|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : நீராகாரம் அல்லது நிசிநீர் – 11 |
||||||||
நீராகாரம் அல்லது நிசிநீர்
தமிழர்களின் மிக முக்கியமான உணவினைப் பற்றி இந்த வாரம் பார்க்கப் போகின்றோம். தமிழர்களின் ஒவ்வொரு உணவுமே அமுதத்திற்கு இணையானதுதான். அதிலும் காலை எழுந்தவுடன் பருகும் நிசிநீர் நீராகாரம், சோற்றுநீர், நீத்தண்ணீர், அன்னக் காடி, அன்ன அமுது என்ற வேறு பெயர்களால் அழைக்கப்படும் பானம் உடல் நலம் காக்கும் மிகச்சிறந்த அமுதம்.
இந்த நிசிநீர் பருகும் வழக்கம் பல குடும்பங்களில் வழக்கொழிந்து விட்டது என்ற செய்தி மிகவும் வேதனையானது.
நிசிநீரினைப் பற்றி இந்த இடத்தில் எழுதுவதற்குக் காரணம் நாள் ஒழுக்கம் என்று நாம் பார்த்துக் கொண்டு வரும் ஒழுக்கங்களில் அடுத்து வருவது காலையில் பருகும் பானம் என்பதாகும். இதில் முதன்மையானது நிசிநீர். ஒரு சித்தர் பாடல் “ ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் மூன்றையும் போக்கும் ” எனக் குறிப்பிடுகின்றது.
வளி, அழல், ஐயம் என்கிற உயிர் ஆற்றல்கள் உடலில் கூடியோ குறைந்தோ நோய் ஏற்படுத்துகின்றன என்று பார்த்தோம். உணவுகளாலோ நமது செயல்பாடுகளாலோ இந்த மூன்று உயிரற்றால்களும் மாறுபட்டால் அவற்றை உடனே சீர் செய்து விட்டால் பெரிய நோய் உடலில் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அப்படி ஆரம்பகால மாறுபாடுகள் வளி( வாதம் ) என்கிற காற்றினால் ஏற்பட்டால் அதனைத் தூய ஆற்று நீர் போக்கிவிடும். பித்தம் என்கிற அழலால் ஏற்பட்டால் அதனை அருவி நீர் போக்கிவிடும். ஆனால் சோற்று நீராகிய நீராகாரம் மூன்று உயிராற்றல் மாறுபாடுகளையும் போக்கிவிடும் என்பது சித்தர்களின் ஆய்வுக் கருத்தாகும். முத்தின நாள் உண்ட உணவின் மாறுபாடுகள், செயல் மாறுபாடுகள் இவை உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இரவு உறங்கும் போதும் சிலவிதமான ஆற்றல் மாறுபாடுகள் உடலில் ஏற்படும். இவற்றை காலை ஒழுக்கங்களை நாம் முறையாகப் பின்பற்றுவதன் மூலம் சரிசெய்து விடலாம். அவற்றில் முக்கியமானது நிசிநீர் பருகுதல்.
நிசிநீர் எப்படித் தயாரிக்க வேண்டும் என்று இன்றைய பெண்களுக்குத் தெரிவதில்லை. அதன் பலன்கள் பலருக்குப் புரிவதில்லை. எப்படித் தயாரிக்க வேண்டுமென்று இப்போது பார்க்கலாம்.
நீராகாரம் தயாரிப்பு முறை :-
தமிழர்களின் அடுக்களையில் என்றும் நீங்கா இடம்பெற்று வந்த பானம் நீராகாரம்; இந்த நீராகாரம் தயாரிப்பு முறை அந்தந்த பகுதி மக்களைச் சார்ந்து வேறுபட்டு இருந்தது. அவற்றுள் சில பின்வருமாறு...... தற்போதைய அவசர உலக சமையலறைகளில் Pressure cooker-எ 95 சதவீதம் பயன்படுத்தபடுகின்றது; ஆனால் பன்னேடுங்காலந்த்தொட்டே சோறு கொதிக்க வைத்து வடிக்கும் முறையே பின்பற்றப்பட்டுள்ளது; இந்த வகையில் சமைத்த சோற்றையே நீராகாரம் செய்ய பயன்படுத்த வேண்டும்.
நீராகாரம் செயல்முறை 1 :
அன்று பொங்கிய அரிசிச் சோற்றில் நீர் ஊற்றி வைக்க வேண்டும்; மறுநாள் காலையில் நமக்கு தயாராகிவிடும் நீராகாரம்.
நீராகாரம் செயல்முறை 2 :
அன்று பொங்கிய அரிசிச் சோற்றில் வடித்த கஞ்சியும் நீரும் ஊற்றி வைத்து மறுநாள் பயன்படுத்தலாம்.
நீராகாரம் செயல்முறை 3 :
அன்று பொங்கிய அரிசிச் சோற்றுடன் கொதி கஞ்சியும், வடிகஞ்சியும் ஊற்றி வைத்திருந்து மறுநாள் பயன்படுத்தலாம்.
[குறிப்பு – இங்கே கொதி கஞ்சி என குறிப்பிடபடுவது சோறு முக்கால் பாகம் வெந்த பிறகு உலையிலிருந்து கஞ்சி வெளிப்படும்; அந்த சமயம் கொதிக்கும் கஞ்சியை கரண்டியால் எடுப்பது கொதிகஞ்சி; சித்த மருத்துவத்தில் கொதிகஞ்சி, வடிகஞ்சி, உறைகஞ்சி என மூன்றுக்கும் பலன்கள் வேறுபடும்; இதில் கொதிகஞ்சியும், சோறு வெந்த பிறகு வடிக்கும் வடிகஞ்சியும் சிறந்தது; வடித்த கஞ்சி சிறிது நேரத்தில் உறைந்து கெட்டிப்படும் இது உறைகஞ்சி இது நன்றன்று]
நீராகாரம் செயல்முறை 4: முதல் நாள் செய்த நீராகாரத்தில் தொடர்ந்து தினமும் நாம் கொதிகஞ்சியும் வடிகஞ்சியும் ஊற்றலாம். இவ்வாறு புளிக்கவைக்க அந்த நீராகாரத்தில் புளிப்பும் காரமும் அதிகரித்துகொண்டே வரும். இதை காடி என்று அழைப்பர்; காடி தயாரிக்கும் நாள் அளவை பொருத்து அது மூன்று மாத அன்னக்காடி, ஆறுமாத அன்னக்காடி என அவை அழைக்கப்படும். சாதரணமாக எல்லா வீடுகளிலும் அன்று மூன்றுமாத அன்னக்காடி, ஆறுமாத அன்னக்காடி இருந்து வந்துள்ளது. இந்த காடி நீரையே அவர்கள் புதிதாக சோறு பொங்கவும் நீருக்கு பதிலாக பயன்படுத்தியுள்ளனர். புதிதாக வாங்கிய மண் பானைகளை பழக்கவும் நீராகாரம் அல்லது காடிநீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கம் இன்றளவும் கிராமத்து மக்களிடையே பழக்கத்தில் உள்ளது. புதிதாக சோறு சமைக்க மட்டுமல்ல சித்த மருத்துவத்திற்கே உரிய தனிப்பெரும்சிறப்பான தாதுப் பொருட்களை அதாவது வீரியமிக்க பாடாணங்களை, உப்புகளை (eg:Arsenics) மருந்தாக்கும் ஆற்றல் உண்டு.
இத்தனை வீரியமிக்க நீராகாரம் அல்லது அன்னக்காடி செய்ய நமது பாரம்பரிய அரிசி வகைகளே சிறந்தது; உதாரணமாக கைக்குத்தல் அரிசி, சம்பா வகை அரிசிகள், காரரிசி....... இன்னும் பல. இன்றைய வீரியமில்லா மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் இதற்கு பயன்படாது; உதாரணமாக இட்லி அரிசி, பாசுமதி அரிசி, Half-boiled அரிசி......
நிசிநீரினை காலை எழுந்ததும் பல்தூய்மை, வாய் தூய்மை செய்த பின்பு பயன்படுத்தலாம் அல்லது கழிவு நீக்கத்திற்குப் பின்பு பயன்படுத்தலாம்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் 500 மி.லி முதல் 1500 மி.லி அளவு நீராகரத்தினை காலையில் பருகிவிட்டு சிறிது நேரம் நடை பயிற்சி செய்தல் வேண்டும்.
1. வயிறு குடல் பாதைகளைச் சீர் செய்து உடலிற்கு மிகுந்த பலனைக் கொடுக்கின்றது.
2. இதில் அமினோ அமிலங்களும் (Amino acids), நன்மையுண்டாக்கும் பூஞ்சைகளும் (Yeast) மிகுதியாக கலந்துள்ளன.
3. Aspartic acid, glutamic acid, serine, glycine, threonine, proline, aspargine, methionine, gamma amino – n - butyric acid, glutanine, tyrosine, alanine, valine. Leucine போன்ற முக்கிய அமினோ அமிலங்கள் நிசிநீரில் கலந்துள்ளன. இவை உடலின் மிக முக்கியமான இயக்கங்களுக்கு அடிப்படையாகும். மூளை இயக்கம், இரத்த அணுக்கள் இயக்கம், நோய் எதிர்ப்பாற்றல் போன்றவற்றிற்கு இவை காரணமாகின்றன.
4. உடலிற்கு நன்மையுண்டாக்கும் பூஞ்சைகளால் நீரிழிவுநோயும் இரத்த அழுத்தமும் கட்டுப்படுகின்றது. உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகும். ஒவ்வாமையால் வரும் தோல் நோய்களும், மூச்சுப்பாதை நோய்களும் தடுக்கப்படும். நாட்பட்ட குடல் தொடர்பான நோய்கள் தீரும்.
தொடர்ச்சியாக நீராகாரத்தைப் பருகி வந்தால்:
1. இளமை பாதுகாக்கப்படும். 2. தோல், முகச் சுருக்கம் நீங்கும். 3. உடல் உறுப்புகள் இயக்கம் சீராகும். 4. மலச்சிக்கல் நீங்கும். 5. உடல் பருமன் குறைந்து கட்டுடல் ஏற்படும். 6. மன அழுத்தம் நீங்கி புத்திக் கூர்மை உண்டாகும்.
ஞாபக மறதி நீங்கும். இவற்றை தொடர்ச்சியாக ஞாபகமறதி நோய் உள்ளவர்களுக்குக் (Alzheimer’s disease ) கொடுத்து வந்தால் நன்மையுண்டாகும். சில விதமான நரம்பு வேதிப் பொருட்களின் ஆற்றல் நிசிநீரினால் மேம்படுவாதால் அவர்களின் நினைவாற்றல் கூடும்.
நீரிழிவு (Diabetes mellitus ) நோயர்களும் இதனைப் பருகலாம். நிசிநீரில் உள்ள உட்பொருட்கள் உடல் இயங்கியலில் மிகமுக்கியப் பங்காற்றுவதால் நீரிழிவு நோயினால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும். முக்கியமாக இன்சுலின் உற்பத்தியினை அதிகப்படுத்தி சர்க்கரையின் பயன்பாட்டினை முறைப்படுத்துவதற்கு நிசிநீரின் உட்பொருட்கள் பயன்படுகின்றன.
உடலின் எதிர்ப்பற்றலை மேம்படுத்தி நோய்களை விரைவில் நீக்கும் ஆற்றலைக் கொடுக்கின்றது. உதாரணமாக எலும்பு முறிந்தநிலை, காயம்பட்ட நிலை, நீண்ட நாட்கள் நோயுடன் இருந்த சோர்வு ஏற்பட்ட நிலை போன்றவற்றில் நிசிநீர் மிகுந்த நன்மையினை உண்டாக்கும்.
இது போன்ற ஏராளமான நன்மைகளைக் கொண்ட நிசிநீரை சித்தர்கள் அமுது (அமிர்தம்) என அழைத்தது சரிதானே?
நலப் பயணம் தொடரும்............... |
||||||||
by Swathi on 24 Nov 2014 1 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam சித்த மருத்துவம் நிசிநீர் நீராகாரம் சோற்றுநீர் நீத்தண்ணீர் அன்னக் காடி அன்ன அமுது | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|