சபரிமலையில் துலாம் மாத பூஜைக்காக திறக்கப்பட்ட நடை அடைக்கப்பட உள்ளதால், பக்தர்களின் அதிக அளவில் குவிந்து உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்ய பெண்களுக்கு அனுமதியளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 17ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஆனால் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பராம்பரிய வழிபாட்டு கொள்கை காக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சபரிமலைக்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு கலவரம் நிலவியது. எனவே சபரிமலை, நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை உத்தரவானது நீடிக்கிறது. துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 6வது நாளாகும் நிலையில், நடை அடைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சபரிமலைக்கு 15 பெண்கள் வர உள்ளதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடைசி நாள் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத சூழல் நிலவுகிறது. எனவே சபரிமலை மற்றும் பம்பையில் உள்ள பத்திரிக்கையாளர்களை வெளியேற உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
|