உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக யாத்திரிகர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர தமிழக அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிறகு தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 399 யாத்திரிகர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் யாத்திரிகர்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்புப் பிரதிநிதியின் தலைமையில், டெல்லி தமிழ்நாடு இல்லத் தலைமை ஆணையர், தமிழ்நாடு வருவாய்த் துறை செயலாளர் மற்றும் மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழு உத்தரகண்ட் மாநில தலைமையகமான டேராடூனுக்கு உடனடியாக செல்ல உத்தரவிட்டுள்ளேன். இந்த உயர்மட்டக் குழு, உத்தரகாண்ட் மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களை உடனடியாக அரசு செலவில் ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் அழைத்து வரவும், அங்கிருந்து அவர்களை டெல்லிக்கு அழைத்து வந்து, பின் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளேன். இது மட்டுமல்லாமல் யாத்திரிகர்களின் உறவினர்கள் சிக்கித் தவிக்கும் பயணிகள் குறித்த தகவல் அறிந்து கொள்ள டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓர் உதவி மையத்தினை அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த உதவி மையத்தில் 011-24193455, 011-24193456 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று, சென்னையில் உள்ள நிவாரண ஆணையர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையும் யாத்திரிகர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம். உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் யாத்திரிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும், அவர்களை தமிழகம் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுவருவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
|