|
|||||
பொருளாதார ஆய்வறிக்கையும் அதன் மீதான கருத்துக்களும் |
|||||
பொருளாதார ஆய்வறிக்கையும் அதன் மீதான கருத்துக்களும், எதிர் வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார நிலமைகள் குறித்து நிதியமைச்சரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் இடம் பெறக்கூடிய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை சமர்ப்பித்துள்ளார். அதில் சில குறிப்பானவைகள் வருமாறு: 1) நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம் முதல் 6.7 சதவீதம் வரை இருக்கும். மானியம் என்ற பெயரில் செலவிடப்படும் தொகையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். 2) பெட்ரோலியப் பொருள்களின் விலையை முக்கியமாக டீசல், கேஸ் உள்ளிட்டவற்றின் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டிலும் மாற்றி அமைப்பது அவசியம். ஆனாலும், இதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கி, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமை பெட்ரோலிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 3) வீட்டு உபயோகத்துக்காக மானிய விலையில் வழங்கும் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 4) அடுத்த மாதத்தில் பணவீக்கம் 6.2 முதல் 6.6 சதவீதத்துக்குள் குறையும். அதே நேரத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் கவலை அளிப்பதாகவே உள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 5) இப்போது அளிக்கப்பட்டு வரும் மானியங்கள் பயனாளிகளுக்கு நேரடியாகவும், முழுமையாகவும் கிடைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான முயற்சிதான் மானியங்களை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் நடவடிக்கை. 6) வரியை அதிகரிக்காமல் வரியாக வசூலிக்கப்படும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வரி விதிப்பு இனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வரி விகிதம் அதிகரிக்கப்பட மாட்டாது. வரி வருவாய், வரியில்லாத வருவாய் இரண்டுமே குறைந்துள்ளது. அதே நேரத்தில் மானியத்துக்கான தொகை அதிகரித்துள்ளது. முக்கியமாக பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியங்கள். இது அரசு தனது செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி. அரசின் நிதிநிலையைச் சீரமைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கடந்த சில மாதங்களாக தீவிர நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. 7) கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் நீடித்து வந்த பொருளாதார மந்த நிலை நீங்கி, வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. எனவே 2013-14-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார நிலையும் வலுப்படும். 8) சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) அனுமதிக்கப்பட்டுள்ளது நாட்டில் உள்ள சிறு வணிகர்களை பாதிக்காது. பெரிய அளவிலான சில்லறை வர்த்தகக் கடைகளை நடத்தி வரும் நிறுவனங்களுக்கு சிறு வணிகர்கள் கடும் சவாலாக இருப்பார்கள் என்று ஆய்வு அறிக்கையின் அடிப்படையில்தான் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வர்த்தகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளும், சிறு தொழில் நிறுவனத்தினரும் பயனடைவார்கள். ஏனெனில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களில் 30 சதவீதத்தை இந்திய சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்துதான் கொள்முதல் செய்வார்கள். 9) இக்கொள்கைகளின் படி ஆந்திரம், அசாம், தில்லி, ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரகண்ட், டையு-டாமன் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அன்னிய நேரடி முதலீட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. மேற்கண்ட பொருளாதார ஆய்வறிக்கை குறித்து பிறகட்சிகளின் கருத்துக்கள் வருமாறு: அருண் ஜேட்லி (பாரதிய ஜனதா கட்சி): கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9 சதவீதத்தை ஒட்டி இருந்த பொருளாதார வளர்ச்சி, படிப்படியாகக் குறைந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் இது 5 சதவீதமாக சரியும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறியிருப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முந்தைய கணிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் 9 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து 9 சதவீத வளர்ச்சியை எட்டவில்லை எனில், வறுமையை ஒழிக்க முடியாது. அத்துடன் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி போதுமான அளவில் கிடைக்காது. சர்வதேச நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் தொழிற்சாலை உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும். ஷாநவாஸ் ஹுசைன் (பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்): இந்த ஆய்வறிக்கை நாட்டின் பொருளாதார நிலையை அரசுக்கு எடுத்துக் கூறுவதாக உள்ளது. வளர்ச்சி சரிந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரியவில்லை. சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) : ஆய்வறிக்கை மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் (சி.எஸ்.ஓ.) புள்ளி விவரங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது தொடர்பாக நம்பிக்கை தரும் அறிவிப்புகள் எதுவும் இல்லை. வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதால்தான் விலைவாசி அதிகரித்துள்ளது என குறிப்பிட்டிருப்பது பொருத்தமற்றது. குருதாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக உள்ள சூழ்நிலையில், வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதே விலைவாசி உயர்வுக்குக் காரணம் என கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. |
|||||
Economic report and other opinianes | |||||
by MAYIL on 28 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|