போரில் நடக்கும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராடிய2 பேருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இதில், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. மிக உயரிய இவ்விருதுக்கு 131 பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். அதில் காங்கோ டாக்டர் டெனிஸ் மக்வெஜ், ஈராக்கின் யாசிடி இன பெண் ஆர்வலரான நாடியா முராட் ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
போரில் பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வர இருவரும் மேற்கொண்ட முயற்சிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈரானின் சின்ஜார் நகரை சேர்ந்த யாசிடி இனத்தை சேர்ந்தவர் 25 வயது பெண் நாடியா முராட். கடந்த 2014 ல் சின்ஜார் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய போது இவர் பாலியல் அடிமையாக மொசூலுக்கு கடத்திச் செல்லப்பட்டார். அங்கு 3 மாதங்கள் தீவிரவாதிகளால் கூட்டு பலாத்காரம், பாலியல் வன்முறை, தாக்குதல்களுக்கு ஆளாகி தப்பி வந்தார்.
அதன்பிறகு, போரினால் ஆண்கள் கொல்லப்படும் நிலையில், பெண்கள் எந்த அளவுக்கு பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள், சிறுவர், சிறுமிகளுக்கு நேர்ந்திடும் கொடுமைகள் குறித்து உலகிற்கு முராட் வெளிப்படுத்தினார்.
மேலும், தனது யாசிடி இன மக்களுக்காகவும், போரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாலியல் அடிமைகளுக்கான ஐநா.வின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார்.
காங்கோ நாட்டை சேர்ந்த 63 வயதான டாக்டர் டெனிஸ் மக்வெஜ், கடந்த 20 ஆண்டுகளாக பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனது மருத்துவ சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அளித்து வருகிறார். கடந்த 1999ம் ஆண்டு தெற்கு கிவு பகுதியில் மருத்துவமனையை நிறுவி, அதில், போரில் பலாத்கார வன்முறைக்கு ஆளாகும், பெண்கள், சிறுமிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் சுமார் 3,500 பெண்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறார். மக்வெஜ், முராட் இருவருக்கும் அக்டோபர் 10ம் தேதி ஓஸ்லோவில் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
|