|
||||||||
வியாபாரத்தில் நேர்மை |
||||||||
பல்பொருள் அங்காடி வைத்திருந்த ஒருவர் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்குச்செல்ல நினைத்தார் . அப்போதுதான் பள்ளியிலிருந்து வந்த தன் மகனைக் கடையில் உட்கார வைத்தார் . போகும் முன் கடையிலுள்ள சில பொருட்களின் விலையை மேலோட்டமாகச்சொல்லி விட்டுச் சென்றார் . அவர் சென்ற பிறகு கடைக்கு வந்த ஒருவர் ஒரு டஜன் பேனாக்கள் உள்ள ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து இது என்ன விலை என்று கேட்டார் . பையன் , ஐந்து ரூபாய் , என்றான் . வந்தவருக்கோ ஆச்சரியம் . இந்தக் கடையில் இவ்வளவு மலிவாக இருக்கிறதே ஒரு டஜன் 5 ரூபாயா பரவாயில்லை , என்று நினைத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார் . சிறிது நேரத்தில் வீட்டுக்குச்சென்ற கடைக்காரர் திரும்பி வந்தார் . “ ஏதாவது விற்றாயா ” என்று கேட்டார் . உடனே பையன் “ ஆமாப்பா ஐந்து ரூபாய்க்கு பேனாக்கள் உள்ள அட்டைப் பெட்டியை விற்றேன் ” என்றான் . அவருக்குக் கோபம் வந்துவிட்டது . “ ஒரு பேனா ஐந்து ரூபாய் என்று சொன்னேன் . நீ ஒரு டஜன் பேனாக்களை ஐந்து ரூபாய்க்குக் கொடுத்திருக்கிறாயே ” என்று திட்டினார் . பையன் அழத் தொடங்கினான் . அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா , “ அப்படி விற்றதிலும் நமக்கு ஐம்பது பைசா லாபம் இருக்கிறது ” பேராசை கொண்ட வியாபாரிகள் இப்படி நடந்து கொள்வார்கள் . ஆனால் பெருந்தலைவர் கதையோ வேறு . இரவு எட்டு மணி நாட்டாமைக்காரர் ஜவுளிக்கடையில் காமராஜ் தனி ஆளாக இருந்தார் . அப்போது அம்மணி அம்மாள் எனும் கீரை விற்கும்பெண் , மகள் தமயந்திக்குப் பாவாடை தைக்கத் துணி வாங்கினார் . சீட்டித் துணி பூப்போட்டது . ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து மீதிச் சில்லரை வாங்கிக் கொண்டு தெற்கு ரத வீதி நோக்கிச் சென்றார் . திடீரெனப் பின்னால் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டுத் திரும்பிய அம்மணி அம்மாள் காமராசைப்பார்த்ததும் “ ஏன் தம்பி இப்படி ஓடி வந்தே ? ” என்று கேட்டார் . அதற்கு காமராசர் , “ ஓர் அணாவைக் கடையிலே கீழே போட்டுட்டு வந்துட்டீங்க . அதைக்கொடுக்கத்தான் ஓடியாந்தேன் ” என்று கூறி ஓர் அணாவை நீட்டினார் . அம்மணி அம்மாள் வியந்து மகிழ்ந்து “ சங்கலி கருப்பசாமி ! ராசாவுக்கு நீ என்னைக்கும் துணை இருக்கணும் ! ” என்று கைகூப்பி வணங்கினார் . மறுநாள் ஒரு கூடை நிறையக் கொடுக்காப்புளி பழம்கொண்டு வந்து காமராசர் வீட்டில் சேர்த்து விட்ட அம்மணி அம்மாள் நடந்த விஷயத்தையும் , காமராசரின் நேர்மையையும் எடுத்துச்சொன்னார் . பாட்டியும் அன்னையும் பூரிப்புக் கொண்டார்கள் . |
||||||||
by Swathi on 20 Aug 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|