|
|||||
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. |
|||||
நீலகிரி வரையாடு திட்டத்தின் கீழ் தமிழகம், கேரள வனப்பகுதிகளில் 4 புலிகள் காப்பகங்கள், 14 வனக் கோட்டங்களில் முதல்முறையாக வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய 3 நாட்கள் வரையாடு கணக்கெடுப்பு நடக்கிறது.
தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினைப் பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தை ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் ஆண்டுக்கு இரு முறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தித் தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட வரையாட்டுக்குச் சிகிச்சை அளித்தல், வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் அறிமுகப் படுத்துதல், அச்சுறுத்தலை நிவர்த்தி செய்தல், பணியாளர்களுக்குக் கள உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளித்தல், சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல், வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளை 2022 - 2027 காலகட்டத்தில் செயல்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள 4 புலிகள் காப்பகங்கள், 14 வனக் கோட்டங்களில் வரையாடு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் ஏப்ரல் 29 முதல் மே 1ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் வன அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் 22-4-2024 அன்று நடைபெற்றது.
ஶ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் தேவராஜன் பேசியது: மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வரையாடுகள் வாழ்வதால், அவற்றுக்குத் தேசிய அளவிலான முக்கியத்துவம் இல்லை. தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு மேம்பாட்டுக்கு நீலகிரி வரையாடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நீலகிரி வரையாடுகள் உண்ணும் தாவரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இப்பகுதியில் வரையாடுகள் கணிசமாக இருப்பதால் இங்கிருந்து கணக்கெடுப்பு தொடங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகங்களில் வரையாடு அதிகமாக வாழும் 30 பகுதிகளைத் தேர்ந்தெடுத்து ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய மூன்று நாள் வரையாடு கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதில் வனத்துறை அலுவலர்கள் அனைவரும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்வில் நீலகிரி வரையாடு திட்ட இயக்குநர் கணேசன், வனச்சரகர்கள், வனப் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். |
|||||
by Kumar on 25 Apr 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|