LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 691 - அமைச்சியல்

Next Kural >

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் - மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.(கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் -வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க- அவரினின்று மிக நீங்காமலும் அவரொடு மிக நெருங்காமலும் தீயருகே குளிர்காய்வார் போல இடைப்பட்ட இடத்தில் நிற்பதும் இருப்பதும் செய்க. 'அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.' "அருளு மேலர சாக்குமன் காயுமேல் வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம் மருளி மற்றவை வாழ்த்தினும் வையினும் அருளி யாக்க லழித்தலங் காபவோ." (சீவக. 247) "தீண்டி னார்தமைத் தீச்சுடும் மன்னர் தீ ஈண்டு தங்கிளை யோடுமெ ரித்திடும் வேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான்" ( சீவக.250) 'இகல் வேந்தர் ' என்றும் , 'அகலா தணுகாது தீக்காய்வார் போல்க' என்றும் கூறினார். அமைச்சர் முதலியோர் மிக நெருங்கின் மதியாமைக் குற்றம்பற்றித் தண்டிப்பவரும், மிக நீங்கின் மந்திரச் சூழ்வினைக்குப் பயன்படாத நிலைமையினருமான அரசர்க்கு; குளிர் காய்வார் மிக நெருங்கின் சுடுவதும் மிக நீங்கின் குளிர்போக்காதது மான தீயை, உவமித்தது மிகப் பொருந்தமான வினையுவமையாம்
கலைஞர் உரை:
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.
Translation
Who warm them at the fire draw not too near, nor keep too much aloof; Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.
Explanation
Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.
Transliteration
Akalaadhu Anukaadhu Theekkaaivaar Polka Ikalvendharch Cherndhozhuku Vaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >