வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி திண்டிவனம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கடந்த மே 1-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் அளித்த பேட்டியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் அதனைத் தொடர்ந்து திண்டிவனம் பகுதியில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும் திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் சுதாகர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அன்புமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு கடந்த 7-ம் தேதி திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இந்நிலையில், அவரது சார்பில் வழக்கறிஞர் வியாழக்கிழமை திண்டிவனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சந்தோஷ், வரும் 15 நாள்களுக்கு சென்னை தியாகராஜ நகரில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் அன்புமணி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
|