மும்பையில் செபி அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக் குழுவுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) பங்குகளை தமிழக அரசுக்கு ரூ.500 கோடிக்கு விற்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ள என்.எல்.சி. தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று, நேற்று இரவு முதல் வேலைக்கு சென்றனர். இந்த கூட்டத்தில் பங்குகளை வாங்கும் தகுதியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையை ஐந்து என நிர்ணயம் செய்யவும், மொத்தம் உள்ள 5 சதவீத பங்குகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு (டிட்கோ) 25 சதவீத பங்குகள், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்துக்கு (சிப்காட்) 45 சதவீத பங்குகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்), தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம் (டுபிட்கோ), தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவர்பின்) ஆகியவற்றுக்கு தலா 10 சதவீத பங்குகள் என்ற அடிப்படையில் ஒதுக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
|