இனம், மதப்பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பெயரை மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ஆர்.கண்ணன் கோவிந்தராஜுலு தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது,
இந்திய தேர்தல் கமிஷனிடம் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளன. மத்திய, மாநில அரசுகள், மதச்சார்பு அற்றவை. எனவே மதம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பெயர் மற்றும் பாகுபாடுகள் காட்டக்கூடாது. ஆனால், கட்சிகளின் பெயரில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. பெயர்களில் பாகுபாடு காட்டி, மக்களைப் பிரிக்கும் கட்சியின் பெயர்களை மாற்றி புதிய பெயர்களை சூட்டவேண்டும் என இந்திய தேர்தல் கமிஷனுக்கு சமீபத்தில் நான் மனு செய்திருந்தேன். ஆனால் இதுவரை எனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்த கட்சிகளின் பெயரை மாற்றுவதற்கு இந்திய தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என கோவிந்தராஜுலு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு அக்டோபர் 8–ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
|