|
|||||
சபரிமலையில் பெண்கள் அனுமதி: ஜனாதிபதியை சந்தித்து எதிர்ப்பு மனு அளிக்கிறார் பந்தளம் அரண்மனை நிர்வாகி! |
|||||
சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி அளித்துள்ளதை கண்டித்து, ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக பந்தளம் அரண்மனையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். சபரிமலையில் இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் பந்தளம் மன்னர் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. மகரவிளக்கு பூஜையின் போது அரண்மனை கைவசம் உள்ள திருவாபரணம் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தொடர்பாக பந்தள மன்னர் குடும்பத்தினர் தரப்பில் இருந்து கருத்துகள் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் பந்தளம் அரண்மனை நிர்வாகி சசிகுமார் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது: யாரையோ திருப்திப்படுத்த இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு கடும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல இந்து அமைப்பினருடன் சேர்ந்து போராட தீர்மானித்துள்ளோம். மேலும் சட்டரீதியாகவும் போராட முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். முதற்கட்டமாக இதுதொடர்பாக விரைவில் ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். ஐயப்பனின் பிரம்மச்சரியத்தையும், ஆச்சார முறைகளையும் மாற்ற யாரையும் அனுமதிக்க மாட்டோம். சபரிமலையில் பாலின பாகுபாடு உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியதை ஏற்க முடியாது. சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு எந்த தடையும் கிடையாது. பெண்கள் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் இளம்பெண்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது. நீதிபதிகளுக்கு இந்த விஷயம் கூட தெரியவில்லை என்றால் இவர்கள் எப்படி நீதி வழங்குவார்கள். சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வரும் விதிமுறைகள் குறித்து வக்கீல்கள் நீதிபதிகளுக்கு தெரிவிக்க முயன்றும், அவர்கள் அதைக் கண்டுக்கொள்ளவில்லை. சபரிமலையில் அனுமதி உத்தரவின்பேரில் மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் கோயில்களுக்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். இந்து கோயில்களில் ஆச்சார விதிமுறைகளை இந்து சமூகம்தான் உருவாக்கியுள்ளது. அதை மாற்ற சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிகாரம் இல்லை. இந்த தீர்ப்பு தொடர்பாக பெண்களிடையே வாக்கெடுப்பு நடத்தினால் 10 சதவீதம் பெண்கள் கூட ஆதரவு அளிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 03 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|