திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று - வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. (குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.
மணக்குடவர் உரை:
வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று.
இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தது - இன்றியமையாத வினையைச் செய்யாது விட்டவரை உலகம் போற்றாது விட்டது ; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - ஆதலால் , எடுத்துக் கொண்ட நன்முயற்சியில் தொடர்ந்து வினை செய்யா திருத்தலை ஒழிக.
நிறை என்பதன் மறுதலையான குறையென்னுஞ்சொல் , ஒரு பொருள் அல்லது உறுப்பு இல்லாக் குறையை முதலிற் குறித்து , பின்பு அக்குறையால் ஏற்படும் தேவையையும் தேவையான பொருளையும் ஆகுபெயராக வுணர்த்திற்று . 'ஓம்பல்' என்றது நேராவாறு காத்தலை , தீர்ந்தன்று என்பது செய்தன்று என்னும் வாய்பாட்டு வினைமுற்று . செய்தனது - செய்தன்று (ஒருமை) , செய்தன (பன்மை) . உலகு ஆகுபெயர்.
கலைஞர் உரை:
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க
வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.
Translation
In action be thou, 'ware of act's defeat;
The world leaves those who work leave incomplete!.
Explanation
Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work