LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 674 - அமைச்சியல்

Next Kural >

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நினையுங்கால்-ஆராய்ந்து பார்க்குமிடத்து; வினை பகை என்ற இரண்டின் எச்சம்-செய்யத் தொடங்கிய வினை, ஒழிக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டிலும் விட்டு வைத்த குறை; தீ எச்சம் போலத் தெறும்-அவிக்காது விட்டு வைத்த தீயின் குறை போலப் பின் வளர்ந்து தம்மை விட்டுவைத்தவரை அழித்து விடும். பல பெரும் பகைவரை அடக்கியதொடு பொத்திகை(திருப்தி)யடைந்து ஒரு சிறு பகைவனை விட்டுவைப்பது பகை யெச்சமாம். பகையொடு சேர்த்துக் கூறியதாலும், 'தீயெச்சம் போலத்தெறும்' என்றதனாலும், வினை யென்றது கேட்டை நீக்கும் வினையை என்பது அறியப்படும். வெள்ளக் காலத்திற் பெருங் குளக்கரை யுடைப்பையெல்லாம் அடைத்தவர் ஒரு சிறு கசிவை விட்டுவைப்பதும், கொடிய நோய்க்கு மருத்துவம் செய்து கொள்பவன் ஒரு சிறு பகுதியைப் புறக்கணிப்பதும், வினையின் எச்சத்திற்கு எடுத்துக் காட்டாம். இனி இக்குறை என்ன செய்யும் என்றிகழாது முடியச் செய்க என்பதாம். இது வலியனுக்குரிய வினை. இனி, வினையெச்சம் என்பது தோற்றோடிய பகைவனைத் தொடராது விட்டுவிடும் போர்வினையெச்சம் எனலுமாம்.
கலைஞர் உரை:
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
Translation
With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring.
Explanation
When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.
Transliteration
Vinaipakai Endrirantin Echcham Ninaiyungaal Theeyechcham Polath Therum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >