|
||||||||
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் - இண்டியா கூட்டணியின் வேட்பாளர் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி |
||||||||
![]()
எதிர்க்கட்சிகளான இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் அகுலா மைலாரம் என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1946-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி பிறந்தவர் சுதர்சன் ரெட்டி.
ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற சுதர்சன் ரெட்டி, 1971, டிசம்பர் 27-ம் தேதி ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ரிட் மற்றும் உரிமையியல் வழக்குகளைக் கையாண்ட சுதர்சன் ரெட்டி, 1988-90-ம் ஆண்டுகளில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். 1990-ம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகச் சுமார் 6 மாத காலம் பணியாற்றிய இவர், உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
1995, மே 2-ம் தேதி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் சுதர்சன் ரெட்டி. அதனைத் தொடர்ந்து, 2005 டிசம்பர் 5-ம் தேதி கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2007 ஜனவரி 12-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுதர்சன் ரெட்டி, 2011 ஜூலை 8-ம் தேதி ஓய்வு பெற்றார்.
2013-ல் கோவா மாநில முதல் லோக்அயுக்தாவாக நீதிபதி சுதர்சன் ரெட்டி நியமிக்கப்பட்டார். எனினும், தனிப்பட்ட காரணங்களால் சில மாதங்களில் அப்பதவியை இவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில்தான், இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் சுதர்சன் ரெட்டி.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
|
||||||||
by hemavathi on 19 Aug 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|