விஜய் நடித்த கத்தி படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் வெளியான மெளனகுரு படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த படத்தில் ஹீரோயினாக சோனாக்ஷி சின்ஹா நடித்தால் நல்லா இருக்கும் என நினைத்த முருகதாஸ் அதற்காக அவரிடம் கால்சீட் கேட்டு அணுகி உள்ளார். கைவசம் நிறைய படங்கள் இருப்பதால், வேறு நடிகைகளை நடிக்க வையுங்கள் என சொனாக்ஷி கூறியிருந்தாராம்.
ஆனால், சோனாக்ஷியை மனதில் கொண்டு கதை பண்ணிய முருகதாசுக்கு அந்த ரோலில் வேறு நடிகையை நடிக்க வைப்பதில் விருப்பமில்லையாம். அதனால் சோனாக்ஷிக்காக காத்திருக்க முடிவு செய்து விட்டாராம். ஆனால், அந்த படத்தை இயக்குவதற்கு முன்பு தமிழில் ஒரு படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
அந்த படத்தில் முதலில் அஜீத்தை வைத்து முருகதாஸ் இயக்கப்போவதாக செய்தி பரவியது. ஆனால், இப்போது அதுபற்றிய பேச்சு இல்லை. மாறாக, அஜீத் அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது.
இந்த நிலையில், விக்ரமுடன் கைகோர்க்க முடிவு செய்திருக்கிறாராம் முருகதாஸ். தற்போது தனது தயாரிப்பில் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விக்ரமிடம் அவர் ஒரு கதையை சொல்ல, அது அவருக்கும் பிடித்து போக ஓகே சொல்லி விட்டாராம் விக்ரம். விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் - விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|