LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

திருக்குறள் முற்றோதல் நினைவாற்றல் வழிகாட்டி -10 படிகள்

திருக்குறள் முற்றோதல் நினைவாற்றல் வழிகாட்டி (10 படிகள்)

 

முனைவர்.அ.ஆறுமுகம்

முதல் படி:

முன்னுரை :

தற்போது தமிழ் அமைப்புகள் பலவும் திருக்குறளில் பல்வகைப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து இளமையிலேயே கவனக நிகழ்ச்சிகள் நடத்துபவரும் உள்ளனர். இவர்களையெல்லாம் பார்க்கும் போது திருக்குறள் ஆர்வலர் பலருக்கும் நாமும் அவ்வாறு திருக்குறள் முழுமையும் மனப்பாடம் செய்து ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுவது இயல்பே. இத்தகு எண்ணங்கொண்ட திருக்குறள் ஆர்வலர்கட்கும், இளைஞர்கட்கும் பயன் தரும் வகையில் அதற்கான வழிகளும் செய்திகளும் தொகுத்துத் தரப் பெறுகின்றன.

 

நினைவாற்றல்:

திருக்குறள் முழுவதையுங் கற்று நினைவில் இருத்த வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வத்துடன் திருக்குறள் நூலொன்றைச் சொந்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முதலில் இருந்து முடிவு வரை ஆர்வம் தூண்டும்போது படியுங்கள். மேலும் படிக்க வேண்டும் என்ற உணர்வு உண்டாகும். எண்ணியர் திண்ணியராயின் எண்ணிய எண்ணியாங் கெய்தலாம் என்பது வள்ளுவர் வழி. எனவே, முயன்றால் வெற்றி பெறலாம் என்ற முழு ஆர்வத்துடன் தொடங்குங்கள். முதலில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரத் தலைப்புகளையும் வரிசையாக மனப்பாடஞ் செய்யுங்கள். எண்ணுடன் அதிகாரத் தலைப்பினைச் சொல்லுமளவு பயிற்சி செய்து கொள்ளுங்கள். 40 ஆவது அதிகாரம் கல்வி, 74ஆவது அதிகாரம் நாடு என எண்ணுடன் அதிகாரத் தலைப்பினை நினைவில் நிறுத்துங்கள். உங்களை நீங்களே கேள்வி கேட்டு விடைகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் நண்பர் ஒருவருக்கும் இவ்வார்வத்தைத் தூண்டி இருவரும் போட்டி இட்டுக் கொண்டு படித்தால் ஒருவரை ஒருவர் சோதித்து ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு முதற்படியாக அதிகாரத் தலைப்புகள் முழுவதையும் எண்ணுடன் நன்கு மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். பிற படிப்புகளுக்கெல்லாம் இதுவே முதற்படி என்பதைப் பயிற்சியின் போது நன்கு உணர்ந்து கொள்வீர்கள்.

 

இரண்டாம் படி :

அதிகாரத் தலைப்புகள் அனைத்தையும் மனனம் செய்தவுடன் முதல் அதிகாரத்திலிருந்து குறட்பாக்களை மனனம் செய்யத் தொடங்குங்கள்.

நானூறு பக்க அளவுள்ள ஏட்டினை வாங்குங்கள். முதற்படியாக மனனம் செய்த அதிகாரத் தலைப்புகளை வரிசையாக எண்ணுடன் நினைவுபடுத்தி எழுதுங்கள். சரிபார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் குறட்பாக்களை மனனம் செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஓர் அதிகாரம் மனனம் செய்யலாம். உங்கள் ஆற்றலுக்கேற்ப அளவை வரையறை செய்து கொள்ளுங்கள். இம்முறையிலிருந்து தளரமாட்டேன் என்ற உறுதியுடன் தொடருங்கள். காலையில் மனனம் செய்த பகுதியை இரவு வரை ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிப் பார்த்து பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

மனனம் செய்த குறட்பாக்களை உங்கள் குறிப்பேட்டில் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வோர் அதிகாரமாக அன்றன்றே எழுதுங்கள். அதிகாரத் தலைப்பு, குறள் வரிசை எண், தொடங்கும் சீர், ஈற்றுச் சீர் இவற்றை எழுதினாலே போதும். ஏனெனில் தொடங்கும் சீரைப் பார்த்தவுடன் குறள் முழுதும் இயல்பாகவே உங்களுக்கு நினைவில் வந்துவிடும் அல்லவா? இவ்வாறு எழுதும் ஏட்டுப்படி மீண்டும் திருப்பிப் பார்த்து ஆற்றலை வளர்த்துக் கொள்ள உற்ற துணையாகும். முழுவதும் நிறைவு பெற்றவுடன் இக்குறிப்பேட்டின் பயனை அறிந்து நீங்களே பெருமை அடைவீர்கள். உழைப்பின் உவகை உங்கள் முகத்தில் குடி கொண்டிருக்கும்.

 

மூன்றாம் படி:

ஒவ்வோர் அதிகாரமாக மனனம் செய்யும் போது இரண்டாம் அதிகாரம் மனனம் செய்தவுடன் முதல் அதிகாரத்தையும் சேர்த்துச் சொல்லி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இம்முறையில் நூற்று முப்பத்து மூன்றாவது அதிகாரம் மனனம் செய்யும்போது திருக்குறள் முழுவதையும் சொல்லிப் பார்க்க வேண்டிய நிலை வந்துவிடும். அதற்கு ஆகும் நேரம் ஒரு மணி நேரம்தான் என்பதைப் பின்னர் நீங்களே அறிவீர்கள். பன்முறை திரும்பத் திரும்ப நீங்களே சொல்லிப் பார்த்துக் கொண்டிருப்பதால் திருக்குறள் முழுமையும் உங்கள் நினைவில் பதிந்திருக்கும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்தக் குறளைக் கேட்டாலும் சொல்லக்கூடிய வலிவான நினைவாற்றல் உங்களிடம் வளர்ந்திருக்கும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு இத்தகைய ஆற்றல் பல்வேறு பரிசுகளையும் வெற்றிகளையும் குவித்துத் தரும்.

 

நான்காம் படி:

தற்போது திருக்குறளின் அதிகாரத் தலைப்புகள் எண்ணுடன் தெரியும். திருக்குறள் முழுவதும் தெரியும். எண் சொன்னால் குறள் சொல்வதற்குரிய படியை இப்போது பார்ப்போம் இதற்கு மீண்டும் அதிகாரத் தலைப்புகள் எண்ணுடன் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வோர் அதிகாரத்திலும் முதற்குறள் கடைசிக்குறள் இவற்றை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முதல் அதிகாரத்திலிருந்து நூற்று முப்பத்து மூன்றாம் அதிகாரம் வரை ஒவ்வோர் அதிகாரத்தின் முதற் குறளையும் கடைசிக் குறளையும் சொல்லிப் பாருங்கள். போதுமான பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். 411ஆவது குறள் என்றால் 42ஆவது அதிகாரமாகிய 'கேள்வி' யின் முதற்குறள் எனக் கொள்ள வேண்டும். 740ஆவது குறள் என்று சொன்னால் 74ஆவது அதிகாரமாகிய 'நாடு' என்னும் அதிகாரத்தின் கடைசிக் குறள் ஆகும். இதற்கான பயிற்சியினைத் தொடருங்கள்.

இவ்வாறு மீண்டும் மீண்டும் பயில்வதனால் நினைவாற்றலில் வலிவேற்படுகிறது. இவ்வலிவை வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் வளர்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். இடையில் தொய்வு ஏற்பட்டாலும் அத்தொய்வினை அகற்றிப் பயிற்சியைத் தொடர வேண்டும்.

 

ஐந்தாம் படி:

இப்போது அதிகாரத் தலைப்புடன் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களும் தெரியும். ஒவ்வோர் அதிகாரத்தின் முதற்குறளும் கடைசிக் குறளும் கேட்டவுடன் சொல்லத் தெரியும். அதாவது 1, 0 முடியும் எந்தக் குறளைக் கேட்டாலும் விடையளிக்க இயலும். இதர எண்களுக்குரிய குறட்பாக்களை எப்படி நினைவுக்குக் கொண்டு வருவது?

ஒவ்வோர் அதிகாரத்தின் 5 ஆம் குறளையும் பயிற்சியின்மூலம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இப்பயிற்சியால் 1,5,0 இவற்றில் முடியும் குறட்பாக்களை எப்போது கேட்டாலும் சொல்ல இயலும். 25,111,205 என எண்களைச் சொல்லிக் குறட்பாக்களை கேட்டால் உடன் விடையளிக்க இயலும். இதன் உதவியுடன் பிற எண்களில் முடியும் குறட்பாக்களையும் எளிதில் நினைவுக்குக் கொண்டு வந்துவிடலாம். எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

 

ஆறாம் படி:

தற்போது ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களும் அதிகாரத் தலைப்பு எண்ணுடன் தெரியும். 1,5,0 இவற்றில் முடியும் குறட்பாக்களுக்குரிய எண்களைச் சொன்னால் குறளைச் சொல்லத் தெரியும். எந்த எண் கூறினாலும் குறளைச் சொல்வதற்குரிய பயிற்சியை இப்போது பார்ப்போம்.

494 ஆவது குறள் என்று சொன்னால் 50 ஆவது அதிகாரமாகிய ‘இடனறிதல்' என்னும் அதிகாரத்தின் 4 ஆம் குறட்பா என்று நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 491ஆவது குறள் தொடங்கற்க எனத் தொடங்கும் குறள் என்பது முன்னரே தெரியும். தொடர்ந்து 492, 493 ஐச் சொல்லி வந்தால் 494வது குறட்பா,

'எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்’

 

என்று கூறிவிட முடியும். 637 ஆம் எண்ணுள்ள குறட்பா என்று கேட்டால் 64 ஆவது அதிகாரமாகிய அமைச்சு என்னும் அதிகாரத்தின் ஏழாவது குறள் என்பது நினைவுக்கு வரும். 635 ஆவது குறள் அறனறிந்து.... துணி என்று முன்பே தெரியும். அதைத் தொடர்ந்து சொன்னால் 637ஆவது குறள்,

 

 

'செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்(து)

இயற்கை அறிந்து செயல்’

 

என்பது நினைவுக்கு வந்துவிடும். இத்தொடர் சிந்தனை, பயிற்சியால் எளிதில் அமைந்துவிடும்.

1038ஆவது குறள் என்று சொன்னால் 104ஆவது அதிகாரமாகிய உழவு என்னும் அதிகாரத்தில் 8ஆவது குறள். 1035 இரவார் எனத் தொடங்கும் குறள் என்பது முன்னரே தெரியும். தொடர்ந்து 1036, 1037 சொல்லி வந்தால் 1038 ஆவது குறள்,

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு

எனக் கூற இயலும்.

 

இப்பயிற்சியால் தற்போது எந்த எண்ணைக் கூறிக் குறளைக் கேட்டாலும் கூற இயலும். இவ்வாறு முயன்று பெற்ற ஆற்றலை மறதி வெள்ளத்தில் இழந்து விடலாகாது. கைப்பொருளை எவ்வாறு பாடுபட்டுக் காப்பாற்றுகிறோமா அவ்வாறே இவ்வாற்றலையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு படுக்கப் போகும்வரை சிந்தனைக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் முதற் குறளிலிருந்து கடைசிக் குறள்வரை சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் மனதுக்குள் 30 ஆவது அதிகாரம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் போது வேறு பணியில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அப்போது நினைவுபடுத்தலை 30ஆவது அதிகாரத்தில் நிறுத்தியுள்ளோம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும்போது விட்ட இடத்திலிருந்து நினைவாற்றலைத் தொடர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இடையிடையே கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் ஒவ்வொரு நாளும் முழுமையாகத் திருக்குறளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பு தொடரும். தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

 

ஏழாம் படி:

தற்போது உங்களுடைய ஏட்டில் 133 அதிகாரத் தலைப்புகளும், எண்களுடன் முதற்சீரும் இறுதிச் சீருமாக 1330 குறட்பாக்களும் எழுதப் பெற்றிருக்கின்றன. தங்கள் கையில் திருக்குறள் புத்தகத்தைத் தவிர திருக்குறள் நினைவேடு ஒன்றும் உருவாகியிருக்கிறது. இந்நினைவேட்டினைக் கையில் வைத்துக் கொண்டு வரிசை எண்கள் சிலவற்றை நீங்களே சொல்லி அவற்றிற்குரிய குறட்பாக்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கூறியது சரியா என நினைவேட்டின் மூலம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களைக் கேட்கச் செய்வது இன்னும் சிறந்த பயனை அளிக்கும். இருப்பினும் நமக்கு நாமே சோதித்துக்கொள்வதுதான் சிறந்த பயனைத் தரும். எப்போதும் நண்பர்கள் அருகில் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் ஆர்வத்துடன் நம் முயற்சிக்கு உதவுபவர்களாக அமைய மாட்டார்கள். ஆர்வம் காட்டும் நண்பர்கள் அமைந்தால் பெரும் பேறுதான்.

 

இப்பயிற்சியினால் எண் கூறக் குறள் கூறும் ஆற்றல் இயல்பாகவே வளரும். கேட்க நண்பர்கள் அருகில் இல்லையா? கவலைப்படாதீர்கள். சாலையில் ஓடுகிற வண்டிகளில் காணப்படும் எண்கள் பிற பலகைகளில் காணப்படும் எண்கள் இவற்றைப் பார்த்தவுடன் அவ்வெண்களுக்குரிய குறட்பாக்களை நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஊருக்குரிய அஞ்சல் குறியீட்டு எண் 621851 என வைத்துக் கொள்ளுங்கள். 1, 2, 5, 6,8, 12,15,16, 18, 25, 26,27, 621, 651, 158, 126, 261, 581,

218,516,625, 628, போன்று பல எண்களை நாமே உருவாக்கி அவ்வெண்ணுக்குரிய குறட்பா எது என்பதை நாமே நினைவுபடுத்திக் கொள்ளலாம். நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள இதுவும் ஒரு வழியாகும். முயற்சி திருவினை ஆக்கும் அல்லவா?

 

எட்டாம் படி:

உங்களுடைய திருக்குறள் கையேட்டில் அதிகார வரிசையில் எல்லாக் குறட்பாக்களின் முதற் சீரும் இறுதிச் சீரும் இருக்கின்றன. இவற்றிலிருந்து 'அ' முதல் ஒவ்வோர் எழுத்திலும் தொடங்கும் குறட்பாக்கள் எத்தனை எனத் தனித்தனியே கணக்கிடுங்கள். ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களும் எத்தனை எழுத்தில் தொடங்குகின்றன என அறியலாம். அவ்வாறே முடியும் எழுத்துக்களையும் கணக்கிடுங்கள். தொடங்கும் எழுத்தும், முடியும் எழுத்தும் ஒன்றாகவே அமைந்த குறட்பாக்களைக் கணக்கிடுங்கள். இவ்வாறு கணக்கிடும் போது 1330 குறட்பாக்களும் சரியாக இக்கணக்கில் இடம் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். திருக்குறள் நூலில் கொடுக்கப்பட்டுள்ள அகர வரிசையைப் பார்க்காதீர்கள். நமது உழைப்பினால் பெறும் ஆற்றல்தான் நமக்கு நிறைவைத் தரும். எழுத்தை வைத்துக் கணக்கிடுவது போலச் சொல்லை வைத்துக் கணக்கிடுவதும் நம் நினைவாற்றலை மிகுதிப்படுத்தும். சான்றாக உலகு என முடியும் குறட்பாக்கள், படும் என முடியும் குறட்பாக்கள் என முடிகின்ற சீர்களை வைத்தும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

 

ஒன்பதாம் படி:

இதுவரை திருக்குறள் முழுவதையும் பல்வேறு வகைகளில் பகுத்து நினைவில் வைத்துக் கொண்டீர்கள். இளமையிலேயே திருக்குறள் முழுமையும் மனனம் செய்து குறள்நெறிச் சான்றோராகத் திகழும் இளங்குமரனார், அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவி, வாழும் வள்ளுவராகத் திகழ்பவர். 'திருக்குறள் வாழ்வியலுரை' எனத் திருக்குறளுக்கு உரைநூல் வெளியிட்டுள்ளார். இந்நூலை அடிப்படையாகக் கொண்டு குறளுக்குரிய பொருளை அறியுங்கள். ஒரு முறை படித்தாலே பொருள் புரிந்து விடும். காரணம், முன்னரே உள்ளத்தில் ஊறியுள்ளது தான்.

குறளைக் கூறியவுடன் பொருள் நினைவுக்கு வருமளவு பயிற்சி செய்யுங்கள். இப்பயிற்சியைப் பெற்றவுடன் குறள் கூறினால் பொருளைக் கூறலாம். பொருள் கூறினால் குறளைக் கூறலாம் . ஆற்றல் மிக்கவர் அறிஞர் பலரின் உரைகளை எடுத்துக் கூறும் அளவுக்கும் பயிற்சியை வலிமைப்படுத்திக் கொள்ளலாம். இப்பயிற்சிக்குத் 'திருக்குறள் உரை வேற்றுமை' என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் திருக்குறள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நூல் துணை செய்யும். உரை வேற்றுமைகளை விளக்கித் தெளிவுபடுத்தியுள்ளவர், திருக்குறளில் தோய்ந்த பேராசிரியர் முனைவர் இரா. சாரங்கபாணி அவர்கள் ஆவார்.

 

பத்தாம் படி:

தற்போது பொருளுடன் திருக்குறள் முழுமையும் அறிந்துள்ளீர்கள். திருக்குறளில் பயின்று வரும் உவமைகள், அணிகள் இவற்றையும் அறிந்து வைத்திருந்தால் இலக்கண அடிப்படையில் கேட்பவர்களுக்கும் விடையளிக்க இயலும். இதற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 'திருக்குறள் அணி நலம்' என்ற நூல் மிகவும் பயன்தரும். தக்க ஆசிரியர் வழி அறிந்தும் அணி நலப் புலமை பெறலாம். இவ்வாறு பல்லாற்றானும் ஓதி உணர்ந்து திருக்குறள் நெறியை வாழ்வியல் நெறியாகப் பின்பற்றுங்கள். சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லியை வள்ளுவர் வழியில் நீக்கலாம். யாதொன்றும் தீமையிலாத வாய்மையைப் பின்பற்றலாம். இவ்வாறு ஏற்றவைகளைப் பின்பற்றுவேன் என்ற உறுதியுடன் வள்ளுவர் வழியில் மற்றவர்கட்கு எடுத்துக் காட்டாகத் திகழுங்கள்.

 

காலமறிதல்:

இப்படியெல்லாம் பத்துப் படிகளிலும் ஏறி முன்வரக் காலம் இல்லையே என்று சிலர் கவலைப் படலாம். காலம் பொன் போன்றது என்ற தொடர் தேர்வுக்கு மட்டுமன்று, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய தொடருமாகும். ஒவ்வொரு நாளும் காலை, மாலை அரைமணி நேரம் ஒதுக்கினாலே போதும் முறையான பயனைப் பெறலாம். பள்ளிக்குப் போகும் போதும், வரும்போதும் முன்னர் படித்தவற்றைச் சொல்லிப் பார்த்துப் பயிற்சியை வளர்த்துக் கொள்ளலாம். பேருந்தில் பயணம் செய்யும்போது புறக்கண் வேடிக்கை பார்த்து வந்தாலும், மனம் மட்டும் திருக்குறளை முதலில் இருந்து நிறைவு வரை நினைவு படுத்திக் கொண்டு வருமாறு பயிற்சி தரலாம். எப்போது நேரம் கிடைத்தாலும் கிடைக்கும் நேரத்தை இப்பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முயன்றால் முடியாததில்லை. முயற்சி நமக்குப் பெருமையைத் தரும். நம்மால் முடியும் என்ற வலிவான உள்ள உறுதியுடன் செயல்படல் வேண்டும். முதலில் கொஞ்சம் தொல்லையாக இருந்தாலும் துவண்டு விடாமல், சோம்பலுக்கு இடந்தராமல் தொடர்ந்து முயன்று வெற்றியின் எல்லையை எட்டவேண்டும். வெற்றி முகட்டில் நிற்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, முன்னர் ஏற்பட்ட தொல்லைகளையெல்லாம் மறக்கச் செய்துவிடும். எனவே நம்மிடம் உள்ள வலிமையை நன்கு உணர்ந்து முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

பயனறிதல்:

இவ்வாறெல்லாம் திருக்குறளில் நினைவாற்றல் பெறுவதானல் ஏற்படும் பயன் என்ன என்ற வினா எழலாம். திருக்குறள் நினைவாற்றலைப் பெற்றவர்கள் பெறற்கரிய பேறு பெற்றவர்கள். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் திருக்குறள் வழியில் தீர்த்துக் கொள்பவர்கள். மன உறுதியும், நல்லியல்புகளும் வளர இவ்வாற்றல் துணை செய்யும். எத்தகைய கருத்துகளையும் நினைவில் இருத்தும் வலிமை வளர்கிறது. திருக்குறள் வழியே நடக்க வேண்டுமென்ற உறுதி ஏற்பட்டு அவ்வாறே செயல்படவும் தூண்டுகிறது. பிற இலக்கியங்களை எளிதில் புரிந்துகொள்ளவும், நினைவில் இருத்திக் கொள்ளவும் துணைசெய்கிறது. தம் கருத்துகளை மற்றவர்க்குத் தெளிவாக எடுத்துச் சொல்ல முடிகிறது. வையத்துள் வாழவாங்கு வாழப் பயன்தரும் இவ்வாற்றலைப் பெற்ற சான்றோர் பலர் இன்றும் உள்ளனர். அவர்களை வழிகாட்டியாகக் கொள்க.

 

பருவத்தே பயிர்செய் :

இத்தகைய ஆற்றலை வளர்த்துக் கொள்ள இளமைப் பருவமே ஏற்ற பருவமாகும். எனவே, மாணவப் பருவத்திலேயே இத்தகைய பயிற்சியைக் குழந்தைகள் பெற, பெற்றோர் தூண்ட வேண்டும். பெற்றோர் தூண்டலிலும் வழிகாட்டலிலும் தான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, ஒழுக்கம், பண்பாடு அமைந்துள்ளன. எனவே, முறையான பயிற்சியைக் குழந்தை களுக்குத் தந்து வழிகாட்ட வேண்டுவது பெற்றோர் கடமையாகும். பின்பற்ற வேண்டுவது குழந்தைகளின் கடமையாகும்.

 

சுவைதரு செய்திகள் :

  • க, கு, கை, சி, சு, தி, தீ, து, பு, ம, வா, வி, வை ஆகிய 13 எழுத்துக்களில் மட்டும் தொடங்கும் குறட்பாக்களும் முடியும் குறட்பாக்களும் உண்டு
  • ஞா, பீ,போ, மை, மோ ஆகிய எழுத்தில் தொடங்கும் குறட்பா ஒவ்வொன்று மட்டுமே உண்டு அவை 484, 475, 693,836,90 ஆகியவை.
  • முதலெழுத்தும் முடிவெழுத்தும் ஒன்றாய் அமைந்த குறட்பாக்கள் 6 உண்டு. அவை 391, 544, 604, 1025, 1187, 1218 ஆகியவை.

தொடங்கும் சொல்லே முடியும் சொல்லாக அமைந்த குறட்பா மூன்று. அவை 200, 739, 751 ஆகியவை.

by Swathi   on 21 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.