன்று
நெருக்கிய மாமை நிரம்பித் - தருக்கி 231
இடங்கொண்டு மின்னுக் கொடியொன் றிரண்டு
குடங்கொண்டு நின்றதெனக் கூறத் - தடங்கொண் 232
டிணைத்துத் ததும்பி யிளையோர்க ணெஞ்சம்
பிணைத்துத் தடமுகட்டிற் பெய்து - பணைத்துப் 233
பெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞாலத்
தருமை படைத்ததனத் தன்னம் - கருமை 234
எறித்துக் கடைபோ யிருபுடையு மெல்லை
குறித்துக் குழையளவுங் கொண்டு -மறித்து 235
மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள்
பதைத்து விழநிறத்திற் பட்டுத் - ததைத்த 236
கழுநீர் மலரின் கவினழித்து மானின்
விழிநீர்மை வாய்த்த விழியாள் - முழுதும் 237
நெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு
செறிந்து பெருமுருகு தேக்கி - நறுந்துணர் 238
வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர்
சோர்ந்து மிசையசைந்த சோலையாய்ச் - சேர்ந்து 239
திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின்
பெருவிருந்து பேணுங் குழலாள் - பொருகளிற்றின் 240
வந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன்
தந்த பெரிய தனிமைக்கண் - செந்தமிழ்க் 241
கோனே கவர்ந்தெம்மைக் கொண்டனன் வந்தெமக்குத்
தானே தரிற்றருக வென்பனபோல் - பூநேர் 242
இணைக்கையுந் தோளு மிடுதொடிக ளேந்தா
துணைக்கண் டுயிற்றத் துயிலா - மணிக்கூந்தல் 243
போது மறந்தும் புனையா பொலங்கச்சு
மீது படத்தரியா வெம்முலைகள் - சோதி 244
அடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல்
கொடுக்குங் தெருணெஞ்சு கொள்ளா - தெடுக்கும் 245
கருப்புச் சிலையனங்கன் கையம்பால் வீழும்
நெருப்புக் குருகி நிறைபோய் - இருப்புழிப் 246
பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி
ஆடிய தோகைக்கு மன்பின்றிக்- கூடிய 247
கிள்ளைக்குந் தம்மிற் கிளரு மிளவன்னப்
பிள்ளைக்குகு மாற்றான் பெயர்ந்துபோய்க் - கொள்ளை 248
பயக்கு மலர்க்குரவப் பந்தர்ப் படப்பை
நயக்கு மிளமரக்கா நண்ணி - வயக்களிற்று 249
மன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால்
அன்னங்கா ணீரென் றழிவுற்றும் - சென்னி 250
பெருகும் புகாரடையப் பெற்றீரான் மற்றைக்
குருகுகா ளென்று குழைந்தும் - கருகிய 251
நீலக் குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டுச்
சோலைப் பயில்வீ ரெனத்துவண்டும் - பீலிய 252
பேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும்
நேரியுஞ் சேர வெனநெகிழ்ந்தும் - நேரியன் 253
தண்டுணர்ப்பே ராரம் பலகாலுந் தைவந்து
வண்டுகாள் வாழ்வீ ரெனமருண்டும் - தொண்டிக்கோன் 254
மன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே
தென்றல் வருவ தெனத்திகைத்தும் - நின்றயர்கால் 255
மன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள்
முன்னர்ப் பணில முழங்குதலும் - மின்னிற்போய் 256
பேணுந் திருமடனு மென்றும் பிரியாத
நாணும் பெருவிருப்பா னல்கூரக் - காணுங்கால் 257
ஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி
வாய்ப்ப முகபங் கயமலர்ந்தாள் - போய்ப்பெருகும் 258
மீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும்
போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் - சோதி 259
குழைய நடுவொடுக்குங் கொங்கையுந் தோளும்
பழைய படியே பணைத்தான் - பிழையாத 260
பொன்னித் துறைவன் பொலந்தார் பெறத்தகுவார்
தன்னிற் பிறரின்மை சாதித்தாள் - சென்னிக்குப் 261
பாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும்
வாரா விருப்பு வருவித்தான் - ஓராங்கு 262
தெரிவை
கோது விரவாக் கொழும்பாகு கொய்தளிரீன்
போது புலராப் பொலங்கொம்பு - மீது 263
முயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற்
புயலா லழுங்காப் புதுமின் - இயல்கொண் 264
டெழுதாத வோவிய மேழிசைய வண்டு
கொழுதாத கற்பகத்தின் கொம்பு - முழுதும் 265
இருளாக் கலாபத் திளந்தோகை யென்றும்
தெருளாக் களியளிக்குந் தேறல் - பொருளால் 266
வருந்தக் கிடையாத மாணிக்கம் யார்க்கும்
அருந்தத் தெவிட்டா வமுதம் - திருந்திய 267
சோலைப் பசுந்தென்ற றூதுவர வந்தி
மாலைப் பொழுதுமணி மண்டபத்து - வேலை 268
விரிந்த நிலாமுன்றில் வீழ்மகரப் பேழ்வாய்
சொரிந்த பனிக்கற்றை தூங்கப் - பரிந்துழையோர் 269
பூசிய சாந்தங் கமழப் பொறிவண்டு
மூசிய மௌவன் முருகுயிர்ப்பத் - தேசிகப் 270
பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும்
சேர வினிதிருந்த செவ்விக்கண் - நேரியும் 271
தசாங்கம்
கோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும்
பாழி யயிரா பதப்பகடும் - ஆழியான் .272
சூடிய வாரமு மாணையுஞ் சோணாடும்
காடு திரைத்தெறியுங் காவிரியும் - பாடுகென 273
கூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து
வேன லரசனுந்தன் வில்லெடுத்தான் - தேனியிர் 274
தந்திரி யாழ்ப்பாணன் றைவந்தான் றைவந்தான்
வெந்திறன் மாரனுந்தன் வில்லினாண் - முந்த 275
நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன்
திறன்மதனு மம்பு தெரிந்தான் - விறலியொடும் 276
பாண னெருபாணி கோத்தான் பலகோத்தான்
தூணி தொலையச் சுளிந்துவேள் - மாண 277
இசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து
விசைத்தன வேனிலான் பாணி - விசைத்தெழுந்த 278
வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ
வாணுதல் வீழா மதிமயங்காச் - சேணுலாம் 279
வாடை யனைய மலயா நிலந்தனையும்
கோடை யிதுவென்றே கூறினான் - நீடிய 280
வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி
நீரை யிதுவோ நெருப்பென்றான் - ஊரெலாம் 281
காக்குந் துடியை யழிக்குங் கணைமாரன்
தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக்கைதொறும் 282
வாழு முலகத் தெவரு மனங்களிப்ப
வீழு நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன் 283
எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற
செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றான் - கங்குல் 284
புலருந் தனையும் புலம்பினா ளாங்குப்
பலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ் 285
ஆழிப் புவன மடைய வுடையபிரான்
சூழிக் கடாயானை தோன்றுதலும் -யாழின் 286
யானையை நோக்கிக் கூறுதல்
இழைக்கு மிசைமுதலா மெப்பகைக்கு மாற்றா
துழைக்கு முயிர்தழைப்ப வோடிப் - பிழைத்னளாய் 287
முட்டுந் திகிரி கிரியின் முதுமுதுகிற்
கட்டுங் கடவுட் கடாயானை - யெட்டும் 288
தரிக்கு முலகந் தனிதரித்த கோனைப்
பரிக்கு மயிரா பதமே - செருக்கிப் 289
பொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி
இருந்த வடவரைக ளெல்லாம் - திருந்தா 290
விதையம் பொருதழிந்த விந்தமே போலப்
புதைய நடந்த பொருப்பே - சிதையாாத 291
திங்கட் குலத்திற்குந் தெய்வப் பொதியிற்கும்
அங்கட் பழங்குமரி யாற்றிற்கும் - தங்கள் 292
படிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ
இடிக்குந் தனியசனி யேறே - கடிப்பமைந்த 293
யாம முரசா லிழந்த நிறைநினது
தாம முரசு தரப்பெற்றேன் - நாம 294
விடைமணி யோசை விளைத்தசெவிப் புண்ணின்
புடைமணி யோசைப் புலர்ந்தேன் - தடைமுலைமேல் 295
ஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில்
மாறாப் பெருங்காற்றான் மாற்றினேன் - வேறாகக் 296
கூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ
வீசு மதத்திவலை யான்மீட்டேன் - மூசிய 297
காருலா மோதக் கடல்முழங்க வந்ததுயர்
நேரிலா நீமுழங்க நீங்கினேன் - பேரிரவில் 298
என்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம்
நின்மே லன்கன்வர நீங்கினேன் - இன்னும் 299
கடைபோல வென்னுயிரைக் காத்தியேல் வண்டு
புடைபோகப் போதும் பொருப்பே - விடைபோய்நீ 300
ராட்டுந் தடங்கலக்கின் மாரற் கயில்வாளி
காட்டுந் தடமே கலக்குவாய் - கேட்டருளாய் 301
கார்நாணு நின்கடத்து வண்டொழியக் காமனார்
போர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் - பார்நாதன் 302
செங்கைக் கரும்பொழியத் தின்கைக் கனங்கனார்
வெங்கைக் கரும்பே விரும்புவாய் - எங்கட் 303
குயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய்
அயிரா பதமேநீ யன்றே - பெயராது 304
நிற்கண்டா யென்றிரந்து நின்றா ணுதலாக
விற்கொண்ட பேரிளம்பெண் வேறொருத்தி - கொற்கையர்கோன் 305
பேரிளம் பெண்
மல்லற் புயத்தினகன் மால்யானைக் கைபோலக்
கொல்லத் திரண்ட குறங்கினாள் - எல்லையில் 306
கோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவேய்ந்
தாடும் படமனைய வல்குலான் - சேடியாய்த் 307
தம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்குக்
கொம்மை முகஞ்சாய்த்த கொங்கையாள் - செம்மை 308
நிறையு மழகா னிகரழித்துச் செய்யாள்
உறையு மலர்பறிப்பா ளொப்பாள்ன் - நறைகமழும் 309
மாலை பலபுனைந்து மான்மதச் சாந்தெழுதி
வேலை தருமுத்த மீதணிந்து - சோலையில் 310
மானு மயிலு மனைய மடந்தையரும்
தானு மழகு தரவிருப்பத் - தேனிமிர் 311
ஊற விளம்பாளை யுச்சிப் படுகடுந்
தேறல் வழிந்திழிந்த செவ்விக்கண் - வேறாக 312
வாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும்
போக்கி யொருத்தி புகழ்ந்துகா - நோக்கி 313
வருந்திச் சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி
அருந்தித் தமர்மே லயர்ந்தாள் - பொருந்தும் 314
மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன்
நயக்கத் தகுங்கனவு நல்கும் - முயக்கத்து 315
மிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும்
ஒக்க விகல வுடனெழுந்து - பக்கத்து 316
வந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில்
தந்த தனதுநிழ றானோக்கிப் - பைந்துகிர்க் 317
காசுசூ ழல்குற் கலையே கலையாகத்
தூசு புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து - வாசஞ்சேர் 318
சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல்
ஆடிய சாந்தி னணிசிதைந்து - கூடிய 319
செவ்வாய் விளர்ப்பக் கருங்கண் சிவப்பூர
வெவ்வா ணுதலும் வெயரரும்ப - இவ்வாறு 320
கண்டு மகிழ்ந்த கனவை நனவாகக்
கொண்டு பலர்க்குங் குலாவுதலும் - வண்டுசூழ் 321
வேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற்
பூரித்த மெய்யுவகை பொய்யாகப் - பாரித்த 322
தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன்
நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் 323
கண்டதுங் கெட்டேன் கனவை நனவாகக்
கொண்டது மம்மதுச்செய் கோலமே - பண்டுலகிற் 324
செய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற்
கெய்த வருமோ விவையென்று - கைதொழுது 325
தேறி யொருகாலுந் தேறாப் பெருமையல்
ஏறி யிரண்டா வதுமயங்கி - மாறிலாத் 326
தோழியர் தோண்மே லயர்ந்தாளத் தோழியரும்
ஏழுயர் யானை யெதிரோடி - ஆழியாய் 327
மாடப் புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும்
கூடற்குங் கோழிக்குங் கோமானே - பாடலர் 328
சாருந் திகிரி தனையுருட்டி யோரேழு
பாரும் புரக்கும் பகலவனே - சோர்வின்றிக் 329
காத்துக் குடையொன்றா லெட்டுத் திசைகவித்த
வேத்துக் குலகிரியின் மேருவே - போர்த்தொழிலால் 330
ஏனைக் கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே - மானப்போர் 331
இம்ப ரெழுபொழில் வட்டத் திகல்வேந்தர்
செம்பொன் மவுலிச் சிகாமணியே - நம்பநின் 332
பாரிற் படுவன பன்மணியு நின்கடல்
நீரிற் படுவன நித்திலமும் - நேரியநின் 333
வெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டுப்
பொற்பின் மலிவன பூந்துகிலும் - நிற்பணியக் 334
கொண்டா யிவடனது கொங்கைக் கொழுஞ்சுணங்கும்
தண்டா நிறையுந் தளிர்நிறமும் - பண்டைத் 335
துயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர்
பயிலுந் திருநூற் படியோ - புயல்வளவ 336
மன்னிய தொண்டை வளநாடு வாளியும்
பொன்னி வளநாடு பூஞ்சிலையும் - கன்னித் 337
திருநாடு தேருங் குறையறுப்பச் செய்தால்
திருநாண் மடமகளிர் தம்மை - ஒருநாளவ் 338
வேனற் கரசன் விடுமே யவன்சினமிப்
பானற்கண் ணல்லா ளுயிர்ப்பரமே - ஆனக்கால் 339
குன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி
ஒன்றே யுலகுக் கொழியுமே - என்றினைய 340
கூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற்
சீறி யனங்கன் சிலைவளைப்ப - மாறழியக் 341
குத்துங் கடாக்களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி
உத்துங்க துங்க னுலா. 342
வெண்பா
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலே - வையம்
அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி
வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான்.
விக்கிரமசோழன் உலா முற்றிற்று.
பெதும்பை |
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|