தத்துவஞானி வேதாத்திரி மகரிசி வாழ்க்கை விளக்கம்
‘வழியனுப்பு விழாவில் அன்பர்கள் வாழ்த்துரைகள்”
மேற்படி விழாவில் சுவாமி வெங்கடேஸ்வரானந்தா அவர்கள் கூறியதன் சாராம்சமாவது. “நமது வேதாத்திரி சுவாமிகள் நமக்கு நடமாடும் யோகீஸ்வரராவார். அவருடைய ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் உண்மையும் தூய்மையும் விளங்கக் காணலாம். குற்றத்தை நீக்கி குணம் ஒன்றே காணும் பெருநோக்கு படைத்தவராக இவர் விளங்கி வருகிறார். தன் லட்சோப லட்ச சொத்துக்களை எல்லாம் பிறர் நன்மைக்கே பயன் படுத்திய பெருவள்ளல் என்றே இவரைச் சொல்ல வேண்டும். இன்றும் தன் உழைப்பையெல்லாம் பிறர் நன்மைக்கே இவர் அளித்து வருவதானது மிகவும் போற்றுதற்குரியது. இவருடைய புகழ் இந்நாட்டில் மட்டுமின்றி இனி அமெரிக்காவிலும் பரவப்போவது உறுதி. இவர் தொண்டு மேலும் சிறந்து இவர் இனிதே திரும்பிவர வேண்டுமென்று வாழ்த்தி முடிக்கிறேன்.” என்றார்.
விஞ்ஞானப் பேராசிரியர் திரு. அருள்நிதி ஆனந்த் அவர்கள் “இந்தியா ஆன்மீகத்திற்கு பெயர் பெற்ற நாடு. ஆத்மீகம் இந்திய மண்ணில் ஆழப் பதிந்திருக்கிறது. இது இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் போன்ற பெரியோர்கள் தோன்றிய நாடு. ஆகவே நாம் பிற நாட்டவருக்கு அழியாச் செல்வமான ஆத்மீக உணர்வையே உலகுக்கு அளிக்க முடியும். அமெரிக்கர்களிடம் அழியக்கூடிய பொருள் செல்வம் பெற்று நாம் அழியா ஆத்மீக பொக்கிஷத்தைத் தருகிறோம். இதுவும் பெருமைக்குரியதே. நமது வேதாத்திரி சுவாமி அவர்களிடம் எல்லோரையும் தன்னிடம் ஈர்க்கக்கூடிய பேராற்றல் விளங்கி வருகிறது. இவர் ஒரு தலை சிறந்த தத்துவ ஞானியாவார். அவர் நமக்கு கற்பித்துக் கொடுக்கும் சாந்தியோகம் வேறு யாருமே காட்டிக் கொடுக்காதது. இவருடைய பிரயாணம் மிக வெற்றிகரமாக முடிவது உறுதி” என்று கூறி முடித்தார்.
அடுத்துப் பேசிய அருள்நிதி இனாம்தார் குறிப்பிட்டதாவது “விவேகானந்தர் வெற்றியோடு திரும்பிய போது பெரும் வரவேற்பளித்துப் புகழ்பெற்ற மாநகரில் மற்றோர் பெரியாராகிய வேதாத்திரி சுவாமியவர்களை வழியனுப்ப வேண்டி நாமெல்லாம் கூடியிருக்கிறோம். விவேகானந்தர் சொற்பொழிவாற்றி பல்லாண்டுகள் கழிந்தும் அமெரிக்கர்கள் இன்றும் ஆத்மீக முன்னேற்றம் ஏதும் அடையாமல்தான் இருந்து வருகின்றனர். இங்கு நம் நாட்டில் பல ரிஷிகளும், பல ஞானிகளும் தோன்றியிருந்தும் கூட இன்னும் பாமர மக்கள் ஏதும் ஆத்மீக அறிவு பெறாமலே தான் இருந்து வருகிறார்கள். ஆத்மீக ஞானத்தால் பெறக்கூடிய நன்மை பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் கிட்டாமலே இருந்து வருகிறது. காரணம் தத்துவ ஞானம் ஒரு சிலருக்கே, அதாவது வீட்டைத் துறந்த துறவிகளுக்கே உரித்தானதாக இருந்து விட்டமை தான். இன்று நம் வேதாத்திரி மகரிசி அவர்கள் மிக எளிய முறையில் இந்த யோகப் பயிற்சியை வகுத்துக் கொடுத்திருக்கிறார். எல்லோரும் பயிலலாம். ஆகவே எல்லோரும் இந்த முறையைப் பயின்று பயன்பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சுவாமிஜி அவர்கள் அமெரிக்கா சென்று வெற்றியோடு திரும்ப வேண்டுமென்று விரும்பி வாழ்த்தி முடிக்கிறேன்” என்றார்.
அருட்செல்வர் திரு. சேஷன்
பிறகு பேசிய அருட்செல்வர் திரு சேஷன் அவர்கள் “ஸ்ரீமத் பகவத் கீதையில் நாம் விழிப்போடு செயலாற்ற வேண்டுமென்றும், திறமையோடு செயலாற்றுவதே யோகம் என்றும் போதிக்கப்பட்டிருக்கிறது. அதை நான் நன்கு உணர்ந்திருந்த போதிலும் அதை எனது வாழ்வில் எப்படி கடைப் பிடிப்பது என்பது பெரும் பிரச்சனையாகவே இருந்து வந்தது. நமது வேதாத்திரி சுவாமிகளைச் சந்தித்த பிறகுதான் எனக்கு விழிப்போடும் திறமையோடும் செயலாற்றும் வழி தெரிந்தது. ஆகவே இவருடைய யோக மார்க்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் சீக்கிரமே ஆத்மீக முன்னேற்றம் அடைவது உறுதி. இவருடைய அமெரிக்கப் பயணம் மிக வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போமாக” என்று கூறி முடித்தார்.
திரு சத்தார் சாகிப்
பிறகு கூடுவாஞ்சேரி அன்பர் சத்தார் சாகிப் அவர்கள் வேதாத்திரிசுவாமிகளின் கொள்கைகளில் தன்னைத்தானறிதல் என்பது முக்கியம் பெற்றிருப்பதையும் அதன் மூலமே உலக அமைதி நிலவுவது சாத்தியம் என்பதையும் விளக்கிக் கூறினார்.
தலைவர் முடிவுரை
கடைசியாக தலைவர் ஈ.எம். துரைசாமி அவர்கள் தமது முடிவுரையில் “திரு. வேதாத்திரி அவர்களின் எளிய வாழ்க்கையும் சீரிய சிந்தனையும் என்னை அவர்பால் இழுத்ததில் யாதொரு சந்தேகமுமில்லை. இவர் போதனையில் முக்கியமாகக் காணப்படுவது தன்னைத்தான் உணர்ந்து விழிப்போடு செயலாற்ற வேண்டுமென்பதும், எல்லாவற்றையும் தன் சொந்த முயற்சியிலேயே பெறவேண்டும் என்பதும் தான். தனக்கு வெளியிலுள்ள வேறு ஏதேனும் ஒன்றை வேண்டி நிற்பது பயனற்றது என்பதையே இவர் வலியுறுத்துகிறார். அமெரிக்க நாடு விஞ்ஞானத்தில் வெகுவாக முன்னேறியிருப்பது உண்மைதான் என்ற போதிலும் துரித முன்னேற்றம் அதோடு துரிதமான அழிவையும் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். எனவே அந்த நாட்டிற்கு இவருடைய யோகம் பெரிதும் பயன்படக் கூடியதே. மேலும் 18 வயது முதல் யாரும் இதைப் பயிலலாம் என்றும் மற்ற காரியங்களை கைவிடாமல் காலையும் மாலையும் சிறிது நேரம் மட்டுமே கூடப் பழகினால் போதும் என்றும் தெரிவிப்பதால் இது அவர்களுக்குப் பெரிதும் ஏற்புடையதாகவும் இருக்கும். ஆகவே இவருடைய பிரயாணம் வெற்றிகரமாக முடியும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறி முடித்தார்.
- வேதாத்திரி
|