மதுரையில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மதுரைக்கு வந்த பிரதமர் மோடிக்கு மீனாட்சி அம்மன் சிலையை நினைவுப் பரிசாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். விழாவில் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையம் (எய்ம்ஸ்) மருத்துவமனை மதுரை தோப்பூரில் ரூ.1.264 கோடி மதிப்பீட்டில் 201.75 ஏக்கர் பரப்பில் மத்திய அரசு அமைக்கிறது. இதனை 4 ஆண்டுகளில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 750 படுக்கை வசதி, 16 அறுவை சிகிச்சை கூடம், ஒரு குழுவுக்கு 100 மாணவர்களுடன் மருத்துவக்கல்லூரி, ஒரு குழுவுக்கு 60 மாணவர்களுடன் செவிலியர் கல்லூரி இடம் பெறுகிறது. 18 மருத்துவ நிபுணர்கள், சிறப்பு நிபுணர்கள் இடம் பெறுகின்றனர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ மற்றும் சுகாதார திட்டங்களின் பட்டியல் தந்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய பின்னர், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அத்துடன் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளிட்ட திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
|