இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை என்ற சிறப்பை பெற்றுள்ளது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் ஆற்றின் கரையில் இருக்கும் ஊர்கள் புனித மானவை. குராயூரில் கமண்டல நதி இம்மாதிரியே ஓடுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் குரா மலர்கள் இப்பகுதியில் முன்பு கிடைத்ததால் குராயூர் என்று அழைக்கப்படுகிறது.
பெருமாளுக்கு சனிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், மாலையில் பூஜையும் நடக்கிறது. திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார தொழில் அபிவிருத்தி, குடும்ப அமைதி அடைவதுடன் தூய்மையான வாழ்க்கை கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. கிராமமக்கள் விவசாய விளைநிலங்களில் கிடைக்கும் விளைபொருட்களை பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
பிறந்து மூன்று மாதமான குழந்தைகள் பிற்காலத்தில் சிறப்பாகப் படிக்க மாவிளக்கு ஏற்றப்படுகிறது. இந்தக் கோயிலைப் புதுப்பித்தால் நாட்டில் சுபிட்சம் உண்டாவதுடன், நமது எண்ணங்களையும் வேணுகோபால சுவாமி நிறைவேற்றுவார் என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியதை தொடர்ந்து, வேணுகோபால சுவாமி கைங்கர்ய சேவா சபா என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. |