|
|||||
ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகைப் பறவைகள் பதிவு. |
|||||
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட குளங்களில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கிய போது, அரிய வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட, உடுமலை அருகேயுள்ள மருள் பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்ன வீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், உப்பாறு அணை உள்ளிட்ட, 20 நீர் நிலைகளில், ஒருங்கிணைந்த ஈர நிலப் பறவைகள், இரு நாட்கள் கணக்கெடுப்பு துவங்கியது.
வனத்துறையினர், திருப்பூர் இயற்கை கழகம் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று, கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி, தரவு புத்தகம் ஆகியவற்றை வழங்கப்பட்டு, குளங்கள் மற்றும் கரையிலுள்ள புதர்களில் வசிக்கும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது.
உடுமலை வனச்சரகர் சிவக்குமார், உயிரியலாளர் மகேஷ்குமார், தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகிகள் ரவிக்குமார், கார்த்திகேயன் மற்றும் வனத்துறை குழுவினரால், செங்குளம், பெரிய குளம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலுள்ள குளங்களில் கணக்கெடுப்பு நடந்தது.
இதில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள், நீர்நிலைகளின் அருகிலுள்ள உள்ள புதர்களில் வசிக்கும் அரிய வகைப் பறவைகள், வண்ணங்களில் அழகாகவும், சிறப்பு மிகுந்த குணாதிசயங்களைக் கொண்ட பறவைகள் நேரில் பார்க்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.
வனத்துறையினர் கூறியதாவது, "ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பும், உள்நாடு மற்றும் வெளி நாட்டுப் பறவைகள், வசிப்பதற்கான இயற்கைச் சூழல் மற்றும் மீன், பூச்சி இனங்கள் என வளமான பகுதியாக உள்ளது.
இதனால், அரிய வகைப் பறவை இனங்கள் ஏராளமாக வசித்து வருகின்றன. வலசை போதல் நிகழ்வாக, பல ஆயிரம் கி.மீ.,துாரம் பயணித்து, இக்குளங்களுக்கு வந்து, முட்டையிட்டு அடை காத்து, குஞ்சு பொரித்தும் வருகின்றன. கணக்கெடுப்பில், மாங்குயில், நீல தாளைக் கோழி, நீர்க் காகம், புள்ளிச்சில்லை, நாமக்கோழி சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன் கொத்தி, பச்சைக் கிளி, கரிச்சான், நீல வால் பஞ்சுருட்டான், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, கதிர் குருவி, சிட்டுக் குருவி, குயில், கவுதாரி, பனை உழவாரன், வால் காக்கை என, ஒரே நாளில், 34 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளம், குட்டைகள் வளமாகவும், ஈர நிலங்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள பறவை இனங்கள், வெளி நாடுகளிலிருந்து, 'வலசை' போதல் நிகழ்வாக வரும் பறவை இனங்களைக் காக்கவும், அவற்றின் வாழ்வியல் சூழல்களைச் சிதைக்காமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது" இவ்வாறு, கூறினர்.
644 இடங்களில் கணக்கெடுப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 644 நீர் நிலைகளில் நடந்த ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில், பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதற்கட்டமாக, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 28/01/2024-ம் தேதி 644 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. |
|||||
by Kumar on 30 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|