தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் திருநெல்வேலியைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் சரோஜா வெற்றிபெற்று டிஎஸ்பியாக தேர்வு பெற்று உள்ளார்.
திருநெல்வேலி சன்யாசி கிராமத்தைச் சேர்ந்த திரையரங்க ஊழியர் முருகானந்தம்- பீடி சுற்றும் தொழிலாளி பால்தாய் தம்பதியின் மகள் சரோஜா. திருநெல்வேலி மீனாட்சிபுரம் மாநகராட்சி பள்ளியில் படித்தவர்.
வறுமையால் கல்லூரி சென்று உயர் கல்வி பயில முடியவில்லை. இதனால், மாண்டிசோரி கல்வி பயின்று தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பணிபுரிந்து கொண்டே தொலைநெறி கல்வி மூலம் தமிழில் பி.லிட், எம்.ஏ. முடித்த இவர், தொடர்ந்து பல்வேறு போட்டித் தேர்வுகளையும் எழுதி வந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வுக்கு தயாரானார்.
தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதினார். தற்போது, தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பியாக பணிபுரிய சரோஜா தேர்வாகி இருக்கிறார். ஒரு பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆவது பாராட்டிற்குரியது ஆகும்.
|