அமெரிக்காவில் இன்று பல்வேறு நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தமிழ்ப் பள்ளிகளும் நடந்து வருகின்றன. அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பேரவை 32 ஆண்டுகளாக சூலை மாதம் முதல்வாரம் தமிழ்மாநாட்டை நடத்தி வருகின்றது.
இவற்றுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்தவர்கள் -அக்காலங்களில் இன்றுபோல் பெருமளவில் தமிழர்கள் அமெரிக்காவில் குடியேறாமல் இருந்தாலும் சில பெருநகரங்களில் தமிழ்ச்சங்கங்களைத் தோற்றுவித்து வளர்த்தவர்கள். சிகாகோ, நியூயார்க், வாசிங்டன், நியூஜெர்சி, பிலடெல்பியா போன்ற நகரங்களில் தமிழ்ச்சங்கங்கங்களை உருவாக்கியவர்கள். எந்த வசதிகளும் இல்லாத அக்காலங்களில் கையெழுத்திலேயே அறிவிப்புகளையும், இதழ்களையும், பதாகைகளையும் எழுதி நடத்தினார்கள்.
சிகாகோ தமிழ்ச்சங்கம் மிகப்பழமையானது. இந்த ஆண்டு பேரவை மாநாட்டோடு இணைந்து தங்களது பொன்விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
அமெரிக்காவின் வேறு சில இந்திய மொழிக்குழுக்கள் திரைப்படக் கேளிக்கைகளையும், இந்துமதச் சடங்குகளையும் மட்டுமே கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தமிழ்ச்சங்கங்களும் பேரவையும் தமிழின் தொன்மங்கள், மதச்சார்பற்றப் பண்பாடு மற்றும் தமிழர் உரிமைகள் போன்றவற்றை எப்பொழுதும் உயர்த்திப் பிடித்து வருகின்றன. அதற்கு மிகமுக்கியமான வித்து சிகாகோ தமிழ்ச்சங்கத்தில் ஊன்றப்பட்டது என்றால் மிகையாகாது. அவர்களுடைய உழைப்பும், அறிவுக்கூர்மையும் பாராட்டுக்குரியது.
சிகாகோ தமிழ்ச்சங்கம் அக்காலத்தில் மிக அழகாக தம் நிகழ்ச்சி நிரலைக் கையால் எழுதிப் பரப்புரைகளைத் தயாரித்திருப்பதை இங்கே காணலாம். நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தையும் பாருங்கள்.
|