டெல்லி மேல்–சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவை தெரிவித்து உள்ளது. இதனால் கனிமொழியின் எம்பி கனவு நனவாகும் நிலையில் உள்ளது.
டெல்லி மேல்–சபை தேர்தலில் தமிழகத்தில் இருந்து ஆறு எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க. சார்பில் நான்கு வேட்பாளர்களும், அக்கட்சியின் கூட்டணி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளரின் வெற்றியும் ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஆறாவது எம்.பி. பதவியை பெறுவது யார் என்பதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏ.க்களும், தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஆனால் தே.மு.தி.க.வில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வந்தனர். அதனால் இந்த 7 பேரும் அ.தி.மு.க.வுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை தங்களது ஆதரவை தி.மு.க.வுக்கு தெரிவித்துள்ளன. பாமக கட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க முடியாது என கைவிரித்தது, இந்நிலையில் காங்கிரஸ் மட்டும் தனது ஆதரவை தெரிவிக்காமல் இருந்தது. நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஞாதேசிகன் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தி.மு.க.வுக்கு அளிப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இதனை அடுத்து கனிமொழியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
|