LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

சொல்

1.ஆ (பசு), வீடு, வண்டு - இங்ஙனம் ஓர் எழுத்துத் தனித்தோ, இரண்டு முதலிய எழுத்துக்கள் தொடர்ந்தோ ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் எனப்படும்.


2.(1) ஆ, வீடு, வண்டு - இவற்றுள் ஒவ்வொன்றும் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லாதலால் பெயர்ச் சொல் எனப்படும்.
(2) கண்டான், கண்டு, கண்ட - இவ்வாறு ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.


1. திணை
உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான். எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது.


1.மக்கள், தேவர், நரகர் - உயர்திணை.

2.பிற உயிர் உள்ளனவும் இல்லனவும் - அஃறிணை.

2. பால்
பால் - பிரிவு:


1.கண்ணன், பாண்டியன், பையன் - ஆண்பால்.

2.கண்ணகி, அரசி, பெண் - பெண்பால்.

3.அரசர்கள், மக்கள், பெண்கள் - பலர்பால்.
இம்மூன்று பால்களும் உயர்திணையைச் சேர்ந்தவை.


4.பசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம் - ஒன்றன் பால்.

5.பசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள் - பலவின்பால்.

இவை இரண்டும் அஃறிணைக்கு உரிவை.

3. எண்
எண் - பொருள்களின் எண்ணிக்கை.

ஒன்றைக் குறிப்பது ஒருமை: ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.


1.கந்தன், கற்பகம், மாடு - ஒருமை எண்.

2.பெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை எண்.

3.நான், நீ, அவன், அவள், அது - ஒருமை எண்.

4.நாம், நீர், அவர்கள், அவை - பன்மை எண்.

4. இடம்
நான் நேற்று ஆசிரியரைப் பற்றிச் சொன்னபோது நீ மகிழ்ச்சி அடைந்தாய் - இந்த வாக்கியத்தில்,


1.நான் என்பது பேசுவோனைக் குறிக்கின்றது.

2.நீ என்பது முன்னின்று கேட்பவனைக் குறிக்கின்றது.

3.ஆசிரியரை என்பது பேசப்படுபவரைக் குறிக்கின்றது.

இம்மூவர் இடங்களும் முறையே (1) தன்மை இடம் (2) முன்னிலை இடம் (3) படர்க்கை இடம் என்று பெயர் பெறும்.
(1) நான் - தன்மையிடம்.

(2) நீ - முன்னிலையிடம்.

(3) ஆசிரியர் - படர்க்கையிடம்.


1.நான் - தன்மை ஒருமை.
நாம், நாங்கள் - தன்மைப் பன்மை.

2.நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலைப் பன்மை.

3.அவன், அவள், அது - படர்க்கை ஒருமை.
அவர்கள், அவை - படர்க்கைப் பன்மை.

நான், யான் - தன்மை ஒருமை.
நாம், யாம், நாங்கள் - தன்மை பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலை பன்மை.

தான் - படர்க்கை ஒருமை.
தாம் - படர்க்கை பன்மை.

குறிப்பு:- படர்க்கை ஒருமையாகிய தான் என்பது, புதுச்சேரிப் பகுதிகளில் இன்றும் வழக்கில் இருக்கிறது.


1.நான் சொல்லுவது தனக்குத் தெரியும்.

2.தான் சொன்னதைக் கேட்டீர்களா?

தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்களுக்குப் பதிலாக அவன், அவள், அவர் என வழங்குதலே இன்றுள்ள பெரு வழக்காகும்.

5. வேற்றுமை

1.கண்ணன் - இஃது ஒரு பெயர்ச்சொல். இச்சொல் கண்ணனை (ஐ), கண்ணனால் (ஆல்), கண்ணனுக்கு (கு), கண்ணனில் (இல்), கண்ணனது (அது), கண்ணனிடம் (இடம்), கண்ணா! வருக - எனப் பலவாறு பொருளில் வேறுபட்டு வருதலைக் காணலாம். இவ்வேறுபாடு வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமைகளை உண்டாக்கும் ஐ முதலிய உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படும்.

2.வேற்றுமை எட்டு வகைப்படும்.

1.கண்ணன் வந்தான் - இயல்பான பெயர்; முதல் வேற்றுமை.

2.கண்ணனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு.

3.கண்ணனால் அழைக்கப்பட்டேன் - ஆல்
கண்ணனோடு சென்றேன் - ஓடு
கண்ணனுடன் வந்தேன் - உடன்
மூன்றாம் வேற்றுமை.
ஆல், ஓடு, உடன் - மூன்றாம் வேற்றுமை உருபுகள்.


4.கண்ணனுக்குத் திருமணம் - நான்காம் வேற்றுமை.
கு - நான்காம் வேற்றுமை உருபு.

5.கண்ணனில் கந்தன் பெரியவன் - இல்
கண்ணன் வீட்டினின்று சென்றான் - நின்று
கண்ணன் மரத்திலிருந்து இறங்கினான் - இருந்து
ஐந்தாம் வேற்றுமை உருபு.
இல், நின்று, இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள்.


6.இது கண்ணனது பை - அது
இவை கண்ணனுடைய பைகள் - உடைய - ஆறாம் வேற்றுமை.
அது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள்.


7.பையில் பணம் இருக்கிறது - இல்
கண்ணனிடம் கத்தி இருக்கிறது - இடம்
வீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர் - கண்
இல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள்.


8.பெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும்.

முதல் வேற்றுமை விளி வேற்றுமை
கண்ணன் கண்ணா! -
மகன் மகனே! - ஈற்றில் ஏகாரம் மிக்கது.
மக்கள் மக்காள் - ஈற்றயல் நீண்டது.
முருகன் முருக! -
பிள்ளை பிள்ளாய் ! - ஈற்று `ஐ' - `ஆய்' எனத் திரிந்தது.


6. ஆகு பெயர்

1.மயில் - ஒரு பறவையின் பெயர்.
மயில் வந்தாள் - மயில் போன்ற (சாயலையுடைய) பெண் வந்தாள். இவ்வாறு ஒன்றன் பெயர் அதனோடு தொட்புடைய வேறொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகிவரின், அஃது ஆகுபெயர் எனப்படும்.


2.அவன் சிறப்பை மதுரை பாராட்டுகிறது. இங்கு `மதுரை' என்னும் இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள மக்களுக்கு ஆகி வந்தது. எனவே, `மதுரை', என்பது ஆகு பெயர்.

3.சித்திரை வந்தான் - `சித்திரை' என்னும் மாதத்தின் பெயர் அம்மாதத்தில் பிறந்த ஒருவனுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, `சித்திரை' என்பதும் ஆகுபெயர்.

4.வீட்டிற்கு வெள்ளையடித்தான் - `வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர் அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. எனவே, `வெள்ளை' என்பதும் ஆகுபெயர்.

5.ஒரு `படி' வாங்கினேன் - `படி' என்னும் முகத்தலளவைப் பெயர், அந்த அளவுடைய ஒரு பொருளுக்கு ஆகி வந்தது. எனவே, `படி' என்பதும் ஆகுபெயர்.

7.தொழிற் பெயர்

1.வா, போ, நில், செய் - என்றாற் போல வருபவை வினை செய்ய ஏவப் பயன்படும் சொற்களாகும். இவை வினைச் சொற்கள் எனப்படும். இவை ஏவல் வினைமுற்றுக்கள் என்றும் சொல்லப்படும், இவற்றிலிருந்து,

1.வந்தான், வருகிறான், வருகிறாள், வருவார் எனவும்,

2.வந்து, போய், நின்று, செய்து எனவும்,

3.வந்த, போன, நின்ற, செய்த எனவும்,

4.வருதல், போதல், நிற்றல், செய்தல் எனவும் சொற்கள் பலவாறு வளர்ச்சியடையும்.

இவற்றுள் முதல் மூன்று வகைப்பட்டவையும் வினைச்சொற்களாகும். வருதல், போதல், நிற்றல், செய்தல் என்பன வருதலாகிய தொழில், போதலாகிய தொழில், நிற்றலாகிய தொழில், செய்தலாகிய தொழில் எனத் தொழிலுக்குப் பெயராகி வருதலின் தொழிற் பெயர்கள் எனப்படும்.

2.தொழிற் பெயர் விகுதிகள்:
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, தி, சி, காடு, பாடு, மதி, து, உ, மை முதலியன.


1.செய் + தல் - செய்தல். இவற்றுள் `செய்' என்பது இச்சொல் வளர்ச்சிக்கு உயிர் நாடியாய் முன் நிற்பதால் பகுதி எனப்படும்.

2.`தல்' என்பது சொல்லின் கடைசியில் நிற்பதால் விகுதி, எனப்படும். செய்-பகுதி; தல் தொழிற் பெயர் விகுதி,

3.ஓடுதல், அடல், ஓட்டம், நடத்தை, வருகை, தீர்வை, போக்கு, வாய்ப்பு, மறதி, முயற்சி, சாக்காடு, மெய்ப்பாடு, ஏற்றுமதி, நடந்தது, வரவு, நடந்தமை - இவை தொழிற் பெயர்கள்.

8. வினைமுற்று முதலியன
படித்தான், படித்து, படித்த, - என்பன வினைச்சொற்கள் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? இவற்றில் பொருள் முற்றி (முடிந்து) நிற்கும் வினைச்சொல் எது? படித்தான் என்பதே வினை முற்றி நிற்பது. ஆதலால் படித்தான் என்பது வினைமுற்று எனப்படும். படித்து, படித்த என்பவை முற்றுப் பெறாத வினைச் சொற்கள், இவை (1) படித்து (வந்தான்) என வேறொரு வினைச் சொல்லையும், (2) படித்த (பையன்) என ஒரு பெயர்ச் சொல்லையும் தழுவி நிற்க வேண்டுவனவாக இருக்கின்றன. இவற்றுள் வினையைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் வினையெச்சம் எனப்படும். பெயரைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரெச்சம் எனப்படும்.


1.படித்தான், படிக்கின்றான், படிப்பான் - வினைமுற்று.

2.படித்து, நடந்து, படிக்க (வந்தான்) - வினையெச்சம்.

3.படித்த, படிக்கின்ற, படிக்கும் (பையன்) - பெயரெச்சம்.

மூன்று காலங்கள்

1.
1.கம்பர் இராமாயணம் பாடினார்.

2.பையன் பாடம் படிக்கிறான்.

3.குழந்தை பால் குடிக்கும்.

பாடினார், படிக்கிறான், குடிக்கும் - இவற்றுள் ஒவ்வொன்றும் எந்தக் கால நிகழ்ச்சியை உணர்த்துகின்றது?

1.பாடினார் என்பது செயல் நடந்துவிட்ட (இறந்த) காலத்தையும்.

2.படிக்கிறான் என்பது செயல் இப்பொழுது நிகழ்கின்ற காலத்தையும்,

3.குடிக்கும் என்பது செயல் இனி நடைபெற இருக்கும் எதிர்காலத்தையும் காட்டுகின்றன அல்லவா? இவை மூன்றும் முறையே,

1.இறந்த கால வினைமுற்று

2.நிகழ்கால வினைமுற்று

3.எதிர்கால வினைமுற்று

எனப்படும்.

1.பாடினார் - இறந்தகால வினைமுற்று.

2.படிக்கிறான் - நிகழ்கால வினைமுற்று.

3.குடிக்கும் - எதிர்கால வினைமுற்று.

4.
1.செய்தான் - செய் + த் + ஆன்

2.செய்கிறான் - செய் + கிறு + ஆன்

3.செய்வான் - செய் + வ் + ஆன்

இம்மூன்று சொற்களும் வெவ்வேறு காலங்களை உணர்த்துகின்றன என்பதை நீங்களே உணரலாம். இங்ஙனம் தனித்தனிக் காலத்தை உணர்த்தும் உறுப்பு ஒவ்வொரு சொல்லிலும் எங்கே இருக்கிறது? மூன்றிலும் உள்ள `செய்' என்னும் முதல் உறுப்புப் பகுதி என்பதும், கடைசி உறுப்பு விகுதி என்பதும் உங்களுக்குத் தெரியும். பகுதி தொழிலை உணர்த்துகிறது; விகுதி தொழில் செய்யும் கருத்தாவை உணர்த்துகிறது; இவை இரண்டும் போக ஒவ்வொன்றிலும் எஞ்சியிருக்கும் உறுப்பே ஒவ்வொரு காலத்தை உணர்த்துகின்றது.
ஆதாவது,


1.த் - இறந்த (செயல் நடந்த) காலத்தையும்

2.கிறு - நிகழ் (செயல் நிகழ்கின்ற) காலத்தையும்

3.வ் - எதிர் (செயல் இனி நடைபெறும்) காலத்தையும் உணர்த்துகின்றன. இவை இவ்வாறு சொல்லின் இடையில் நிற்பதால் இடைநிலைகள் என்று பெயர் பெறும்; இவை காலம் காட்டுவதால் காலம் காட்டும் இடைநிலைகள் என்று சொல்லப்படும்.

5.
1.செய்தான் - செய் + த் + ஆன்

2.உண்டான் - உண் + ட் + ஆன்

3.கற்றான் - கல் + ற் + ஆன்

4.விரும்பினான் - விரும்பு + இன் + ஆன்.

இவை நான்கும் இறந்த காலத்தைக் குறிக்கும் வினைச்சொற்கள். ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன அல்லவா? இவை இறந்த கால இடைநிலைகள்.
த், ட், ற், இன் - இறந்த கால இடைநிலைகள்.


6.
1.உண்கிறான் - உண் + கிறு + ஆன்

2.உண்கின்றான் - உண் + கின்று + ஆன்

3.உண்ணாநின்றான் - உண் + ஆநின்று + ஆன்

இவை மூன்றும் நிகழ்காலத்தைக் காட்டுகின்றன ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன. இவை நிகழ்கால இடைநிலைகள்.
கிறு, கின்று, ஆநின்று - நிகழ்கால இடைநிலைகள்.



7.உண்பான் + ப் + ஆன்

1.செய்வான் - செய் + வ் + ஆன்

இவையிரண்டும் எதிர்காலத்தை உணர்த்துகின்றன; ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன இவை எதிர்கால இடைநிலைகள்.
ப், வ் - எதிர்கால இடைநிலைகள்.


8.வினைமுற்றுக்களின் இடைநிலைகள் இருந்து காலம் காட்டுவது போலவே வினையெச்சத்திலும் பெயரெச்சத்திலும் இவ்விடைநிலைகள் நின்று காலம் காட்டும்.

1.உண்டு (வந்தேன்) - உண் + ட் + உ.

2.செய்து - செய் + த் + உ.

3.கற்று - கல் + ற் + உ.

இவை இறந்தகால இடைநிலைகளைக் கொண்ட வினையெச்சங்கள்; ஆதலால் இவை இறந்தகால வினையெச்சங்கள் எனப்படும்.


9.படிக்கிற (பையன்) - படி + கிறு + அ

1.மேய்கின்ற (பசு) - மேய் + கின்று + அ.

இவை நிகழ்கால இடைநிலைகளைக் கொண்ட பெயரெச்சங்கள்; ஆதலால் இவை நிகழ்காலப் பெயரெச்சங்கள் எனப்படும்.

10. வினையாலணையும் பெயர்
1. மதுரை மாரியப்ப சுவாமி பாடினார் - இவ்வாக்கியத்தில் `பாடினார்' என்பது வினைமுற்று.

இவர் பாடிய மறுநாள் தெரு வழியே சென்றார். இவரைக் கண்ட மக்கள், `நேற்றுப் பாடினவர் இதோ போகிறார்' என்றனர். பாடியவரது இயற்பெயர் மாரியப்ப சுவாமி என்பது. ஆனால் மக்கள் அதைச் சொல்லாமல், `பாடினவர்' என்னும் புதிய பெயரை இட்டு வழங்கினர். இப்பெயர் இவரை இவர் செய்த வினையால் அணைந்த பெயராகும். பாடுதலாகிய வினையைச் செய்ததனால் பாடினவர்குத் தாம் செய்த வினையால் அணையும் பெயர், விணையாலணையும் பெயர் எனப்படும்.


வினைமுற்று வினையாலணையும் பெயர்
ஓடினார் ஓடினவர்
பாடுகிறான் பாடுகிறவன்
செய்வான் செய்பவன்
படித்தான் படித்தவன்

இவ்வினையாலணையும் பெயர்கள் செய்பவன், செய்பவனை, செய்பவனால், செய்பவனுக்கு, செய்பவனில், செய்பவனது, செய்பவனிடம், செய்பவனே! என வேற்றுமை உருபுகளை ஏற்றுவரும்.

2. தொழிற் பெயர் வினையாலணையும் பெயர்: வேறுபாடுகள்.


தொழிற் பெயர் வினையாலணையும் பெயர்
வருதல் - தொழிற்பெயர் வந்தவன் - வினையாலணையும் பெயர்
1. தொழிலுக்குப் பெயராய் வரும் 1. தொழிலைச் செய்த பொருளுக்கே பெயராய் வரும்.
2. படர்க்கை இடற்திற்கே உரியது. மூவிடத்திற்கும் உரியது.
3. காலம் காட்டாது. 3. முக்காலத்தையும் காட்டும்.
வந்தானை - இறந்தகாலம்
வருகின்றவனை - நிகழ்காலம்
வருவானை - எதிர்காலம். வினையாலணையும் பெயர் முக்காலமும் காட்டும்.


11. ஐம்பாற் பெயர் விகுதிகள்

1. ஆண்பால் பெயர் விகுதி
(1) குழையன் அன்
(2) குழையான் ஆன்
(3) வடமன் மன்
(4) கோமான் மான்
(5) பிறன் ன்

அன், ஆன், மன், மான், ன் - ஆண்பாற் பெயர் விகுதிகள்.


2. பெண்பால் பெயர் விகுதி
(1) குழையள் அள்
(2) குழையாள் ஆள்
(3) பிறள் ள்
(4) அரசி இ

அள், ஆள், ள், இ - பெண்பால் பெயர் விகுதிகள்.


3. பலர்பால் பெயர் விகுதி
(1) குழையர் அர்
(2) குழையார் ஆர்
(3) குருமார் மார்
(4) குருமார்கள் கள்
(5) பிறர் ர்

அர், ஆர், மார், கள், ர் - பலர்பால் பெயர் விகுதிகள்.


4. ஒன்றன் பால் பெயர் விகுதி
அது து

து - ஒன்றன்பால் பெயர் விகுதி.


5. பலவின்பால் பெயர் விகுதி
(1) நல்லன அ
(2) நல்லவை வை
(3) நாடுகள் கள்

அ, வை, கள் - பலவின்பால் பெயர் விகுதிகள்.


12. ஐம்பால் வினைமுற்றுக்கள்
வினைமுற்று விகுதிகள்


1. ஆண்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தனன் அன்
(2) நடந்தான் ஆன்
2. பெண்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தனள் அள்
(2) நடந்தாள் ஆள்
3. பலர்பால்
வினைமுற்றுக்கள் விகுதி
(1) நடந்தனர் அர்
(2) நடந்தார் ஆர்
(3) செல்லுப ப
(4) பாடன்மார் மார்
4. ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தது து
(2) கூவிற்று று
(3) பொருட்டு (பொருளையுடையது) டு
5. பலவின்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தன அ (உடன்பாடு)
(2) நடவா ஆ (எதிர்மறை)


13. பகுபத உறுப்புகள்

1.செய், நில், உண், எடு - இவற்றுள் ஒவ்வொன்றும் பிரிக்கமுடியாத சொற்கள். எனவே பகாப் பதங்கள் எனப்படும். (பகுத்தல் - பிரித்தல்; பகா - பிரிக்க முடியாத.)

2.செய்தான் = செய் + த் + ஆன்
நின்றான் = நில் + ற் + ஆன்
உண்கிறான் = உண் + கிறு + ஆன்
இவ்வாறு பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்.


3.பகுபதத்தில் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் உறுப்புகள் இருக்கும்.

1.கூனன் = கூன் + அன்
கூன் - பகுதி
அன் - விகுதி


2.செய்தான் = செய் + த் + ஆன்
செய் - பகுதி
த் - இடைநிலை
ஆன் - விகுதி


3.செய்தனன் = செய் + த் + அன் + அன்
செய் - பகுதி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி


4.படித்தனன் = படி + த் + த் + அன் + அன்
படி - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி


5.நடந்தனர் = நட + த் + த் + அன் + அர்
நட - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அர் - விகுதி
(த் - ந் ஆனது - விகாரம்)


4.பெற்றாள் = பெறு + ஆள்
பெற்று + ஆள்
பெற்று - பகுதிஒற்று
ஆள் - விகுதி


இரட்டித்து இறந்தகாலம் காட்டியது.
இவ்வாறு நட்டான், தொட்டான், விட்டார் என்று சொற்களையும் பிரித்துக்கொள்க.


14. முற்றெச்சம்
உண்டான் - வினைமுற்று

உண்டு (வந்தான்) - வினையெச்சம்

உண்ட (பையன்) - பெயரெச்சம்

இவற்றை நீங்கள் அறிவீர்கள். கீழ்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்:

கண்ணன் கண்டனன் வந்தான். இதில் உள்ள ``கண்டனன்'' என்பது வினைமுற்று; ஆனால் இங்கே `கண்டு' என்னும் வினையெச்சப் பொருளில் வந்துள்ளது. `கண்ணன்' கண்டு வந்தான்' என்பது வாக்கியத்தின் பொருள். இவ்வாறு ஒரு வினைமுற்று வினையெச்சப் பொருளில் வருமாயின், அவ்வினைமுற்று அவ்விடத்தில் முற்றெச்சம் (முற்று-எச்சம்) எனப்படும்.

(1) இராமன் குகனைத் தழுவினன் மகிழ்ந்தான்.
(2) வீமன் நகைத்தனன் சீறினான்.
(3) தமயந்தி நளனைத் தேடினள் அலைந்தாள்.

தழுவினன், நகைத்தனன், தேடினள் - முற்றெச்சங்கள்.


15. பால் பகா அஃறினைப் பெயர்
(1) பறவை வந்தது; பறவை வந்தன.

(2) மரம் வளர்ந்தது; மரம் வளர்ந்தன.

(3) குதிரை ஓடினது; குதிரை ஓடின.

இவ்வாறு ஒருமைப்பால், பன்மைப்பால், பகுக்கப்பபடாமல் சில அஃறிணைப் பெயர்ச் சொற்கள் ஒருமை பன்மைப் பால்களுக்குப் பொதுவாக வருதல் உண்டு. இவ்வாறு வரும் ஒவ்வொரு பெயரும் பால் பகா (பகுக்கப்படாத) அஃறிணைப் பெயர் என்று பெயர் பெறும். இது செய்யுளில் மட்டுமே வருதல் பெரு வழக்கு.

ஒன்றன் பாலைக் காட்டுகின்றது என்ற விகுதியையும் பலவின் பாலைக் காட்டுகிற அவைகள் என்னும் விகுதிகளுள் ஒன்றையும் பெறாத அஃறினைப் பெயர்களே ஒன்றன் பால், பலவின் பால் என்னும் இரண்டு பால்களுக்கும் பொதுவாக வரும். இவை முன்னும் பின்னும் வருகின்ற சொற்களைக்கொண்டு பொதுமை நீங்கி இன்ன பால் என்று துணியப்படும்.


1.குதிரை வந்தது - இதில் வந்தது என்பது ஒன்றன் பால் வினைமுற்று. ஆதலால் குதிரை என்பது ஒன்றன்பாற் பெயர்.

2.குதிரை வந்தன - இதில் வந்தன என்பது பலவின் பால் வினைமுற்று. ஆதலால் குதிரை என்பது பலவின்பாற் பெயர்.

16. செய்வினை, செயப்பாட்டு வினை

1.முருகன் வள்ளியை மணந்தான். இவ்வாக்கியத்தில் முருகன் செய்த வினை (செயல்) வள்ளியை மணந்தமை. எனவே மணந்தான் என்பது செய்வினை எனப்படும்.

2.வள்ளி முருகனால் மணக்கப்பட்டாள். இவ்வாக்கியத்தில் மணக்கப்பட்டாள் என்பது முருகனால் செய்யப்பட்ட வினை. ஆதலால் இது செயப்பாட்டுவினை எனப்படும்.

17. ஏவல் - வியங்கோள்
1. ஏவல்

செய், வா, நில், உண் - என ஏவற் பொருளில் வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று எனப்படும்.

செய் - ஒருமை ஏவல்
செய்வீர் - பன்மை ஏவல்

குறிப்பு: வினைப்பகுதியே ஏவல் ஒருமையாக வரும்.

2. வியங்கோள்

செய்க, வருக, நிற்க, உண்க - என ஏவல் வினையோடு `க' சேர்ந்து வரும். இது வியங்கோள் வினைமுற்று எனப்படும். (வியங்கோள் - மரியாதை ஏவல்)

இவ்வியங்கோள் வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் முதலிய பொருள்களில் வரும்.

நீ வாழ்க - வாழ்த்தல்
நீ ஒழிக - வைதல்
நீ தருக - வேண்டல்
நீ செய்க - விதித்தல்

3. ஏவல் - வியங்கோள்: வேறுபாடு


ஏவல் வியங்கோள்
(1) முன்னிலையில் மட்டுமே வரும் (1) மூவிடங்களிலும் வரும்
(2) ஏவலில் ஒருமைபன்மை உண்டு (2) வியங்கோளில் அப்பிரிவு இல்லை
(3) கட்டளைப் பொருளில் மட்டும் வரும் (3) வாழ்த்தல், வைதல் முதலிய நான்கு பொருள்களில் வரும்.
18. வடசொல் திசைச்சொல்
சமஸ்கிருத மொழி பேசிய மக்கள் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்து தங்கிவிட்டனர். அவர்கள் சேர்க்கையால் அவர்கள் பேசிவந்த வடமொழிச் சொற்கள் தமிழில் வழக்காறு பெற்றன. அதன்பின்னரே பல்வேறு திசைகளிலுள்ள நாடுகளில் வழங்கும் பிற மொழிச் சொற்களும் வந்து தமிழில் கலந்தன. வடக்கு ஒரு திசையாக இருப்பினும், பழமை பற்றியும் இலக்கியப் பெருமை பற்றியும் தமிழர் சமஸ்கிருதத்தை வடசொல் என்று தனித்து வழங்கலாயினர்; பிறமொழிச் சொற்களைத் `திசைச்சொல்' என்னும் தலைப்பில் வழங்கலாயினர்.


1.ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ - இவை வடமொழி எழுத்துக்கள்.
ரிஷபம், ரிக்ஷி, விஜயம், லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஹனுமான், ராஜன் - இவை வடமொழிச் சொற்கள்.


2.திசைச் சொற்கள்

1.போர்ச்சுகீஸியர் தமிழ் நாட்டில் தங்கி வாணிகம் செய்தபொழுது தமிழிற் கலந்த போர்ச்சுகீஸியச் சொற்கள் சில. அவை: கிராம்பு, சன்னல், சாவி, அலமாரி, பாதிரி முதலியன.

2.ஜமீன், சிபாரிசு, சிபாய், சுமார், பந்தோபஸ்து, மேஜை, ரஸ்தா முதலியன பாரசீகச் சொற்கள்.

3.அனாமத்து, ஆசாமி, இலாகா, மாமூல், முனிசீப், வசூல் முதலியன அரபு மொழிச் சொற்கள்.

4.அசல், அந்தஸ்து, அல்வா, அம்பாரி, ஆஜர், உஷார், ஜமுக்காளம், தபால், பஞ்சாயத், பங்களா, ருஜு, லட்டு முதலியன இந்துஸ்தானிச் சொற்கள்.

இவ்வாறு பல திசைகளிலிருந்தும் தமிழ்மொழியில் வந்து வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.

19. இடைச்சொல்
ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யா முதலிய வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.

மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகளை, சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும்.


1.
1.அவன்தான் வந்தான் - இங்கு தான் என்பது வற்புறுத்தற் பொருளில் வந்த இடைச்சொல்.

2.அதுதான் வந்தது - இங்கும் தான் என்பது வற்புறுத்தற் பொருளில் வந்த இடைச்சொல்லே.

3.அவர்தாம் வந்தார் - இங்குத் தாம் என்பது வற்புறுத்தற் பொருளில் வந்த இடைச்சொல்.

குறிப்பு: முன்பு தான், தாம், என்பன படர்க்கைப் பெயர்களாக வந்தமையும், இங்கு அவை வற்புறுத்தற் பொருளில் இடைச் சொல்லாக வந்தமையும் கண்டு கொள்க.

2.
1.தான் வந்தான் - படர்க்கைப் பெயர்.
அவன்தான் வந்தான் - இடைச்சொல்.

2.தாம் வந்தார் - படர்க்கைப் பெயர்.
அவர்தாம் வந்தார் - இடைச்சொல்.

3.
1.சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர். இங்கு வந்துள்ள உம், இவ்வறு எண்ணி நிற்றலால் இஃது எண்ணும்மை எனப்படும்.

2.தமிழ்நாட்டு மூவரசரும் வந்தார் - இதில் வரும் `உம்' குறைவில்லாமைப் பொருளைத் தருதலால் இது முற்றுஉம்மை எனப்படும்.

3.குறவரும் ஏற அஞ்சும் மலை... இதில் வந்துள்ள உம்மை, குறவர் வாயிலாகக் குன்றின் உயர்வை விளக்குதலால், இஃது உயர்வு சிறப்பு உம்மை எனப்படும்.

4.நாயும் தின்னாத உணவு - இதில் வந்துள்ள `உம்' நாயின் வாயிலாக உணவின் இழிவை விளக்குதலால் இஃது இழிவு சிறப்பு உம்மை எனப்படும்.

5.கல்வி, செல்வம், ஒழுக்கம், குடிப்பிறப்பும் பெறுவாரும் உளர் - இங்குக் `குடிப்பிறப்பு' என்பதிலுள்ள `உம்' இவற்றுள் சில பெறுவாரும் உளர் என்னும் பொருள்படுமாறு செய்தலால், இஃது எச்ச உம்மை எனப்படும்.

20. உரிச்சொல்
பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகி, அங்ஙனம் உணர்த்தும் பொழுது ஒரு சொல் ஒரு குணத்தை உணர்த்துவனவும் பல குணங்களை உணர்த்துவனவுமாய், பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய், செய்யுளுக்கு உரியனவாய், பொருளுக்கு உரிமை பூண்டு வருவன உரிச் சொற்கள் எனப்படும்.

1. ஒரு பொருள் குறித்த பல சொல்.


1.சாலப் பேசினான்.

2.உறு புகழ்.

3.தவ உயர்ந்தன.

4.நனி தின்றான்.

இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.
2. பல பொருள் குறித்த ஒரு சொல்.


1.கடிமனை - காவல்

2.கடிவாள் - கூர்மை

3.கடிமாலை - மணம்

4.கடிமார்பன் - விளக்கம்

5.கடிப்பேய் - அச்சம்

6.கடிமலர் - சிறப்பு

7.கடிவிடுதும் - விரைவு

8.கடிஉண்டான் - மிகுதி

9.கடி முரசு - ஆர்த்தல்

10.கடிவினை - மன்றல்

11.கடி மிளகு - கரிப்பு

இச்சான்றுகளால் `கடி' என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை முதலிய பல பொருள்களைக் குறித்து வந்தமை காண்க.

by Swathi   on 26 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.