இக்கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைத் திருவிழா என்னும் வித்தியாசமான நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கின்றனர். இது அம்மன் கோயிலாக இருந்தாலும், குங்குமம் பயன்படுத்துவதில்லை. கிருஷ்ணர் கிழக்கு முகமாகவும், அம்மன் மேற்கு முகமாகவும் அருள்பாலிக்கின்றனர். கண்ணகி கணவனை இழந்த கோலத்தில் பகவதியாக அருள்பாலிப்பதால் முல்லைப்பூ, பத்தி, குங்குமம் ஆகியவை சந்நிதியில் பயன்படுத்துவதில்லை. கோயிலுக்குள் அழகான தீர்த்தக்குளம் உள்ளது.
கண்ணகி வரலாற்றை அடிப்படையாக கொண்ட தோற்றப்பாட்டு மாசி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையிலும், சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடக்கும் திருவிழாவிலும் பாடப்படுகிறது. விழா துவக்க நாளில், குரல் வளமுள்ள பக்தர்கள் இதைப் பாடுவர். பகவதியின் கதை இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்டால், நமது பாவங்களும், பீடைகளும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாடல் கோஷ்டியினர் 41 நாட்கள் விரதமிருந்து வருகின்றனர். |