திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை
யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ?
இஃது இன்பக்கேடு வருமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இ-ரை) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - இல்லறத்தார்க்கு அன்பாலும் துறவறத்தார்க்கு அருளாலும் முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியையும் மனத்தின்கண் உண்டாகும் மகிழ்ச்சியையும் கெடுத்தெழுகின்ற சினமல்லாது; பிறபகையும் உளவோ - வேறுபகைகளும் உண்டோ? இல்லை.
சினத்தின் நீட்சியே பகையாதலானும் புறப்பகையில்லாத துறவியர்க்கும் சினம் அகப்பகையாய் அமைந்து பிறவித்துன்பத்தைப் பயத்தலானும், சினத்தின் வேறான பகை யில்லையாயிற்று.
கலைஞர் உரை:
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும்
மறைந்து போய் விடும்.
சாலமன் பாப்பையா உரை:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எப்படி யென்றால், கோபம் வந்தவுடனேயே பகை யாளியைக் கண்டு விட்டது போலாகிறோம்) உதட்டிலிருந்த சிரிப்பையும் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சிகளையும் உடனே அழித்துவிடுகிற கோபத்தைவிடப் பகைவன் வேறு உண்டா?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியான நகைப்பினையும் மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியினையும் கொன்றுவிடுகின்ற கோபத்தைவிட வேறு பகையும் உண்டோ?.
Translation
Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?.
Explanation
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.