இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)
மணக்குடவர் உரை:
வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார்.
இது தெளிவுடையார் செய்யா ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; இலம் என்று வெஃகுதல் செய்யார் - யாம் பொருளிலேம் என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார்.
புலம் வெல்லுதல் தீய வழியில் இன்புறாது மனத்தைத்தடுத்தல். 'புன்மையில் காட்சி' ஐயந்திரிபறப் பொருள்களை யறிதல். அதாவது, பிறர்பொருள் மீது தமக்குரிமையில்லையென்றும், அதைக் கவரின் அது நிலையாதாகையாற் பின்னும் வறுமையுண்டாகுமென்றும் , ஆகவே , அக்கவர்வால் இருமையிலுந் துன்பமன்றி யின்பமில்லை யென்றும் , உணர்தல்.
கலைஞர் உரை:
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப்
பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பேரின்ப ஆசையையும் கடந்த பெரியவர்கள் உண்டு.) ஐம்புல ஆசைகளையும் அடக்கி வென்றுவிட்ட குற்றமற்ற அறிவுடையவர்கள், செல்வம் இல்லையே என்பதற்காகப் பிறருடைய பொருளைக் கவர்ந்துகொள்ள ஆசைப்பட மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஐம்புலன்களையும் வென்று குற்றம் இல்லாத அறிவினையுடைய பெரியோர்கள் "யாம் வறுமை யுற்றோம்" என்று கருதிப் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கமாட்டார்கள்.
Translation
Men who have conquered sense, with sight from sordid vision freed,
Desire not other's goods, e'en in the hour of sorest need.
Explanation
The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute".