கொழும்பில் நேற்று நடைபெற்ற உலககோப்பை "டி-20" லீக் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ரன் எடுக்க முடியாமல் தடுமாறி தோல்வியுற்றது. கொழும்புவில் நடைபெற்ற "ஏ" பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி ஏகனவே "சூப்பர்-8" சுற்றுக்குள் நுழைந்து விட்டதால், இப்போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்திய அணியில் ஜாகிர் கான், சேவக், அஷ்வினுக்கு பதிலாக டிண்டா, ஹர்பஜன், பியுஷ் சாவ்லா இடம் பெற்றனர். ஹர்பஜன் மற்றும் பியுஷ் சாவ்லாவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தவித்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் துவக்க வீரராக இர்பான் பதான் களமிறங்கினார். டெர்ன்பாக் வீசிய 2வது ஓவரில் காம்பிர் அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசினார். ஸ்டீபன் பந்தில் இர்பான்(8) போல்டானார். இறுதி வரை நிலைத்து ஆடிய ரோகித் சர்மா(33 பந்தில் 55 ரன்கள், 5 பவுண்டரி, 1 சிக்சர்), ரெய்னா(1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 14.4 ஓவரில் 80 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி நான்கு புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடம் பெற்றது. இந்தியா சார்பில் ஹர்பஜன் 4, சாவ்லா 2, இர்பான் 2 விக்கெட் வீழ்த்தினர்.ஆட்டநாயகன் விருதை ஹர்பஜன் தட்டிச் சென்றார்.
|