LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

சிங்காரக் குருவி

பத்து நாள் வெளியூர் பயணத்தை முடிச்சிட்டு இப்பத்தான் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தோம்.

 

பள்ளிக்கூடம் விடுமுறை விடுவதற்கு முன்னாடியிலிருந்து சித்ராவும் ,தம்பி மிதுனும் அப்பா அம்மா கிட்ட சொல்லி சொல்லி ஒத்துக்க வச்சிட்டாங்க. அம்மாவும் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி தயாரா இருந்தாங்க. அப்பா வியாபாரம் செய்வதால் அவர் நினைத்த  நேரத்துக்கு விடுப்பு எடுத்துக்கலாம். அப்படி வட இந்தியா, தென்னிந்தியான்னு பல நாட்கள் சுத்திவிட்டு, பல இடங்களைப் பார்த்துவிட்டு  இன்றுதான் வீட்டுக்குத் திரும்ப வருகிறோம். பத்து நாளா வீடு பூட்டிக் கிடக்கிறது.

 

"சித்ரா வீட்டுக்குப் போனதும் அம்மா அலுவலகத்திற்குப் போய்விடுவார். நாம இரண்டு பேரும் வீட்டை சுத்தம் பண்ணப்போறோம். வீடு பத்து நாளா பூட்டிக்கிடப்பதால் தரையெல்லாம் தூசு படிந்திருக்கும். கூரையெல்லாம் ஒட்டடை பிடிச்சிருக்கும். சரியா?'' அப்பா கேட்டார்.

 " கவலைப்படாதீங்கப்பா என்னால் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யறேன்பா.'' சித்ரா சொன்னாள்.

 

நானும் உதவி செய்யறேன்பா'' தம்பி மிதுனும் சொல்ல எல்லாரும் சிரிச்சாங்க. "ஹைய்யா வீடு வந்தாச்சு. எல்லாரும் காரை விட்டு இறங்கினாங்க. ஒட்டுநர் டிக்கியைத் திறக்க பெட்டியை பைகளையெல்லாம் அப்பா கீழே இறக்கி வைத்தார்.

 

அம்மா ஒட்டுநருக்குப் பணம் கொடுத்து அனுப்பினாங்க. அம்மா வீட்டுக் கதவைத் திறக்க வீட்டுக்குள் கைதாகிக் கிடந்த காற்று வேகமாக வெளியே போனது. பொருட்களை எல்லாம் ஒரு அறைக்குள்ள வைத்துவிட்டு  தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு அம்மா அலுவலகத்திற்குப் போனார்.

நானும் அப்பாவும் வீட்டைச் சுத்தமாக்கத் தொடங்கினோம். ஒட்டடைக் குச்சியை எடுத்துக்கொண்டு ஒட்டடையை சுத்தம் செய்யத் தொடங்கியிருந்தார் அப்பா. முதலில்  நன்றாக காற்றும்  வெளிச்சமும் உள்ள வரட்டுமென்று நினைத்து நான் எல்லா அறைகளோட சன்னல்களையும் ஒவ்வொன்றாக திறந்துவைத்திருந்தேன். எல்லா அறைகளையும் திறந்து முடித்துவிட்டு கடைசியாக சமையல் அறையில்  சன்னலை திறக்கப் போனேன்.

தம்பியோ ஒரு துணியைச் சுருட்டி ஒரு பந்து மாதிரிக் கட்டி அதை ஒட்டடை இருக்கிற இடமாகப் பார்த்து எறிவான். பந்து வலையில் சென்று . கீழே விழும்போது ஒட்டடையையும் சேர்ந்து வந்துவிடும். அவனுக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும் . விளையாட்டுக்கு விளையாட்டு, வேலைக்கு வேலை. நான் சமையக்கட்டிலுள்ள சன்னலைத் திறந்தேன். அங்கே என்ன சில குப்பைகள் இருக்கிறதே அப்படீண்ணு நினைத்து விளக்கமாறை எடுத்திட்டு வந்து அதை நல்லா தட்டிவிட்டேன். அது கீழே விழுந்திச்சு. அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் தென்னைமட்டையோட நாரு, சின்னக் குச்சியெல்லாம் கிடந்தது. நான் சன்னல் வழியா கையை விட்டு அவற்றையெல்லாம்  பிடுங்கி வெளியே எறிந்தேன்.

சன்னல் கதவுகளையெல்லாம் நல்ல அகலமா திறந்து வைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தேன். இரண்டு நிமிடம் இருக்கும், எங்கிருந்தோ ஒரு குருவி சர்..ன்னு வீட்டுக்குள்ள வந்து ஒரு சுத்து சுத்திவிட்டு சன்னல் ஓரமாப் போய் உட்க்கார்ந்து கீழே பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அதை சித்ரா கவனிக்கவில்லை. இரண்டு நாளாகியிருக்கும். ஒரு நாள் காலையில் சன்னல் கதவைத் திறந்தால், மறுபடியும் சில குச்சிகள் நாருகள் அங்கே கிடந்தது. மறுபடியும் நான் கையை விட்டு அதையெல்லாம் புடுங்கிக் கீழே போட்டேன். பின்னாடி இருந்த மரத்திலிருந்து அதைப் பார்த்திட்டிருந்த அந்தச் சிட்டுக்குருவி வேகமாப் பறந்து வந்து என்னோட தலையைச் சுத்தி ஒரு முறை பறந்து மறுபடியும் சன்னல் ஓரமாகப் போய் உட்கார்ந்திருந்தது.

 

நான் குருவியைப் பார்த்தேன். "ஒ அது உன்னோட கூடா. இங்க வந்து கூடு கட்டினா நான் எப்படி ஜன்னல் திறப்பேன்”. வேறு எங்கயாவது போய் பத்திரமான இடத்துல கூடு கட்டு'' அப்படீண்ணு சொல்லிட்டு நான் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன்.

 

கீ.. கீ... ண்ணு அந்தக் குருவி கத்தியது . குருவியோட மொழி நமக்குத் தெரியாதுண்ணு சொன்னாலும் அது கத்தறதைக் கேட்டா அதுகோபத்தோட இருக்குண்ணு எளிதாகப் புரிந்துகொள்ளலாம் .

 

அடுத்தநாள் நான் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டேன்... அப்போ அந்தக் குருவியோட சத்தம் கேட்டமாதிரி இருந்தது. ஆனா அதை நான் பெரிதாக  எடுத்துக்கொள்ளவில்லை. வீதிக்கு வந்தேன். என் தோழிகளும் என்னோட சேர்ந்துகொண்டார்கள். நாங்கள் பல விடயங்களைப் பேசிக்கிட்டே நடந்தோம்

"சித்ரா உன்னோட தலையில் என்ன? வட இந்தியா  போயிட்டு வந்தியே அங்குள்ள அலங்காரம் இப்படித்தானா. தேங்காமட்டையோட நாரு, சின்ன கம்பு எல்லாம் வச்சுதான் தலை பின்றாங்களா? இல்ல உன் தலையில் கூடு கட்டறதுக்கு தடபுடலா ஏற்பாடு நடக்குதா?'' அப்படியென்று தோழியொருத்தி கேட்டாள்.

நான் தலையைத் தொட்டுப் பார்த்தேன். தலையில் தேங்கா மட்டையுடைய நாரு, சின்னக் கம்பு எல்லாம் இருந்தது. அவற்றை  தட்டி விட்டேன். வீடு பத்துப் பன்னிரண்டு நாள் வீடு பூட்டிக் கிடந்ததும், சன்னலோரமா ஒரு குருவிக்கூடு இருந்ததும், வீடு சுத்தம் பண்ணும்போது குருவிக்கூடு களைந்துபோனதும் என்று  எல்லாவற்றையும் என் தோழிகளிடம் சொன்னேன்.

 

"ஏய் அப்படீண்ணா இது அந்தக் குருவியோட வேலையாத்தான் இருக்கும். அதோட கோபத்தை இப்படி தீத்துக்குது'' தோழிகளில் ஒருத்தி சொன்னாள்?

 

"ம் பாக்கலாம்'' அப்படீண்ணு சொல்லிட்டே பள்ளிக்கூடத்துக்கு வேகமாக நடந்தோம் அடுத்தாநாளும் அதே மாதிரி என்னோட தலையில தேங்காமட்டை நாரு இருந்தது.

 

"ஐய்யய்யோ இதென்ன வம்பா போச்சே...'' அப்படீண்ணு நினைத்த நான் அடிக்கடி தலையில் எதாவது இருக்கிறதா என்று தடவித் தடவிப் பார்க்கத்  தொடங்கினேன். அடுத்தநாள் அந்தக் குருவி எங்காவது இருக்கிறதா  என்று பார்த்தால். அது சன்னலுக்கு அருகிலுள்ள மரக்கொம்பில் உட்க்கார்ந்து  வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தது.

 

''ஒஹோ இது என்னை  கண்காணிச்சுகிட்டே இருக்கா. நான் வெளியே கிளம்பியதும்  மேலிருந்து தேங்காமட்டை நாரு, குச்சி, கம்பு எல்லாத்தையும் என் தலைமேல்  போடுதா? இதுக்கொரு முடிவுகட்டணுமே''

 

"ஏய் குருவி, நீ சன்னலோரமா கூடு வச்சது உன்னோட தப்பு, நான் தெரியாமல் சன்னலைத் திறந்தேன். அது கலைந்துவிட்டது. சுத்தமாக இருக்கட்டும் என்று மிச்சம் மீதியிருக்கிறதயெல்லாம் பிடுங்கி  எறிந்தேன். அது என்ன தப்பா?''அப்படீண்ணு சத்தமாகக் கேட்டேன்.

 

அந்தக் குருவி கீ... கீ... ண்ணு பறந்து ஒரு சுத்து சுத்தீட்டு மறுபடியும் மரக்கொம்புல போய் உட்கார்ந்துகொண்டது. எனக்கு இன்னும் கோபம் தீரவில்லைன்னு அந்தக் குருவி சொல்வதுமாதிரி எனக்குத் தெரிந்தது. அடுத்தநாள் நான் மிகவும் கவனமாக இருந்தேன். வெளியே இறங்கும்போது குருவி வருகிறதா? தலையில் எதாவது போடுகிறதா என்று பார்த்துக்கொண்டே நடந்தேன்.

 

தோழிகள் வந்தவர்கள் முதலில் என் தலையைத்தான் பார்த்தார்கள். தலையில் எதுவும் இல்லை. "என்ன குருவியோட சண்டையெல்லாம் தீர்ந்திருச்சா?'' அப்படியென்று கேட்டார்கள். அது கத்தியதை கேட்ட எனக்கு அப்படித் தெரியலயே என்று பதில் சொன்னேன்.

 

வகுப்பில் நடந்த பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே  நடந்ததில் குருவியை நான் மறந்தே போனேன். சட்டுண்ணு "ஏய் மறுபடியும் தலையில் தேங்கா மட்டை நாரு'' என்று கத்தினாள் சியாமளா. பிறகு அவளே அதை தட்டியும் விட்டாள். எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. வீட்டுக்கு வந்து நான் சன்னலைத் திறந்து குருவி எங்கேயாவது இருக்கா என்று பார்த்தேன். அது மறக்கொம்பிலிருந்தது.

 

"இங்கே பாரு, நான் தெரியாமச் செஞ்சிட்டேன். தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடு. இப்ப அடிக்கடி தலையைத் தடவிப் பாக்கிறது ஒரு பழக்கமாவே ஆயிருச்சு'' அப்படியென்று கெஞ்சாத குறையாகச் சொன்னேன். ஆனால் அடுத்தநாளும் என் தலையில் தேங்கா மட்டை நாரு இருந்தது.

 

நான் அம்மாவிடம் சொன்னேன். அதுக்குத் தீனியும் தண்ணீரும் வச்சுப்பாரு என்று சொன்னார் அம்மா. நான் காலையில் ஒரு தட்டில் கொஞ்சம் தானியங்களும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வைத்தேன். ஆனால் அன்றும் அது சும்மா இருக்கவில்லை. நான் கவனிக்காத போது என் தலையில் தேங்காய்மட்டை நாரு போட்டுவிட்டு சென்றது.  எனக்கு உண்மையிலே அழுகை அழுகையாய் வந்தது.

 

அடுத்த நாள் "ஏய் சித்ரா உன்னையும் உன் குருவியையுப் பற்றி நான் பாட்டெழுதியிருக்கிறேன்" அப்படீண்ணு ஒரு துண்டு காகித்தை என்னிடம் தந்தாள் என் தோழி. "பெரிய பெரிய அரசர்களையும் தலைவர்களையும் பாடுபொருளா வச்சு பாட்டெழுதுவாங்க. இப்போ பாரு உன் குருவியும் பாடுபொருளா மாறிருச்சு" காவேரி சொன்னாள்.

 

இதை ஏன் நீ அந்தக் குருவிக்குப்பாடிக்காட்டக் கூடாது. குருவி ரொம்ப சந்தோஷப்படலாம். உனக்கு தொல்லை தருவதை நிறுத்தலாம்" சியாமளா சொன்னாள்.

 

பள்ளிக்கூடம் விட்டுப் போனதும் ஜன்னலைத் திறந்து பார்த்தால்  அந்தக் குருவி அதே மரக்கொம்பில உட்க்கார்ந்து வீட்டைப் உற்று பார்த்துக்கொண்டிருந்தது.

 

"இங்க பாரு என் தோழியொருத்தி உன்னையும் என்னையும் பற்றிப் பாட்டெழுதியிருக்கா. அதை நான் உனக்குப் பாடிக்காட்டப் போறேன்." என்று சொன்னேன். குருவி தலையைச் சாய்ச்சு என்ன ஒருமாதிரியாப் பார்த்தது. நான் சியாமளா தந்த துண்டுக் காகிதத்தை எடுத்து அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினேன். அந்தப் பாட்டு இதுதான்.

 

சின்னச் சின்னக் குருவி

சிங்காரக் குருவி

ஜன்னலோரம் வந்து

கூடு ஒண்ணு கட்டிச்சு

சின்னப் பொண்ணு ஒருத்தி

சின்னக் கையை நீட்டி

சன்னலோரக் கூட்டை

சின்னாபின்னமாக்கிட்டா

கோபம் கொண்ட குருவி

பின்னாலே போயி

பின்னட்ட

கொண்டையிலே

கூடு ஒண்ணு கட்டிச்சு.

 

பாட்டுப்பாடி முடிஞ்சதும் அந்தக் குருவி பறந்து வந்து சன்னலோரமா வந்து உட்க்கார்ந்தது. காலையில் நான் வைத்திருந்த தட்டிலுள்ள தானியத்தைக் கொத்தித் தின்றது. பிறகு என்னைப்  பார்த்து கீ.. கீ... ன்னு கத்தியது. இப்போ கத்தியது மகிழ்ச்சியான கடத்தல் என்று யார் கேட்டாலும் சொல்லுவாங்க.

அன்றிலிருந்து எப்பவும் நான் சன்னலோரத்தில ஒரு தட்டில் தானியம் வைக்க மறந்ததே இல்லை.

by Swathi   on 11 Mar 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
மேஜிக் மேஜிக்
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
கருத்துகள்
30-Aug-2020 03:14:57 Ruban said : Report Abuse
Hi sir this story naan my bloggerla podalama sir please
 
14-Aug-2020 10:08:43 Radhika said : Report Abuse
our kids love this story very much... they want to hear this story whenever they of a story.. singarakkurvi song is very nice and kids friendly.. they even turned this song into a game pretending one to be the bird and other the girl.. they try to sing this song and catch the other person to build a nest in their head.. Thanks a lot for this
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.