|
|||||
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார் |
|||||
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 47. பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 25/01/2024 அன்று மாலை 5:20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்ததாகவும் அவரது உடலை நாளை சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பு லங்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பில் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இளையராஜா, மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. ராமன் அப்துல்லா, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் அவர் பாடியுள்ளார்.
பவதாரிணி பாடிய முக்கியமான பாடல்கள்
பவதாரிணி பல முக்கியமான பாடல்களைப் பாடியுள்ளார். பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார். எம்.குமரன் படத்தில் வரும் அய்யோ அய்யோ பாடல், தாமிரபரணி படத்தின் தாளியே தேவையில்ல பாடல் போன்ற வெற்றி பாடல்களைப் பாடியுள்ளார் பவதாரிணி.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பவ தாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப் படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு" எனத் தெரிவித்துள்ளார்.
பத்திரமாகப் போய் வா, அன்புப் பெண்ணே
அதேபோல், காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னைத் தாலாட்ட வருவாளா, ஆயுத எழுத்து படத்தின் யாக்கைத்திரி, காக்க காக்க படத்தின் என்னைக் கொஞ்சம் மாற்றி போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்கப் பாடல்களை அவர் பாடியுள்ளார். இளையராஜா மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவருக்கு இரங்கல் தெரிவித்து பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “எனக்குத் தெரிந்த நல்ல மனிதர்களில் பவதாரிணி இளையராஜாவும் ஒருவர். பத்திரமாகப் போய் வா, அன்புப் பெண்ணே!” என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிர் மிலெங்கே என்ற படத்திலும் இசையமைத்தார்.
பவதாரிணியின் குரல் மென்மையானது, தனித்துவமானது
தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரிணி, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். “பவதாரிணியின் குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். அவரது குரல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான குரல். இவ்வளவு இளம் வயதில் இப்படிப் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார் இசையமைப்பாளர் தினா. பாடகி பவதாரிணியின் குரல் மிகவும் மென்மையானது, தனித்துவமானது என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட ஏராளமானவர்கள் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். |
|||||
by Kumar on 25 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|