கருவறையுள் சுதை வடிவில் அம்பிகை பச்சைத் திருமேனியளாய் அருட்காட்சி தருகிறாள். இவள் சன்னதியில் பக்தர்களுக்கு பச்சைநிற குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. பொதுவாக சிவனுக்கு திங்கட்கிழமையும், அம்மனுக்கு ஆடி வெள்ளியும் உகந்ததாகும். ஆனால் இத்தலத்தில் ஆடி திங்கட்கிழமைகளில் விழா கொண்டாடப்படுவது சிறப்பு.
இதை சோமவார விழா என அழைக்கின்றனர்.பார்வதிதேவி, ஈசனின் இடபாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில், முதலில் கண்ட ஊர் முறுகப்பட்டு என்றும், பின்னர் கடைசியாகத் தங்கி பிரயாணப்பட்ட இடம் பிரயாணப்பட்டு என்றும் கூறப்படுகிறது.
பிரயாணப்பட்டு தற்போது பெலாம்பட்டு என்று அழைக்கப்படுகிறது. மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் அன்னை மணல் லிங்கம் பிடித்த இடத்தில் தற்போது சுமார் நான்கடி உயரத்தில் கல் லிங்கம் அமைந்துள்ளது. |