காய்ச்சலும் சளியும் பரவலாக உருவாகும் சூழல் இது. நவீன மருந்துகள் இல்லாமல் இச்சூழலைக் கடக்க விரும்புவோருக்கான பதிவு இது.
காய்ச்சலுக்கும் சளிக்கும் எந்த மருந்தும் தேவையில்லை என்பது முதல் செய்தி. ஏன் தேவையில்லை என்பதைச் சற்று கவனமாக அறிந்துகொள்ளுங்கள்.
இப்போது மழை பெய்து நிலம் குளிர்ந்து கிடக்கிறது. மழை நின்று, வெயில் அடித்தாக வேண்டும் என்ற தேவை உருவாகியுள்ளது. ஏன் வெயில் தேவை என்றால், வெப்பம் உருவானால்தான், நிலத்தின் குளிர்ச்சி குறைந்து இயல்பான சூழல் ஏற்படும். மிதமான வெப்பம்தான் இந்த நிலப்பகுதியின் இயல்பான பருவநிலை. மிகையாகக் குளிர்ந்த நிலம் தனது இயல்பான மிதவெப்பத்தை இழந்துவிட்டது எனப் பொருள்.
அதிகமான வெப்பம்தான் குளிரைப் போக்கி, நிலத்தின் இயல்புநிலையை மீட்டெடுக்கும். ஆகவே, வெயில் வந்து நிலத்தின் பருவநிலையைச் சீர்செய்கிறது. ’அண்டமும் பிண்டமும் ஒன்றுதான்’ எனும் ஆசான் திருமூலர் வாக்கினை நினைவில் கொள்ளுங்கள்.
மழை மற்றும் குளிர் காலங்களில் உடலின் இயல்பான வெப்பம் குறைகிறது. இந்த நிலையில் உடலில் குறைந்த வெப்பத்தில் பெருகும் நுண்ணுயிரிகள் அதிகரிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் கிருமிகள் என அழைக்கப்படுபவை. பருவநிலை மாற்றத்திற்கேற்ப நுண்ணுயிரிகளின் வகைகளும் எண்ணிக்கையும் மாறிக்கொண்டுதானிருக்கும். நிலத்திலும் இதுதான் நிகழ்கிறது. நிலம் ஈரமாக இருக்கும்போது நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகும். உடலிலும் இதேநிலைதான் உருவாகிறது. வெப்பம் குறைந்த உடலில், பலவகை நுண்ணுயிரிகள் பெருகி வளரும்.
இந்த நுண்ணுயிரிகள் எங்கிருந்து வந்தன எனக் கேட்டால், அவை எல்லாம் உடலின் உள்ளே இருந்தவைதான். வளர்ந்து பெருகுவதற்கான சூழல் இல்லாததால் இதுவரை அவை எல்லாம் உறங்குநிலையில் இருந்தன. சூழல் மாறியதும் அவற்றின் வளர்ச்சியும் பெருக்கமும் அதிகரிகிறது. மேலும் ஒரு சேதி என்னவெனில், இந்த நுண்ணுயிரிகள் யாவும் உடலின் இயக்கத்திற்குத் தேவையற்ற கழிவுகளில்தான் வளரும் தன்மை கொண்டவை. நீண்ட காலமாகத் தேங்கி இருக்கும் மலம், செரிக்காத உணவு, சிறுநீர், சளி போன்ற கழிவுகளில்தான் கிருமிகள் எனப்படும் நுண்ணுயிரிகள் வளரும்.
கழிவுத் தேக்கம் இல்லாதவர்களின் உடலில் எந்தப் பருவநிலை மாற்றமும் காய்ச்சலை, சளியை ஏற்படுத்துவதில்லை. ஆக, உடலின் பருவநிலை குளிர்ந்ததும் உடலின் கழிவுகளில் வளரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு உயர்கிறது. இந்த உயர்வை உடனடியாகக் குறைக்க வேண்டியது உடலின் தேவையாக மாறுகிறது. அவ்வாறு குறைக்காமல் போனால், இந்தக் கழிவு உயிரிகள் மேலும் மேலும் பெருகி உடலின் ஆற்றலைச் சிதைக்கும். விளைவாக, பல உறுப்புகள் செயலிழப்பும் நேரலாம். இந்தத் தேவையின் அடிப்படையில்தான் காய்ச்சல் வருகிறது.
உடலின் கழிவுகளையும் அவற்றில் பெருகி வளரும் நுண்ணுயிரிகளையும் கட்டுப்படுத்தவும் வெளியேற்றவும்தான் காய்ச்சல் வருகிறது. வெப்பநிலையை உயர்த்தி, கழிவு உயிரிகள் வளருவதற்கான சூழலைக் கெடுத்து, அவற்றை வெளியேற்றும் உடலின் செயல்பாடுதான் காய்ச்சல். நிச்சயமாக, காய்ச்சல் என்பது நோய் அல்ல. உடலின் உள்ளே இருக்கும் நோயின் வெளிப்பாடுதான் காய்ச்சல். ஆகவே காய்ச்சலைக் கண்டு அஞ்சாதீர்கள். அது உங்கள் உடலைப் பராமரிக்கவே வந்துள்ளது.
உடலின் கழிவு உயிரிகள் வெளியேற்றுவதற்கு எவ்வளவு வெப்பம் தேவையோ அந்தளவு வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தை அனுமதிக்க வேண்டும். இதுதான் நலமாக வாழ்வதற்கான எளிய வழி. ஆம், காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்க நீங்கள் செய்யும் எந்த நடவடிக்கையும் உடலின் பணியில் குறுக்கிடுவதுதான்.
சிலவகை மாத்திரைகளை விழுங்கியதும் உடல் வியர்க்கிறது என மகிழ்ச்சி அடையாதீர்கள். அது காய்ச்சலுக்கான தீர்வு அல்ல. மாறாக, உடலின் வெப்பத்தைக் குறைத்து கழிவு நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலையை அந்த மாத்திரைகள் உருவாக்கிவிடுகின்றன. இவற்றோடு இணைத்துத் தரப்படும் உயிர்க்கொல்லி மருந்துகளும் (ஆண்டி பயாடிக்) வேறுவகை நுண்ணுயிரிகள்தான். இவை உடலில் பெருகி, உடலின் உள்ளே இருக்கும் உயிரிகளை அழிக்க வேண்டும் என்பது நவீன மருத்துவத்தின் அணுகுமுறை. ஆனால், உயிர்க் கொல்லி மருந்துகளின் வழியாக உடலுக்கு உள்ளே அனுப்பப்படும் நுண்ணுயிரிகள் உடலுக்குப் புதிய சுமைகளாகத்தான் மாறுகின்றன.
இவற்றின் வளர்ச்சியையும், இவற்றின் வருகையால் உடலுக்குள் உருவாகும் நுண்ணுயிர்ப் பெருக்கத்தின் மாற்றங்களையும் கையாள முடியாமல்தான் நவீன சமூகம் தள்ளாடிக் கொண்டுள்ளது.
இதனால்தான், ‘காய்ச்சலுக்கு உடனடியாக ஆண்டிபயாடிக் கொடுக்காதீர்கள்’ என தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் உன்னத செயல்தான் காய்ச்சல். இதில் நாம் தலையிட்டு தவறு செய்யும்போது, அந்த நுண்ணுயிரிகள் உடலில் தங்கி நீண்டகால நோய்களை வரவழைக்கின்றன.
காய்ச்சல் வந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1. காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும்.
2. தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம்.
3. காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.
4. காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். இரசத்தில் புளிக்குப் பதில் தக்காளி சேர்ப்பது நல்லது. இதற்கு பருப்புத் துவையல், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் வகைகள் தொட்டுக்கொள்ளலாம்.
5. காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.
6. காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.
7. மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிக முக்கியம்.
8. நிலவேம்பு போன்ற கசாயங்களைப் பருகும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிலவேம்பு போன்ற மருந்துகளைப் பருகுவது நல்லதல்ல.
இவை தவிர காய்ச்சல், சளி ஆகிய தொல்லைகளின்போது உடலுக்கு உதவி செய்யும் சில உணவு மருந்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவை செம்மை நலமையங்களில் கற்றுத்தரப்படுபவை.
சளி வெளியேற்றத்திற்கு உதவி செய்யும் உணவு மருந்துகள்:
மிளகு கசாயம்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 7 எண்ணிக்கை
இவ்விரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பின்னர் சட்டியில் இவற்றை ஒன்றாகக் கொட்டி, நன்கு தேக்கரண்டிகள் பனை வெல்லத் தூளைத் தூவ வேண்டும். வெல்லத் தூள் பாகுபோல் உருகும். இப்பாகு சட்டியில் ஒட்டாமல் கிளற வேண்டும். பின்னர், ஒன்றரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சுண்டக் காய்ச்சிய பின்னர் அடுப்பை நிறுத்தி விட்டு, இந்த நீரில் பின்வரும் இலைகளைப் போட வேண்டும்:
1. துளசி
2. கற்பூர வல்லி (ஓம வல்லி)
3. வேப்பிலைக் கொழுந்து
இவ்விலைகளைப் போட்ட பின்னர் மூடி வைத்து வெதுவெதுப்பான சூட்டில் பருக வேண்டும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. காய்ச்சிய நீரைப் பருகலாம்.
முறை:
உறங்கச் செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பு பருகலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் பருக வேண்டும்.
தூதுவளை வறுவல்
தூதுவளை இலைகளை (நான்கு அல்லது ஐந்து) நெய்யில் வதக்கி, ஒரு பிடிச் சோறுடன் பிசைந்து உண்ண வேண்டும்.
முறை:
மாலை வேளையில் உண்ண வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் உட்கொள்ள வேண்டும்.
சீரகத் தண்ணீர்
ஒரு சட்டித் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதே சூட்டில், சிறிய தேக்கரண்டி சீரகம், ஏழு மிளகுகள் போட்டு மூடி வைத்து விட வேண்டும். வெதுவெதுப்பான பதத்தில் பருகலாம். ஒவ்வொரு முறை பருகும்போதும் சன்னமாகச் சூடேற்றிக் கொள்வது நல்ல பலன் தரும்.
சூழல் சரியாகும் வரை, வழக்கமான குடிநீருக்குப் பதில் சீரகநீரை மட்டுமே பருகுவது மிகுந்த நற்பலனைத் தருகிறது. செரிமானம் மேம்படவும், சளி வெளியேறவும், மூச்சுச் சிக்கல்களைச் சீர்செய்யவும் சீரக நீர் உதவியாக உள்ளது. காய்ச்சலில் இருப்போர், சீரக நீர் பருக வேண்டாம். வெந்நீரை ஆறவைத்து மட்டுமே பருக வேண்டும். சளித் தொல்லையில் இருப்போரும், காய்ச்சலுக்குப் பின்னும், செரிமானச் சிக்கல் உள்ளோரும் சீரக நீர் பருகலாம்.
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு உங்கள் மற்றும் உங்கள் உற்றார் உடல்நலனை மேம்படுத்திக்கொள்ளுங்கள். உடலின் வெப்பநிலை மாற்றங்களை நோய் எனப் புரிந்துகொண்டு அஞ்சாதீர்கள். மிக முக்கியமாக, காய்ச்சல்களுக்கு வைக்கப்படும் பெயர்களின் மீது அக்கறை காட்டாதீர்கள்.
மருந்தில்லா வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் இலட்சக் கணக்கான மக்கள் காய்ச்சலைக் கண்டு கலங்காமல் வாழ்கிறார்கள். ஒருவகையில், காய்ச்சல் வந்தால் மகிழ்ச்சி அடையும் மனிதர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். உடலின் உள்ளே இருக்கும் கழிவு உயிரிகளை வெளியேற்றும் வெப்பத்தை வரவேற்பதுதானே உண்மையான அறிவியல்!
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |