பாகிஸ்தானின், பெஷாவர் நகரில், செயல்பட்டு வரும் ஒரு இஸ்லாமிய பள்ளியை, தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடமாக, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், கஞ்ச் மதரசா என்ற பெயரில் இயங்கி வரும் இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் அல்-குவைதா, தலிபான், லஷ்கர் -இ- தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த பள்ளியில் தான் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மதரசாவின் தலைவர், அமினுல்லா. இவர் கடந்த 2009ல், ஐ.நா.,சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இந்த இஸ்லாமிய பள்ளிக்கு கிடைக்கும் நன்கொடைகளை, மூன்று தீவிரவாத அமைப்புகளுக்கு, இவர் வழங்கி வந்துள்ளார். அறப்பணிக்காக அளிக்கப்படும் நிதியை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வரும் இந்த பள்ளியுடன், அமெரிக்கர்கள் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது. என அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|