வீட்டிற்குள் நுழையும் போது இரவு 7.30 ஆகி விட்டிருந்தது ராகவனுக்கு, அவர் மனைவி வாசலிலே இவருக்காக காத்திருந்தாள், ஏங்க! இன்னைக்கு இவ்வளவு லேட்.. எதுவும் பேசாமல் துணிமணிகளை கழட்டி விட்டு கொடியில் தொங்கிய துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு புழக்கடை சென்று வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் பளீரென அடித்து, சர்ரென தண்ணீரை எடுத்து தன் இரு கால்களிலும் விட்டு, கால்களாலே மாறி மாறி தேய்த்து கழுவி விட்டு உள்ளே வந்தார்.அவர் மனைவி அவர் பதிலை எதிர்பார்த்தவாறு கையில் வேட்டியுடன் நின்றாள். அதை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்டு துண்டை உருவி முகம் கை கால்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அக்கடாவென உட்கார்ந்தார். உடல் அசதியக இருந்தது, இதற்குள் மனைவி கையில் காப்பியுடன் வர அதை வாங்கி இரசித்து குடித்து காலி டம்ளரை மனைவியின் கையில் திணித்தவர் இன்னைக்கு ஏதோ போராட்டமாம், பஸ் எல்லாம் திருப்பி விட்டுட்டாங்க, காந்திபுரத்துல இருந்து சாய்பாபா காலனி வர்றதுக்குள்ள... ஸ்..ஸ்.. அப்பப்பா.. சலித்துக்கொண்டார்.
இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிதான், தினமும் இவர் நேரம் கழித்து வருவது, பின் சலித்துக்கொள்வது.... மகன் ரமேசை வண்டியை எடுத்து வந்து ஆபிஸ் வாசலிலேயே ஏற்றிக்கொண்டு வீட்டில் கொண்டு விட சொன்னாலும் இவர் ஒத்துக்கொள்ள மாட்டார்.
கல்யாணமாகிச்சென்ற தன் மகள் கல்பனா அவள் புகுந்த வீடு போகும் வரை தன் தந்தையிடம் மன்றாடி பார்த்து விட்டாள் தன் வண்டியிலேயே அவரை ஆபிஸ் கொண்டு விட்டு விடுவதாகவும் மாலையில் வீட்டில் கொண்டு விடுவதாகவும், இவர் உனக்கு எதற்கு வீண் சிரமம் என்று அவளை தவிர்த்துவிட்டார். மகன் ரமேசுக்கும் இது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை, அவன் அரசு பொறியியல் கல்லூரியில்தான் படிக்கிறான், வரும்போதோ, போகும்போதோ அவரை கூட்டி செல்வது. ஆனால் அவர் ஒத்துக்கொண்டால்தானே! இது போக வீட்டில் கல்பனா உபயோகப்படுத்திய வண்டியும்.சும்மாதான் இருந்தது, ஒரு பத்து நாள் இவர் காலில் ஏதோ சுளுக்கு என்று நடக்க கஷ்டப்பட்டபொழுது ரமேசுதான் தினமும் அவரை அலுவலகத்துக்கு கூட்டிச்சென்று விட்டு பின் மாலையில் அழைத்து வந்துகொண்டிருந்தான் கால் சரியானதும் அவனை வரவேண்டாமென்றுவிட்டார், வழக்கம் போல வீட்டிலிருந்து அரை பர்லாங்கு தூரம் நடந்து பஸ் ஏறி அலுவலகம் சென்று வந்தார். ரமேசு அம்மாவுடன் புலம்புவான், அப்பா ஏம்மா இப்படி இருக்கறாரு அவரும் கஷ்டப்பட்டு நம்பளையும் கஷ்டப்படுத்தறாரு.ராகவனின் மனைவி ஒன்றும் பேசமாட்டாள், விடுறா அவரா கூப்பிடும்போது நீ போனா போதும்.
ராகவனும் அவர் மனைவியும் இந்த காலனியில் வீடு கட்டி குடி வருவதற்கு முன்பு ஏழெட்டு வீடுகளில் வாடகைக்கு குடியிருந்தனர், வீட்டுக்காரர்களின் ஆதிக்க மனப்பான்மை இவர்களால் தாளமுடியாமல் நகைகள் அனைத்தையும் விற்று ஒரு மனையை இந்த காலனியில் வாங்கி போட்டனர், அப்பொழுதெல்லாம் இந்த காலனி ஒரே பொட்டல் காடாக இருந்தது.அதன் பின் இவர் வேலை செய்யும் அலுவலகம் மூலமாக வீட்டு கடன் வாங்கி ஒரு வழியாக வீட்டைக்கட்டி முடித்தனர்.
அப்பொழுது கல்பனா சிறுமியாகவும்,ரமேசு கைக்குழந்தையாகவும் இருந்தனர். இவரோடு நான்கைந்து பேர் தொடர்ந்து அங்கு வீடு கட்ட ஒருவருக்கொருவர் அணுசரனையாக இருந்தனர், அப்பொழுதெல்லாம் வீடு கட்ட கடன் கிடைப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போல, பணத்துக்கு இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், வீடு கட்டும் இடத்தில் ஒருவருக்கொருவர் அனுசரணயாக இருந்ததால் வருத்தம் தெரியவில்லை. வீடு கட்டி முடித்தவுடனேயே பாலைக்காய்ச்சி குடி வந்து விட்டனர். அப்பொழுதெல்லாம் தண்ணீர் கஷ்டமும் கூட, இருபது வீடுகள் மட்டுமே அப்பொழுது கட்டி முடித்து குடி வந்திருந்தனர், அவர்கள் கூடி பேசி ஒரு போர்க்குழாய் அமைத்து ஓரளவு தண்ணீர் பிரச்னையை தீர்த்துக்கொண்டனர்.
பின் காலனியில் வீடுகள் பெருக பெருக வசதிகளும் பெருகி அன்று இது பொட்டல் வெளியாக இருந்தது என்பதை இவர்களாலே இப்பொழுது நம்ப முடியவில்லை. வீடு கட்டி குடி வரும்பொழுது இவர்களுக்கு இருந்த கடன் கழுத்தளவு இருந்தது, ஆனால் ராகவனின் மனைவியின் சாமார்த்தியத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்பட்டு நகை நட்டுக்கள் செய்து தன் மகளை நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்துவிட்டனர்.வீடு கட்டி பத்து வருடங்கள் வரை இவர் தினமும் சைக்கிளிலேயே அலுவலகம் சென்று வருவார், அதன் பின் சைக்கிள் மிதிக்க உடல் ஒத்துழைக்காததால் பஸ்ஸை நாட ஆரம்பித்து எட்டு வருடங்கள் ஓடிவிட்டன.
ஒரு நாள் ரமேசின் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை, அப்பாவுடனே வண்டியை தள்ளிக்கொண்டு வந்து வண்டி பழுது பார்க்கும் கடையில் விட்டு விட்டு அவ்ருடனே பஸ்ஸில் செல்வதற்கு அப்பாவுடனே கிளம்பினான், இருவரும் வெளியே நடந்து வர எதிரில் வந்த ஆட்டோ ஓட்டுனர் வணக்கம் ஐயரே என்று வணக்கம் சொல்ல இவரும் பதில் வணக்கம் தந்தார், அதன் பின் இவர் நடக்க வழியங்கும் விசாரிப்புக்கள், உங்க பையனா? என்ன பண்றார்? என்று, வழியெங்கும் கடைகள், ஏன் தள்ளுவண்டி வைத்திருப்போர், அனவைரும் இவருடன் ஒரு நிமிடம் நின்று பேசி விட்டி சென்றனர், அவசரமாக செல்வோர் ஒரு புன்னகையுடன் கையசைத்து விட்டு சென்றனர். ரமேசுக்கு வியப்பு, அப்பாவுக்கு இத்தனை நண்பர்களா ! அவரும் முகமலர்ச்சியுடன் எல்லோரிடமும் கல கலப்பாக பேசிக்கொண்டு வந்தார். பஸ் ஏறியும் இவரின் விசாரிப்புகள் குறையவில்லை, இவரைப்போல தினமும் பஸ்ஸில் வருபவர்களுடன் ஒரே பேச்சுத்தான். இவன் தந்தையிடம் சொல்லி கல்லூரி செல்ல பாதியில் இறங்கிவிட்டான்.
மாலையில் ராகவன் வீடு வந்து சேர்ந்த பொழுது ரமேசு சீக்கிரமே வீடு வந்திருந்தான். ராகவன் தன் வழக்கமான சிரம பரிகாரங்கள் முடித்து உட்கார்ந்திருந்தபொழுது ரமேசு அப்பாவின் அருகில் மெல்ல வந்து உனக்கு எத்தனை பிரண்ட்ஸ்ப்பா..எல்லார்கிட்டயும் பேசறயே..ஆச்சர்யப்பட்டான்.
அவன் முகத்தை பார்த்த ராகவன் உங்கம்மாவும் நானும் இந்த வீடு கட்ட ஆரம்பிக்கும்போது சுத்தி இருக்கறவங்க எங்களுக்கு எத்தனையோ உதவி செஞ்சாங்க, நீங்க இரண்டு பேரும் சின்னக்குழந்தைங்க, அப்ப இருந்து இப்ப வரைக்கும் எல்லோரும் என்னிடம் நல்லா பழகுறாங்க, நானும் அவ்ங்களோட நல்லா பழகுறேன், நாம என்ன காசு பணமா செலவு பண்றோம், ஒரு வணக்கம், ஒரு சிரிப்பு, அல்லது எப்படி இருக்க்றீங்க அப்படீன்னு விசாரிப்பு,இது தாண்டா நமக்கு நட்பை கொடுக்கும். நான் ஏன் உன வண்டியிலோ, இல்ல கல்பனா வண்டியிலோ வரலை தொ¢யுமா? இந்த மாதிரி எல்லா முகங்களையும் நாம தினமும் சந்திச்சா நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்னு நம்புறேன். வீட்டுல வண்டி ஏறி ஆபிஸ்ல இறங்கி, அங்கிருந்து திரும்ப வண்டி ஏறி வீடு வந்து சேர்ந்து, அதுக்கப்புறம் தூங்கி காலையிலே யார் முகமும் தெரியாத நாலு மணிக்கு வாக்கிங் போயி, எதுக்குடா இந்த முகமூடி வாழ்க்கை என்னால் நடக்க முடியற வரைக்கும் இந்த முகங்களோட பரிச்சயம் இருக்கணும், அவ்வளவுதான்..
நான் நடக்க முடியாம இருக்கும்போது உங்க உதவி கேப்பேன் அப்ப எனக்கு உதவி செய்யுங்க.! ரமேஷ் அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டான். ராகவன் மனைவி அவரை முன்னரே புரிந்து கொண்டதால் புன்சிரிப்புடன் நின்றாள்.
|