அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால், ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை தொலைகாட்சி பெட்டிகளுக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு 35 சதவீதம் சுங்கவரியும், அந்த வரியில் 3 சதவீதம் கல்வி வரியாக கூடுதலாக விதிக்கப்படும். மொத்தத்தில் 36.05 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு முறை 26–ந் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
|