|
|||||
இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு |
|||||
இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது.
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டியில், சுமார் 200 காளை மாடுகள் பங்கு பெற்றன.
இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழு முன்னெடுத்தது.
இலங்கையில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளதா?
இலங்கையை சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகளை மேற்கோள் காட்டி ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
அதைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்தப் போட்டி சுமார் 30 ஆண்டுக் காலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. சம்பூர் கிராம பகுதிக்குள் நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டி தொடர்பில், வெளி பகுதிகளுக்குப் போதிய தெளிவில்லாது இருந்தது.
தமது கிராமத்திற்குள் காணப்படும் காளை மாடுகளைக் கொண்டு, இந்தப் போட்டிகளை சம்பூர் இளைஞர்கள் நடத்தி வந்துள்ளனர். எனினும், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து, முகாம்களில் வாழ்ந்த காலத்தில் மாத்திரம் இந்தப் போட்டிகளை நடத்த முடியவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, தாம் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் இந்தப் போட்டிகளைத் தாம் நடாத்த ஆரம்பித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
''தைப் பொங்கலை முன்னிட்டு ஏறு தழுவுதல் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த நிகழ்வைக் குறைந்தது 30 ஆண்டுகளுக்கு மேல் நடத்திக்கொண்டு வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக இந்தப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
யுத்த காலத்தின்போது இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. இடம்பெயர்ந்து வாழ்ந்ததன் காரணமாக வெளி ஊர்களில் இந்த நிகழ்வுகளைச் செய்யவில்லை. எனினும், இப்போது ஏற்பாட்டுக் குழு மற்றும் மாட்டு உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும், சம்பூர் மக்களின் ஆதரவுடனும் மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றோம்," என ஜல்லிகட்டு போட்டி ஏற்பாட்டு குழுவின் உறுப்பினரான குணராசா ராஜரூபன் தெரிவிக்கின்றார். |
|||||
by Kumar on 09 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|