|
||||||||
தீராக்காதல் திருக்குறள்’ திட்டத்தின் கீழ் விருதுநகரில் திருக்குறள் மாணவர் மாநாடு |
||||||||
தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாகத் தமிழகம் முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருக்குறள் மாணவர் மாநாடு பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்திய தீராக் காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் முதல்முறையாகத் தமிழ் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 800 மாணவர்கள் பங்கேற்ற 2 நாள் நடைபெறும் “திருக்குறள் மாணவர் மாநாடு 2024" விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. முன்னதாக, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில், உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மாணவர்களால் திருக்குறளை விளக்கும் வகையில் வரையப்பட்ட குறள் ஓவியக் கண்காட்சி அரங்கையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
மாநாட்டில் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பேசுகையில், "திருக்குறளை மாணவர்களுக்கு அதனுடைய பெருமையை எடுத்துச் சொல்லவும் அடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ்ப் பண்பாடு, திருக்குறள் போற்றும் நெறிமுறைகளைக் கடத்துவதற்காக 2 நாட்கள் பல்வேறு திருக்குறள் சார்ந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் 38 மாவட்டங்களிலிருந்தும் சுமார் 800 மாணவர்களும் 200 ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளனர்" என்றார்.
திருக்குறள் ஒரு வழிகாட்டி
மாநாட்டில் சிறப்புரையாற்றிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், 2 ஆண்டும் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது திருக்குறள். தற்போது எவ்வளவு நவீனத் தொழில் நுட்பங்கள் வந்தாலும், திருக்குறள் புதிய பொருளைத் தந்து கொண்டே இருக்கிறது. கல்வி ஒன்று தான் மனிதனை மனிதனாக மாற்றும் வல்லமை உடையது. அத்தகைய கல்வியைப் பெறுவதற்கு திருக்குறள் ஒரு வழிகாட்டி. எது அறம், எது தர்மம் இதன் மூலம் திருக்குறள் நமக்கு எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என உணர்த்துகிறது. இது தான் உண்மையான ஞானப்பார்வை" என்றார்.
மேலும், இம்மாநாட்டில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, வினாடி - வினா, நாடகம், நடனம், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, தனி நபர் போட்டிகள், கலைப்போட்டிகள், குறள் விளையாட்டு, மற்றும் குறும்படம் ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். நிறைவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி நன்றி கூறினார். எழுத்தாளர் மரு.அறம், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். |
||||||||
by Kumar on 07 Feb 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|