வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடித்து வரும் படம் என்னை அறிந்தால்.
இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், திரிஷாவும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், அருண் விஜயும், நடிகர் விவேக்கும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் ஏ.எம்.ரத்னம்.
கடந்த புத்தாண்டு அன்று வெளியான படத்தின் பாடல்களும், ட்ரைலரும் இணையதளங்களில் ஹிட் அடித்தன.
என்னை அறிந்தால் தலைப்பு குறித்து கவுதம் மேனன் கூறும் போது, படத்தில் "நீ என்னை அறிந்தால் இப்படி பேச மாட்டாய், நீ என்னை அறிந்தால் இப்படி செய்ய மாட்டாய்" என்பது போல் அஜித்தின் கதாபாத்திரம் இருக்குமாம். அதனால் தான் இந்த தலைப்பை வைத்துள்ளதாகவும், மேலும் திரையில் பார்க்கும் போது இதற்கான முழு விளக்கமும் கிடைக்கும் என கௌதம் மேனன் பட தலைப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த படத்தை கவுதம் மேனன்தான் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, கவுதம் மேனனையும் சேர்த்து இந்த படத்தில் 4 இயக்குனர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். படத்தை இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்தான் என்றாலும், இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர், திரைக்கதையாசிரியர் ஸ்ரீதர் ராகவனுடன் இணைந்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளனர். தியாகராஜன் குமாரராஜா ஆரண்யகாண்டம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கியவர். இந்த 4 இயக்குனர்களின் உழைப்பில் என்னை அறிந்தால் தயாராகியுள்ளது.
என்னை அறிந்தால் படத்தின் கதை இணையதளங்களில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாயின. அந்த தகவல்படி, என்னை அறிந்தால் கதை முழுவதும் அஜித்தை சுற்றியே நடக்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக உள்ள அஜித்தின் காதலி திடீரென கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார், எப்படி அஜித் கண்டுபிடித்தார் என்பதுதான் கதையின் கரு.
கதையின் கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பம் நிறைந்ததாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதம் மேனன் படம் பற்றி கூறும்போது, இப்படத்தில் 25 வயது முதல் 40 வயது வரை ஒரு மனிதனின் ட்ராவல் தான் கதை. அஜித் இப்படத்தில் போலிஸா? இல்லை ரவுடியா? என்பதை 40 நிமிடங்களுக்கு உங்களால் கண்டு பிடிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.
என்னை அறிந்தால் படம் மொத்தம் 2 மணி, 32 நிமிடங்கள் ஓடும் படமாக உருவாகியிருக்கிறதாம்.
என்னை அறிந்தால் திரைப்படம் நேற்று சென்சார் ஆனது. ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் சென்சார் அதிகாரிகள் படம் பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இம்மாதம் 29-ம் தேதி வெளியாகவிருந்த 'என்னை அறிந்தால்' திரைப்படம், பிப்ரவரி 5-ல் தான் ரிலீஸ் ஆகும் என்று ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படங்களான 'லிங்கா' மற்றும் 'ஐ' ஆகிய படங்கள் இரண்டுமே கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழு அளவில் திருப்தி செய்யாத நிலையில் என்னை அறிந்தால் படமாவது ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தி இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக வெளிவர வேண்டும் என்பதே அனைவரின் அவா...
|