|
|||||
எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு பாரதி விழா |
|||||
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 26 ஆம் ஆண்டு பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் டிசம்பர் 11 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவிற்கு அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கே. தங்கவேலு தலைமையேற்றார்.
பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புடன் கூடிய விழா அறிமுகவுரையை நிகழ்த்தினார்.
பேராசிரியர் த. ராஜாராம் புதுமைப்பித்தன் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவர் தமது உரையில் பாரதியின் தனித்தன்மையை சிலாகித்து விளக்கிப் பேசினார். விருதாளர் தகுதிப் பட்டயத்தை பேரவையின் துணைத் தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் வாசித்தார். பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு பாரதி விருதை வழங்கி விழாச்சிறப்புரையாற்றினார். பாரதி விருது கேடயம் , தகுதிப் பட்டயம் மற்றும் ரூ 50,000 பரிசுத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
89 ஆம் வயதில் அடியெடுத்து வைக்கும் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேரவையின் விருது தனித்தன்மை வாய்ந்தது என்பதை விளக்கிப் பேசியதோடு பாரதியின் பரிமாணங்களை எடுத்துரைத்தார். மக்கள் சிந்தனைப் பேரவை எத்தகைய சிந்தனை மரபை அடியொற்றியது என்பதையும் ஆய்வு நோக்கில் எடுத்துரைத்தார்.
விருதாளர் முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி ஏற்புரை நிகழ்த்தினார். இவர் தனது ஏற்புரையில் இவருக்கு முன்னர் பேரவை சார்பில் பாரதி விருது பெற்றோரின் தனிச் சிறப்புகளையும் மேம்பட்ட தகுதிப்பாட்டையும் எடுத்துரைத்தார். அவ்வரிசையில் தாம் விருது பெற்றிருப்பது பெருமிதமளிப்பதாகக் கூறினார். நிறைவாக பேரவைச் செயலாளர் ந. அன்பரசு நன்றி கூறினார்.
மிகவும் பெரிதும் பிரம்மாண்டமுமான கொங்கு கலையரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பள்ளி , கல்லூரி மாணவ மாணவியர். ஏறத்தாழ மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் இளையோர் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றதும் அவர்கள் இறுதிவரை உன்னிப்பாக உரைகளைக் கேட்டதும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
பேரவையின் சீருடையுடன் நடைபெற்ற வீரார்ந்த மாணவர் அணிவகுப்புக்கு மகுடமாக விளங்கிய பாரதி ஜோதியை விருதாளர் பெற்றுக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியூட்டியது. முன்னதாக பாரதி ஜோதியை பாரதி இறுதிப் பேருரை நிகழ்த்திய கருங்கல்பாளையம் நூலகத்தில் மாலை 4 மணிக்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் பேராளர் கொளந்தவேல் ராமசாமி ஏற்றி மாணவர் அணிவகுப்பைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
மொத்தத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை நிகழ்வு எழுச்சியும் நெகிழ்ச்சியும் மிக்கதாக விளங்கியது. சென்னை உட்பட பல மாவட்டங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வருகை புரிந்து இந்நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் இது ஒரு மாநிலந்தழுவிய நிகழ்வாகத் திகழ்ந்தது.
|
|||||
by Swathi on 16 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|