வீட்டை இடித்த போது கிடைத்த சிலைகள் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் மேலகுட்டி கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவர் அடிவாரம் மேலகுன்னுபட்டி, கீழகுன்னுபட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு ஜோதிடம் மற்றும் சித்த வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு பின் இவரது மகன் சந்தானகிருஷ்ணன் சொந்த ஊரிலிருந்து தர்மபுரிக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்.25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீடு பூட்டியே கிடந்தது. இந்த நிலையில் 2 மாதங்கள் முன்பு துறையூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் அந்த வீட்டை விலைக்கு வாங்கினார்.
வீடு சிதிலமடைந்து இருந்ததால் வீட்டை இடிக்க முடிவு செய்தார். வீட்டை இடித்தபோது வீட்டிற்கு அடியில் இருந்து இரு அடி உயரமுள்ள முழுவதும் கல்லால் செய்யப்பட்ட ராஜா, ராணி போன்ற இரு சிலைகளும், சிறு சிறு ஐம்பொன் சிலைகளும், மரத்தாலான சிலைகளும், செப்பேடுகளும் கிடைத்தன.
2 கற்சிலைகளுக்கும் தலை இல்லை. சிலைகளை துறையூர் தாசில்தார் ரவிசங்கரிடம் ஒப்படைத்தார். தாசில்தார் இதுபற்றி கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். இந்த சிலைகள் அனைத்தும் தொல்லியல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
|