நெஞ்சை தழுவும் நினைவுகள்-(சிறுகதை) வறுமையும் விடவில்லை செய்த தொழிலும் கைகூடவில்லை யுத்தம் என்ற கொடிய விசம் பரவியது தாங்க முடியாமல் அயல்தேசம் போனவர்கள் எத்தனைபேர். வெளி நாட்டு வாழ்க்கையில் சுகபோகம் அனுபவிப்பார்கள் என்று எத்தனை உள்ளங்கள் ஏங்கி அலைமோதும் ஆனால் இங்கு ஒவ்வொரு நிமிடமும் படும் துன்பங்களும் துயரங்களும் அவஸ்த்தைகளும் தாங்க முடியாமல் தன்னுயிரை தானாக மாய்த்த உறவுகள் எத்தனை பேர் …காய்ச்சல் தலைவலி என்று துடியாய்த்துடித்தாலும் எம்முடைய உடல் நலம் எம்முடை துக்கம் விசாரிக்க கூட சொந்தங்கள் இருந்தும் இல்லாத அனாதைகள் போல தவியாய்த் தவிக்கிறோம். அம்மா அப்பா அண்ணா தம்பி என்று அழுகிற கதறல் குரல் மட்டும் நான்க சுவர்களுக்கு மட்டுமே கேட்கும் .இந்த கொடிய துன்பத்தை சுமந்து வாழ்கிறார்கள் . திருமணம் ஆனவர்கள் மனைவியை பிரிந்த சோகமும் பெற்ற தெய்வங்களை பிரிந்த சோகமும் பெற்ற பிள்ளயை விட்டு பிரிந்து சென்ற சோகமும் பிள்ளையோடு இருந்து பாசம் பரிமாறும் வயதினிலே அயலான் தேசத்தில் டலருக்காகவும் யூரோக்காவும் ரிங்கிட்டுக்கும் ரியாலுக்கும் அன்னியவன் நாட்டில் அடிமாடுகள் போல உழைக்கிறார்கள் தங்கள் உறவுகளுக்காக பணம் அனுப்புகிறோம் கொஞ்சம் சந்தோசம் கலந்த முகபாவனை முகத்தில் துள்ளும் அந்த நேரத்தில் மட்டும்…..ஆனால் மனதில் ஒரு விததுன்பம் எம்மை அறியாமல் ஓடிக்கொண்டுதான் இருக்கும் இந்த வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் தள்ளாடுகிறார்கள்… பக்கத்து விட்டுத் திருமணங்கள் விசேட நாட்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்கள் எல்லாம் எம்தாயக சொந்தங்களுடன் கூடி சந்தோசம் அடைந்த நாட்கள்.முதல் காதல் வந்த போது முதலில் காதலியை சந்தித்த இடம் அவளோடு இருந்து பேசிய பனைமரத்தின் நிழலும் நாகமரத்தின் நிழலும்அந்த திருவிழாக்காலங்களில் காதலியுடன் கடைத்தெருக்களை சுற்றித்திரிந்த காலங்கள் அம்மா அப்பாவுக்கு தெரியாமல் காதலியை துவிச்சக்கர வணடியில்(சைக்கில்) ஏற்றித் திரிந்த காலங்கள் ஞாபஅலைகள் மனக் கதவுகளை ஒருனம் திறக்கிறது…..இந்த நாட்களை நினைக்கவில்லை மறந்து விட்டார்கள் என்று சொந்தங்களும் காதலியும் நினைக்கலாம் ஆனால் அத்தனை நினைவுகளையும் இரவும் பகலுமாக நெஞ்சில் சுமந்த வண்ணம் அழுது கொண்டு வாழுகிறோம்… கோயில் மணி யோசை கேட்டல் ஊரில் உள்ள நண்பர்கள் எல்லோரும் கூட்டமாக சென்று இறைவனை வணங்கும் நிகழ்வும்இறுதியில் பூசை முடிந்தவுடன் பிரசாதம் வேண்ட நான் முந்தி நீ முந்தி என்று வரிசையில் நின்ற நாட்கள் திருவிழா என்று வந்தால் ஊர் எங்கும் பட்டாசு சப்பதங்களும் இரவு நேரங்களில் சதங்கை ஒலி கேட்க மாட்டு வண்டியில் எம் ஊர்ச் சொந்தங்கள் இரவு நேர சாப்பாடும் எடுத்துக்கொண்டு செல்லும் அந்த மாட்டு வண்டி அணிவகுப்பை நிலாக் காலங்களில் இரசித் நினைவுகளும் எம் மனதை விட்டு அகல வில்லை இந்த மகிழ்ச்சியான காலங்களை நினைத்து நினைத்து தினம்தோறும் கண்ணீர் வடிப்பதுதான்…. வாழ்க்கையாகியது ஒவ்வொரு ஞாயிறு என்றால் எங்கள் உரில் பொது வேலை(சிரமதானப்பணி) என்ற ஒன்று நடை பெறுவது வழக்கம் ஒவ்வொரு வீதீக்கு வீதீ மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சுத்தம் செய்வது வழக்கம் வேலை முடிந்தவுடன் இளைப்பாற தேனீர் கொடுப்பார்கள் அதை எல்லாம் வேண்டி நண்பர்களுடன் இருந்து சுவைத்த காலங்கள் எம் மனதை விட்டு விலக வில்லை எங்களுடை ஊரின் அமைவிடம் மக்கள் குடியிருப்பை சுற்றி பரந்த வயல் வெளி மூன்று போகம் வேளாண்மை செய்வார்கள் மார்கழி மாதம் என்றால் மழைக்காலம் எங்கள் ஊரில் அடைமழை பொய்ந்தால் காடுகள் வயல் நிலங்களை சூழ்ந்து தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுக்கும் காலம் ஊரில் உள்ளவர்கள் வயது வித்தியாசம் இல்லாமால் தாங்கள் வளர்க்கும் நாய்களுடன் உள்ளுர் துப்பாக்கியுடனும்(சைற்றடியன் என்று சொல்வார்கள்) உருட்டுக்கட்டைகளுடனும் காடுகளுக்குள் புகுந்து மிருகங்களை தண்ணீரில் பாய்ச்சி ஓடமுடியாத அளவுக்கு செய்து முயல் மான் மரை. போன்ற மிருகங்களை ஊர் நண்பர்களுடன் வேட்டையாடிய காலங்கள் அந்த நேரத்தில் நீச்சல்அடிக்க தெரியாமல் தண்ணீரில் தத்தளிக்கும் நண்பர்களை ஒன்றாக கரை சேர்ந்த நினைவுகள்….. தூரதேசத்தில் வாழம் போது மார்கழி மாதம் வந்தால் அந்த நினைவுகள் ஒரு தடவை புரட்டிப் போட்டு விடும்…… மரணச் செய்தியோ அல்லது நல்ல நிகழ்வுகள் பார்க்க முடியாமல் வாடிய மனசுடன் அரபு நாட்டில் வாழ்பவனுக்கு அரபுக்கடலும் ஆசிய நாட்டில் வாழ்பவனுக்கு ஆசிய கடலும் ஐரோப்பாநாட்டில் வாழ்பவனுக்கு ஐரோப்பாகடலும் சொந்தம் என்று நினைத்து நம் தேசம் இருக்கும் பக்கத்தை விமானம் பறந்துவருகிற பக்கத்தையும் திரும்பிப்பார்த்து கடல் மாதவிடம் சோகத்தை கொட்டுவதே வாழ்க்கையாகி விட்டது……… எல்லாச்சோகத்திற்க்கும் கடல்தான் சொந்தமாகியது இருப்பவர்கள் துன்பத்தை சுமந்தவன்னம் வாழ்கிறார்கள் மீண்டும் போகிறவர்கள் துன்பத்தை தூக்கி எரிந்து விட்டு போகிறார்கள்…..ஊரில் உள்ளவர்கள் வெளி நாடு போகவேண்டும் என்ற ஆசையும் வெளி நாட்டில் உள்ளவர்கள் சொந்த தேசம் போக வேண்டும் என்ற ஆசையும் அவர்களின் மன வானில் கொடிகட்டி பறக்கிறது…மேல் சொல்லியுள்ள நினைவுகளும் துன்பங்களும் எத்தனை மனிதர்களின் வாழ்வில் அன்றும் இன்றும் நடைப்பயணமாக பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது………. -நன்றி- அன்புடன்- |