தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் தற்போது, கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மோதல் சம்பவங்களை தவிர்க்க, அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, கல்லூரி வளாக மெயின் கேட், வளாகத்தின் முன்புறம், பின்புறம், வகுப்பறைகள், வளாக பாதைகள் மற்றும் ஆய்வகங்களில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த கேமராக்களின் பதிவை கல்லூரி முதல்வர் அறையில் அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, எப்போதும் ஒரு ஊழியர் கண்காணிக்க வேண்டும். மேலும், மாணவர்களிடையே மோதல் அல்லது வெளியாட்கள் நடமாட்டம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால், கல்லூரி முதல்வர் மூலம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|